43 Years of Kazhugu: போலி சாமியாரின் லீலைகளைத் தோலுரித்தால் ரஜினியின் 'கழுகு'!
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான கழுகு திரைப்படம் 43 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது தொடர்பான கட்டுரை..

1981ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ரதி அக்னிஹோத்ரி, சுமலதா நடிப்பில் உருவான திரைப்படம், கழுகு. இந்தப் படத்துக்குண்டான கதை, வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுத, ரஜினியின் ஆஸ்தான கமர்ஷியல் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். இப்படத்திற்குண்டான இசையை இளையராஜா அமைத்து இருந்தார். இப்படத்தை பஞ்சு அருணாச்சலத்தின் மனைவி மீனா பஞ்சு அருணாச்சலம் தயாரித்து இருந்தார்.
கழுகு திரைப்படத்தின் கதை என்ன?: ஒரு ஊரில் பெரிய வைர வியாபாரியாக இருப்பவர், சத்தியமூர்த்தி(தேங்காய் சீனிவாசன்). அவரது இளைய சகோதரர் ராஜா(ரஜினி). சத்யமூர்த்திக்கு ராதா - சித்ரா என்ற இருசிறுமிகள் மகளாக உள்ளனர். அவரது மனைவி மரித்துவிட்டார். சத்யமூர்த்தி இறை நம்பிக்கையாளர். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஒரு போலி சாமியார், அவரது வீட்டினுள் நுழைந்து, சத்யமூர்த்தியின் புதையல் அறை வரை சென்று, லாக்கர் பற்றிய ரகசியத்தை அறிந்துகொள்கிறார். அவ்விடம் வைக்க ஒரு புனிதத் தாள் போன்ற ஒன்றைக் கொடுத்துவிடுகிறார்.
ராஜா சந்தேகித்தபடி, அந்த போலி சாமியார் வீட்டில் திருட சிலரை இரவில் அனுப்புகிறார். வீட்டின் அசாதாரணமான சூழல் அறிந்து ராஜா, அவர்களுடன் அடிதடி மல்லுக்கட்டில் ஈடுபட்டு, வீட்டில் இருந்து கொள்ளையர்களைத் துரத்தி அடிக்கிறார். சாமியார் போலியானவர் என்பதை ராஜா சொல்ல,அதை மறுக்கிறார்,சத்யமூர்த்தி. மேலும் புனிதத் தாள் வீட்டில் இருப்பதால் தான், பணம் பாதுகாக்கப்பட்டது என நம்புகிறார், சத்யமூர்த்தி.
அதன்பின் ராஜாவுக்கும் ஹேமாவதி(ரதி அக்னிஹோத்ரி)-க்கும் இடையே தமிழ் சினிமாவுக்கே உண்டான மோதல் பாணியில் ஆரம்பித்து இறுதியில், காதலில் முடிவடைகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் மனதார காதலித்து திருமணம்செய்துகொள்கின்றனர்.
அதன்பின் தேனிலவுக்கு தம்பதியரான ராஜா, ஹேமா இருவரும் புறப்படுகின்றனர். கூடவே, ராஜாவின் நண்பர்களும் சேர்ந்துகொள்கின்றனர். அப்போது ஒரு மலைக் கிராமத்தில் தங்குகின்றனர். அப்போது கிராமவாசி வசந்தி(வனிதா கிருஷ்ணசந்திரன்), காய்கறிகளைப்பெறுகின்றனர். அதன்பின் சில நாட்கள் கழித்து, இரவில் ராஜா குழுவினருக்கு ஒரு மேளச்சத்தம் கேட்கிறது. அங்கு சென்று ராஜா பார்க்கும்போது, வசந்தி நரபலி கொடுக்கப்படுகிறாள். இதனைக் கண்ட ராஜா அலறியடிக்கிறார். உடனே, ஒரு மர்மக் கும்பலால் துரத்தியடிக்கப்படுகிறார். இறுதியில் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, நடந்ததைச் சொல்கிறார், ராஜா. ஆனால், போலீஸோ வசந்தி வாழ்ந்ததற்கான எந்த ஒரு தடயமோ குறிப்போ இல்லவே இல்லை என்கிறார். இது ராஜாவுக்குச் செம ஷாக் ஆகிறது.
அப்போது அக்கும்பலிடம் மாட்டிய ராஜாவின் நண்பர் ஒருவர் உயிரிழக்கிறார். பின் தானே களத்தில் இறங்கும் ராஜா, துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார். அந்த பயணத்தில் இறுதியில் ராஜரிஷி(சங்கிலி முருகன்) என்னும் சாமியார், ஒரு பெரிய கொள்ளைக்காரன் என்னும் தகவல் கிடைக்கிறது. அவர் ஆனந்த ரசம் என்னும் ஒரு திரவத்தைக் கொடுத்து, பணக்காரர்களுக்குக் கொடுத்து, அதை தனது ஆட்களை வைத்தே கொள்ளையடித்து அபகரிப்பது தெரியவருகிறது. அதில் ராஜாவின் அண்ணன் சத்யமூர்த்தியும் சிக்கியுள்ளார்.
இறுதியாக தனது அண்ணன் சத்யமூர்த்தியின் மகளான சிறுமியை நரபலி கொடுக்க ராஜரிஷி முயற்சிக்கிறார். அதைக் கண்டறியும் ராஜா, அவளைக் காப்பாற்றிக்கொண்டு, தப்பி, பேருந்தில் பயணிக்கிறார். இறுதியாக, ராஜரிஷி என்னும் போலி சாமியாரையும், அவரது கொள்ளைக் கும்பலையும் போலீஸாரிடம் பிடித்துக் கொடுக்கிறார், ராஜா. இறுதியாகப் படம் முடிவடைகிறது.
இப்படத்தில் ராஜாவாக நடிகர் ரஜினிகாந்தும், சுமாவாக சுமலதாவும் திருப்பத்தை ஏற்படுத்தும் வசந்தியாக வனிதா கிருஷ்ணசந்திரன் நடித்துள்ளார்.
படம் வெளியாகி 43ஆண்டுகளை நிறைவுசெய்தாலும், இளையராஜாவின் இசையில் பொன்னோவியம் கண்டேனம்மா, ஒரு பூ வனத்தில ஆகிய இரு பாடல்கள் அனைவரையும் இப்போதும் ஈர்க்கிறது.
வெளியானபோது வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், நரபலி - வசியம் என்னும் புதிய கதைக்களத்தைக் கொண்டு விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட படம் என்பதால், இப்போது படம் பார்க்க ஆர்வத்தைத் தூண்டுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்