Ayodhi Review: பலமா? பலவீனமா? அயோத்தி படத்தின் அக்மார்க் ‘விமர்சனம்’ இதோ!
Ayodhi First Review: சுமாரான கதையை சூப்பராக மாற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மந்திரமூர்த்தி. அது வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் பார்ப்போர் மனநிலையை பொருத்தது!
பரபரப்பான பெயருடன், படபடப்பான கதைக்களத்துடன் நாளை வெளியாகிறது அயோத்தி. இந்தப்படமானது இன்று செய்தியாளர்களுக்கான சிறப்பு முன்னோட்ட காட்சிபடுத்தப்பட்டது; அப்படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிடுகிறது இந்துஸ்தான் தமிழ்!
ட்ரெண்டிங் செய்திகள்
எங்கும் எதிலும் தான் வைத்ததே சட்டம் என்ற ஆணாதிக்க மனநிலையோடு இருக்கும் தீவிர ராம பக்தரான பல்ராம் (யஷ்பல் ஷர்மா) தன்னுடைய மனைவி, மகள், மகன் என அனைவரையும் கூட்டிக்கொண்டு ஒரு தீபாவளியன்று இராமேஸ்வரத்திற்கு பயணம் செய்கிறார்.
மதுரைக்கு இரவில் வந்திறங்கும் அந்த குடும்பம் கார் ஒன்றை வாடகைப்பிடித்து இராமேஸ்வரத்திற்கு செல்கிறது; செல்லும் வழியில் அந்தக்கார் விபத்துக்குள்ளாகிறது. இதில் பல்ராமின் மனைவியான (ஜானகி) இறந்து போகிறார்.
விபத்தில் இறக்கும் நபர்களின் உடலை பிரேதபரிசோதனைக்கு உட்படுத்துவது வழக்கமாக இருக்கும் நிலையில், ஷர்மா தங்கள் கலாசாரப்படி உடலை பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறார். இறுதியாக ஜானகி உடல் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா? இவர்களுக்கு உதவ வந்த சசிகுமாரின் நிலை என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே அயோத்தி படத்தின் கதை!
வடமாநில இந்துவாக நடித்திருக்கும் யஷ்பல் ஷர்மா, அவரது மனைவி ஜானகியாக நடித்திருக்கும் அஞ்சு அஸ்ரானி, இவர்களது மகள் ஷிவானியாக நடித்திருக்கும் ப்ரீத்தி ஆகிய மூன்று பேரின் நடிப்புதான் படத்தின் அச்சாரம்.
குறிப்பாக அறிமுக நடிகை ப்ரீத்தி நடிப்பில் அதகளப்படுத்துகிறார். எல்லா படங்களிலும் யாரோ ஒருவருக்கு உதவும் கதாபாத்திரமாக வரும் சசிகுமாருக்கு இந்தப்படத்திலும் அதே வேடம்; அது சசிகுமார் என்பதை தவிர அந்தக்கதாபாத்திரம் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தாதது படத்தின் பலவீனம்.இவர்களை தாண்டி படத்தில் வரும் எந்த கதாபாத்திரங்களும் (புகழ் உட்பட) மனதில் நிற்கவில்லை.
இயக்குநர் மந்திரமூர்த்தி படத்தில் எழுதிய ஒவ்வொரு காட்சியிலும் எமோஷன் நிரம்பி வழிகிறது; அதே போல ஒவ்வொரு கதாபாத்திரடமும் அவர் நடிப்பை வாங்கியிருக்கும் விதமும் நன்றாக இருந்தது.
ஆனால் அது மட்டும் ஒரு படத்திற்கு போதாது அல்லவா?.. அதையும் தாண்டி படத்தில் சசிகுமார் என்ற கதாநாயகன் இருக்கிறார் என்றிருக்கும் பட்சத்தில், அவரை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு படத்தில் போதுமான ஸ்பேஸ் உருவாக்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி இங்கு எழுகிறது. காரணம், படத்தின் க்ளைமேக்ஸில் மதம் கடந்து மனிதமாக மாறி நிற்கும் காட்சி ஒன்றில் மட்டுமே சசிகுமார் ஏற்றிருக்கும் அப்துல் காலிக் கதாபாத்திரத்தை உணரமுடிகிறது.
படத்தின் பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்க வில்லை என்றாலும் பின்னணி இசையில் முடிந்த மட்டும் முயற்சி செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ரகுநந்தன்; காசி தொடங்கி இராமேஸ்வரம் வரை பயணிக்கும் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா கண்கள் காட்சிகளை நன்றாகவே காட்சிப்படுத்தி இருக்கிறது. எமோஷனில் செலுத்திய கவனத்தை கொஞ்சம் திரைக்கதையிலும் செலுத்தியிருந்தால் ‘அயோத்தி’ கவனிக்கப்பட்டிருக்கும்!
டாபிக்ஸ்