Bagheera Review: பயமுறுத்துகிறதா? பதுங்கிப் போனதா? ‘பஹீரா’ அசத்தலான விமர்சனம்!
தனக்கு ஒரு வித்தியாசமான படம் வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான கதையை தேர்வு செய்திருக்கிறார் பிரபு தேவா. ஆனால், உண்மையில் அது வித்தியாசமாக இருந்ததா?
தொடர்ந்து குழந்தைகளை குறி வைத்து படங்களை கொடுத்து வந்த பிரபுதேவா, இந்த முறை பெண்களை குறி வைத்து நடித்திருக்கும் படம் தான் பஹீரா. பெண்களை குறி வைத்து என்றால், அவர்களை கவரும் படம் என நினைத்து விட வேண்டாம், பெண்களை குறி வைத்து கொலை செய்யும் படம்.
ட்ரெண்டிங் செய்திகள்
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் பஹீரா
இந்தப்படத்தில் பிரபுதேவாவுடன் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கணேசன் சேகர் இசையமைத்து இருக்கிறார்.
கதையின் கரு:
ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை காதலித்து ஏமாற்றும் பெண்களை டெடி பியர் ஒன்று தொடர்ந்து கொடூரமாக கொலை செய்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே நான்கு பெண்களை தன்னுடைய காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்து கொள்ளும் பஹீரா அவர்களையும் கொலை செய்ய முடிவெடுக்கின்றான். பஹீரா ஏன் இப்படி கொலை வெறிபிடித்து அலைகிறான்? அதற்கான பின்னணி என்ன? யார் அந்த டெடிபியர்? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே பஹீரா படத்தின் கதை!
சைக்கோ கொலைகாரனாக வரும் பிரபுதேவா பெர்ஃபாமன்ஸில் பின்னி பெடல் எடுக்கிறார். படத்தில் அவருக்கு பல்வேறு வேரியேஷன்கள்; அனைத்திலும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு அக்மார்க் தரம்.
அவரின் காதலிகளாக அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி என பலர் வந்தாலும் அமைரா தஸ்தூர் மட்டுமே மனதில் நிற்கிறார். பிற அனைவரும் காதலிகள் என ஏதோ வந்து போகிறார்கள்.
ஆதிக்ரவிச்சந்திரனின் பழைய படங்களில் இருந்த கிளாமர் வெப்பம் இந்தப்படத்தில் கொஞ்சம் தணிந்திருக்கிறது. முதல் பாதியில் ரசிகர்களின் சுவாரஸ்சியத்தை கூட்ட, நான் லீனியர் பாணியில் கதை சொன்னாலும், ஒருக்கட்டத்தில் அது நமக்கு சலிப்பை மட்டுமே தந்தது.
சரி இவ்வளவு கொடூரமாக கொலை செய்கிறான்.. அப்படியானால் அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கும் என்று இரண்டாம் பாதியை பார்த்தால், அந்தக்காரணமும் வலுவாக இல்லை. இதனால் பிரபுதேவா என்னதான் முக்கி முக்கி நடித்தாலும், படம் கையை விட்டு சென்றுவிட்டது.
கிட்டத்தட்ட க்ளைமேக்ஸ் வரும் போதே ரசிகர்கள் எப்படா படத்தை முடிப்பீங்க என்ற மோடிற்கு வந்து விட்டனர். கணேசன் சேகரின் பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்க வில்லை என்றாலும் பின்னணி இசைக்கு பலம் சேர்த்து இருக்கிறார். அதிலும் சில இடங்களில் அதிக இரைச்சல். பிரபுதேவாவை நம்பி மட்டுமே செல்லாமல் இருந்திருந்தால் ‘பஹீரா’ நிச்சயம் மிரட்டி இருப்பான்.
டாபிக்ஸ்