பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்ட்டுகள்.. திக்குமுக்காடும் திருவாரூர் விவசாயிகள்.. ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்ட்டுகள்.. திக்குமுக்காடும் திருவாரூர் விவசாயிகள்.. ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக!

பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்ட்டுகள்.. திக்குமுக்காடும் திருவாரூர் விவசாயிகள்.. ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக!

HT Tamil HT Tamil Published Jun 27, 2025 01:08 PM IST
HT Tamil HT Tamil
Published Jun 27, 2025 01:08 PM IST

ஒரு கிலோ பருத்தி பஞ்சு சாகுபடி செய்ய செலவு சுமார் ரூ. 50 ஆகிறது என்றும், சேகரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கிலோ ஒன்றுக்கு ஊதியம் ரூ. 15 என குறைந்தபட்சம் ஒரு கிலோ பருத்தி பஞ்சின் அடக்க செலவு மட்டும் ரூ. 65 ஆகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்ட்டுகள்.. திக்குமுக்காடும் திருவாரூர் விவசாயிகள்.. ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக!
பருத்தி ஏலத்தில் உள்ளூர் ஏஜெண்ட்டுகள்.. திக்குமுக்காடும் திருவாரூர் விவசாயிகள்.. ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக!

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ‘திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பருத்தி இளம் செடிகளாக இருந்த நிலையில் ஏப்ரல் மே மாதங்களில் இரண்டுமுறை பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டது. எனவே, விவசாயிகள் கூடுதல் செலவு செய்து எஞ்சிய பருத்தியை காப்பாற்றி சாகுபடி செய்துள்ளனர்

கடந்த 15 தினங்களாக பருத்தி பஞ்சு சேகரிப்பு பணிகளை மேற்கொண்டு, பருத்தி பஞ்சு திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டு விடப்படுகிறது.

குறைபட்ச ஏல விலை

தமிழகம் முழுவதுமே இந்த ஆண்டு பருத்தி சாகுபடி எதிர்பார்த்த அளவு இல்லை. எனவே தாங்கள் உற்பத்தி செய்த பஞ்சுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்த நேரத்தில், கடந்த ஆண்டு சாசரியாக கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய்க்கு ஏலம் போன பருத்தி பஞ்சின் விலை, இந்த ஆண்டு மிகவும் குறைந்து அதிகபட்சமாக கிலோ ரூ 53-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 40-க்கும் மட்டுமே ஏலம் எடுக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ பருத்தி பஞ்சு சாகுபடி செய்ய செலவு சுமார் ரூ. 50 ஆகிறது என்றும், சேகரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கிலோ ஒன்றுக்கு ஊதியம் ரூ. 15 என குறைந்தபட்சம் ஒரு கிலோ பருத்தி பஞ்சின் அடக்க செலவு மட்டும் ரூ. 65 ஆகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, பருத்தி பஞ்சு ஒரு கிலோவிற்கு ரூ 75-க்கு குறையாமல் ஏலம் எடுத்தால் மட்டுமே செலவிற்கு கட்டுப்படியாகும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இடைத்தரகர்கள் தலையீடு

பொதுவாக ஒழுங்குமுறை விற்பனை நிலையம் மூலம் நடைபெறும் இந்த பருத்தி ஏலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள பஞ்சு மில் நிறுவனங்களில் இருந்து ஏலத்தில் பங்கு கொள்வார்கள். ஆனால், விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியூர் வியாபாரிகளை இந்த ஏலத்தில் பங்குகொள்வதற்கு ஒழுங்குமுறை விற்பனை நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், திருவாரூர் மற்றும் அதைச் சுற்றி 50 கிலோ மீட்டர் சுற்றுளவில் உள்ள உள்ளூர் முகவர்கள் இடைத்தரகர்கள்) மட்டுமே தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு பருத்தி பஞ்சு ஏலத்தில் கலந்துகொள்கின்றனர் என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால்தான், அவர்கள் உற்பத்தி செய்த பருத்தி பஞ்சுக்கு உரிய விலை கிடைக்காததோடு, உற்பத்திச் செலவைவிட பஞ்சு விலை குறைவாகப் போவதால் நஷ்டத்திற்குள்ளாகிறோம் என்று விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டனர்

ஏற்கனவே கடந்த நான்காண்டுகளாக தங்களது நெல் பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது மிகக் குறைந்த அளவு பயிர் காப்பீடும், தேசியப் பேரிடர் நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ 13.500/-ல் இருந்து ரூ 17,000/-ஆக மத்திய அரசு உயர்த்திய நிலையில், இந்த விடியா திமுக அரசு ஒரு ஹெக்டேருக்கு ரூ.13.500/- மட்டுமே பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு வழங்கியதால், மிகவும் அவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கோடைப் பயிரான பருத்தி பஞ்சு விளைவிப்பதன் மூலம் தங்களது நஷ்டத்தை ஓரளவு சரிகட்டலாம் என்று நினைத்த விவசாயிகளுக்கு இந்த ஏலம் விலை பாதிப்பை உருவாக்கி இருக்கிறது.

இதன் காரணமாக திருவாரூரில் ஜூன் 24-ஆம் தேதி ஏலத்தை தவிர்த்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதை சரிசெய்வதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையிலும் அடுத்த நாளும் அதே வாடிக்கையாக மாற ஜூன் 25 அன்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

எனவே, திருவாரூர் மாவட்ட பருத்தி விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க, பருத்தி பஞ்சுக்கு உரிய விலை கிடைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டத்தின் சார்பாக 1.7.2025 - செவ்வாய் கிழமை காலை 9.30 மணி அளவில், திருவாரூர் இரயில் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. R. காமராஜ், M.L.A., அவர்கள் தலைமையிலும், கழக அமைப்புச் செயலாளர்களான டாக்டர் K. கோபால், Ex. M.P.. திரு. சிவா.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒகை-குடவாசல், மன்னார்குடி, நன்னிலம் பூந்தோட்டம், திருத்துறைப்பூண்டி திருவாரூர், வடவூர் வலங்கைமான் மற்றும் கொரடாச்சேரி ஆகிய 8 இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைச் சார்ந்த விவசாயப் பெருமக்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், நகர, பேரூராட்சி மன்ற இந்நாள் முன்னாள் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.