'தனிமையிலே இனிமை காண முடியுமா’.. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்திய பாடகர் ஏ. எம். ராஜா நினைவு நாள் இன்று!
A.M.Raja Memorial Day : தேன்நிலவு திரைப்படத்தில் ஏ எம் ராஜா இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் அவ்வளவு அருமையாக இருக்கும். குறிப்பாக நிலவும் மலரும் பாடுது, பாட்டு பாடவா பார்த்துப் பேசவா, ஓஹோ எந்தன் பேபி, சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் போன்ற அற்புதமான பாடல்களை கொடுத்திருப்பார் ராஜா.

இசை ஆளுமை ஏ.எம்.ராஜா ஒன்றாம் தேதி ஜூலை மாதம் 1929 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பள்ளிப்படிப்பை முடித்த பின் பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரி காலங்களில் இவர் எழுதி இசையமைத்த பாடல் வானொலியில் ஒளிபரப்பானது. இந்த பாடலை கேட்ட எஸ் எஸ் வாசன் சம்சாரம் என்னும் படத்தில் ஏ எம் ராஜாவிற்கு பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார்.
இல்லற ஜோதி படத்தில் ஜிக்கியுடன் கலங்கமில்லா காதல் பாடலை இணைந்து பாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குலேபகாவலி படத்தில் ஏ எம் ராஜா, ராஜாஜிக்கு பாடிய பாடல் ஆன மயக்கும் மாலை பொழுதே பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தன்னுடன் இணைந்து பாடிய ஜிக்கியை திருமணம் செய்து கொண்டார்.
மிஸ்ஸியம்மா படத்தில் ஏ எம் ராஜா பாடிய பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக வாராயோ வெண்ணிலாவே என்ற பாடல் இன்றும் அனைவரும் முணுமுணுக்கும் பாடலாகவே உள்ளது. அப்பாடலை அவ்வளவு அருமையாக பாடியிருப்பார்.