பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. த.வெ.க.வில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகி
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. த.வெ.க.வில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகி பற்றிப் பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய், 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய்.
இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான ‘தளபதி மக்கள் இயக்கம்’ அப்படியே, அவரது கட்சியாக மாறியது. அதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில், உறுப்பினர் சேர்க்கையில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு வைத்து வேலை செய்துவருகின்றனர், அக்கட்சி நிர்வாகிகள்.
மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக , ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்னும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் தமிழக வெற்றிக் கழகம், தனக்கான உறுப்பினர் சேர்க்கையை 2024ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது.
வி.சி.க.வுக்கு தொடர்ந்து வலை:
தொடங்கிய மூன்றே நாட்களில் அந்தக் கட்சியில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தவிர, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் மாநிலக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழத்தின் தலைவருமான விஜய்யும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
அடுத்து கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த பகுதிக்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார்.
மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார்.
அதன் அடுத்தகட்டமாக, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிமுகம் செய்துவைத்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான பாடலையும் வெளியிட்டார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் உறுதி செய்தார்.
அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக அறிவித்த விஜய்:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் வி.சாலையில் நடைபெற்றது. அங்கு த.வெ.க கட்சியின் தலைவராக பேசிய விஜய் அரசியல், பொருளாதார, சமநிலையை உருவாக்கணும் என்றால், புரொபோசல் ரெபிரசன்டேஷன் (முன்மொழிவு பிரதிநிதித்துவம்) ஆக இருக்கிற சாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தணும் என்றும், அப்போதுதான், எல்லாருக்கும் எல்லாம் சமநிலையாகக் கிடைக்கும் என்றும்; அது தான் சரியான சமூக நீதிக்கான அணுகுமுறையாகவும் இருக்கும் என்றும் கூறினார். மேலும், அம்பேத்கரை தன் கட்சியின் கொள்கை வழிகாட்டியாகவும் விஜய் அறிவித்தார்.
புத்தக வெளியீட்டு விழாவில் விமர்சனம்:
அடுத்து விகடன் பிரசுரம் சார்பில் நடந்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விஜய், விசிக தலைவர் திருமாவுக்கு திமுக கொடுத்த அழுத்தத்தால் தான்,அவர் இந்த மேடையில் இல்லை எனக் குற்றச்சாட்டை வைத்தார். இதனால் தமிழக வெற்றிக்கழகம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து, தொடர்ச்சியாக லைம்லைட்டிலேயே அக்கட்சியின் பெயர் பல்வேறு செய்திகள் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளுக்கு கறுப்புப் புள்ளி வைக்கும் வகையில், ஒரு செய்திவெளியாகியுள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தேடப்பட்டு, வந்த அல்-அமீன் என்பவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் செயல்பட்டு, வந்த அவரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.