உண்மையாகவே இதயத்தை தொலைத்தது உதயம் தியேட்டர்.. அடையாளம் தெரியாமல் மாறப்போகும் வரலாறு..
சென்னையின் அடையாளமாக மட்டுமல்லாமல், சினிமா கொண்டாட்டங்களுக்கு பெயர் போன உதயம் தியேட்டர் தன் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பிரபலமடைந்த தியேட்டர்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிக்கும் பெயர் உதயம் தியேட்டர். சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள இந்த தியேட்டரை தமிழ்நாட்டில் அறியாதவர்கள் என யாரும் இல்லை.
ஊரார் அறிந்த உதயம்
இந்த தியேட்டரில் படம் பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் என அனைவருக்கும் பரிட்சையமான பெயர். இந்த தியேட்டரின் பெயரை தெரிந்துகொள்ள நாம் சென்னைவாசியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
'உதயம் தியேட்டருல என் இதயத்த தொலச்சேன்' என்ற ஒற்றைப் பாடல் போதும், இந்த தியேட்டரின் புகழ் பாட. தமிழ் சினிமாவில் வெளியான எத்தனையோ படங்கள் இந்தத் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது. எத்தனையோ சினிமா வரலாற்றில் இந்த தியேட்டர் தனக்கான பக்கத்தை ஒதுக்கியுள்ளது.
சென்னையின் அடையாளம்
1983ம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் தியேட்டர் அசோக் நகரின் அடையாளமாகவே மாறிப்போனது. உதயம், சந்திரன், சூரியன், மினி உதயம் என 4 தியேட்டர்கள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கமாக சுமார் 40 ஆண்டுகள் பட்டையை கிளப்பி வந்தது. இந்த தியேட்டர் தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக மாற உள்ளது. இதனால், விரைவில் தியேட்டர் இடிக்கப்படும் என்ற செய்தி சில மாதங்களாகவே பரவி வந்தது.
இயக்கத்தை நிறுத்திய உதயம்
இந்நிலையில், வதந்திகள் அனைத்தும் உண்மையானது. உதயம் தியேட்டர், கடந்த வெள்ளிக் கிழமை முதல் திரைப்பட காட்சிகளை ஒளிப்பரப்புவதை நிறுத்தி உள்ளது. இது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு மட்டும் இல்லாமல் பல நடிகர்களின் திரைப்பட வெற்றிகளைக் கண்ட தியேட்டர் இது.
பல ரசிகர்களும் தங்கள் ஆஸ்தான கதாநாயகனுக்காக விசில்களை எழுப்பியும், கொண்டாட்டத்தில் இறங்கிய தியேட்டர் அது. அப்படிப்பட்ட தியேட்டர் தற்போது அதன் செயல்பாட்டை நிறுத்தி இருப்பது ஒரு வரலாற்றின் இறுதி காலமாக மாறியுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்ன பிரச்சனை?
சுமார், 62,400 சதுர அடி (1.3 ஏக்கர்) பரப்பளவில் கட்டப்பட்ட இந்த திரையரங்கத்திற்கு மொத்தம் 53 பேர் பங்குதாரர்களாம். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த 2009ம் ஆண்டே இந்த திரையரங்கத்தை விற்க முடிவு செய்திருந்தனராம். பின் கடந்த 2012ம் ஆண்டு பங்குதாரர்களில் ஒருவரான பரமசிவன் பிள்ளை 80 கோடி ரூபாய்க்கு இந்த திரையரங்கத்தை ஏலத்தில் சொந்தமாக்கி இருக்கிறார்.
இவர், சென்னையில் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் வந்துவிட்டது. அதனால் உதயம் தியேட்டருக்கு வரும் லாபமம் குறைந்து வருகிறது எனக் கூறி, இந்த தியேட்டரை அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற எண்ணினாராம். இதனால், இந்த தியேட்டர் விரைவில் இடிக்கப்பட்டு, 25 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடம் வர இருக்கிறது எனக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்மை என்ன?
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் தான் உதயம் தியேட்டரில் திரையிடப்படும் கடைசி படம். இதன் பின் எந்த திரைப்படங்களும் ஓடாது. வேட்டையன் படத்தின் வெற்றியைப் பொறுத்து தியேட்டர் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது. வேட்டையன் திரைபப்ட வெளியீட்டிற்குப் பின், சில திரைப்படங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம். உதயம் தியேட்டரை மூடுவது குறித்து முடிவு செய்ய இன்னும் சில மாதங்கள் ஆகும். அதனால், அதுவரை தொடர்ந்து திரைப்படங்கள் வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
நிலைமை அப்படி இருக்க, தற்போது உதயம் தியேட்டர் அதன் செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தி தற்போது அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அந்தப் பகுதியில் தற்போது சினிமா ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என மக்கள் பலரும் கூறி வருகின்றனர்.
டாபிக்ஸ்