ஒபாமா டிக் அடித்த முதல் படம்..கிராண்ட் பிரி விருது வென்று சாதனை.. ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?
‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மும்பையைச் சேர்ந்த இயக்குநர் பாயல் கபாடியா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 21ம் தேதி வெளியான திரைப்படம் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்'. மும்பையில் வசிக்கும் செவிலியர்களின் வாழ்க்கையை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப்படத்தில் கனி குஸ்ருதி, சாயா கதம், திவ்ய பிரபா, ஹிருது ஹாரூண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி ஓர் விருதுக்குப் போட்டியிட்டது. இதன் மூலம், இந்தியா சார்பில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாம் டி ஓர் போட்டியிட்ட முதல் திரைப்படமாக ’ஆல் வி இமேஜின் அஸ் லைட்' மாறியது.
கூடவே, அந்த விழாவின் 2-வது உயரிய ‘கிராண்ட் பிரி’ விருதை வென்றது. அதன் வாயிலாக 'கிராண்ட் பிரி' விருதை வென்ற முதல் இயக்குநர் என்ற பெருமையை பாயல் கபாடியா பெற்றார்; இதனைதொடர்ந்து அந்தப்படம் குறித்தான எதிர்பார்ப்பு மக்களிடத்தில் மேலோங்கியது. முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2024ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில், தனக்கு பிடித்தமானவற்றில் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்திற்கு முதலிடத்தை கொடுத்திருந்தார்.
கோல்டன் குளோப் விருதுக்கும்
82-வது கோல்டன் குளோப் விருதுக்கும் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த விழா அடுத்த ஆண்டு ஜன. 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் உருவான சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் இருந்து கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இயக்குநர் என்ற பெருமையை பாயல் கபாடியா பெற்றுள்ளார். இவ்வளவு பெருமைகளை பெற்றுள்ள இந்தத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் இந்தப்படத்தை வெளியிடுகிறது.
கதைக்களம்
மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர்களான பிரபாவும் (கனி குஸ்திரி), அனுவும் (திவ்யபிரபா) ஒரே வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஜெர்மனிக்கு போன கணவர் மீண்டும் திரும்பாத நிலையில் பிரபாவும், வீட்டின் கல்யாண பேச்சு தொந்தரவால், அவர்களிடம் பேச விரும்பாத நிலையில் அனுவும், காலத்தை கடத்தி சென்று கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே அனு, ஷியாஸ் (ஹ்ருது ஹாரூண்) என்ற இளைஞரை காதலிக்கிறார். இது பிரபாவிற்கு ஒரு கட்டத்தில் தெரிய வர, தன்னுடைய தீர்க்கப்படாத தாபத்தின் வெளிப்பாட்டை அனுவிடம் கோபமாக காண்பிக்கிறார். இதற்கிடையே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முடியாமலும், அதற்கு மாற்றாக வேறு நிலத்தை வாங்க முடியாமலும் தவித்துக்கொண்டிருக்கும் பார்வதி (சாயா கடம்) தனது சொந்த ஊரான ரத்னகிரிக்கே செல்ல முடிவெடுக்கிறார்.
அவருடன் அனுவும், பிரபாவும் செல்ல, கூடவே ஷியாஸூம் பயணிக்கிறான். அனுவும்,ஷியாஸும் தனிமையில் தங்களது தாபத்தை தீர்க்கும் போது, பிரபா அதனை பார்க்கிறாள். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை!
ஆண் பெண் தனிப்பட்ட உறவு, பிழைப்பு எதற்காக உள்ளிட்ட பல அம்சங்களை ஆராந்திருப்பது இந்தப்படத்தில் கவனம் ஈர்க்கும் விஷயங்களாக பார்க்கப்படுகின்றன.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்