Meera Krishnan: விளக்கெண்ணெய் தேய்த்து உருண்டாலும்.. 'விஜய்க்கு அம்மாவாக நடிக்கலனு யாரும் இங்க' - மீரா கிருஷ்ணன்
Meera Krishnan: அந்த கேரக்டரில் என்னால் நடிக்க முடியவில்லை. ஆனால், அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்று ஒரு நாளும் வருத்தப்பட்டதே கிடையாது. - மீரா கிருஷ்ணன்!

Actress Meera Krishnan: கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக வந்த கேரக்டரில், நடிக்காமல் போனதை நினைத்து தான் கவலைப்படவில்லை என்று நடிகை மீரா கிருஷ்ணன் மிஸ் வாவ் தமிழா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்
இதுகுறித்து அவர் பேசும் பொழுது,"கில்லி படத்தில் முதலில் என்னை தான் விஜயின் அம்மா கேரக்டருக்கு அழைத்தார்கள். ஆனால், நான் அப்போது சீரியலில் கொஞ்சம் பிஸியாக இருந்தேன். அதனால் அந்த கேரக்டரில் என்னால் நடிக்க முடியவில்லை. ஆனால், அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்று ஒரு நாளும் வருத்தப்பட்டதே கிடையாது. யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது அவர்களுக்கு கிடைக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.
கனவில் கூட நினைக்கவில்லை
நமக்கான ஒவ்வொரு அரிசியிலும், நம் பேர் எழுதி இருக்கும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நான் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. நான் வீணை வாசித்து, கச்சேரி செய்வேன் என்றும் நினைத்து பார்த்ததில்லை நான் நினைக்காததெல்லாம் எனக்கு நடக்கும் பொழுது, நான் ஏன் எனக்கு அது கிடைக்கவில்லையே, இது கிடைக்கவில்லையே என்றெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
வாழ்க்கையில் வருவதை மனமுவந்து ஏற்றுக்கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும். இதுதான் இந்த குட்டி வாழ்க்கையின் சூத்திரம். ஐயோ, அவன் நன்றாக இருக்கிறானே, இவன் நன்றாக இருக்கிறானே என்றெல்லாம் நினைக்கவே கூடாது. விளக்கெண்ணையை தேய்த்து உருண்டாலும், உடம்பில் ஒட்டுகிற மண்தான் ஒட்டும்.
25 வயதிலேயே நான் அம்மாவாகி விட்டேன்.
ஆகையால் கிடைப்பதை எடுத்துக் கொண்டு, வாழ்க்கையை ஜாலியாக கழிக்கலாம். 25 வயதிலேயே, நான் அம்மாவாகி விட்டேன். இன்று பலரும் அதிக வயதிலும் ஹீரோயினாக நடிக்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நான் யார் என்பது என்னுடைய குழந்தைகளுக்கு தெரிந்தால் போதும், என்னுடைய கணவருக்கு தெரிந்தால் போதும், என்னுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்தால் போதும், நான் இளமையாக இருந்து, அதை வெளியே காண்பித்து, என்ன செய்யப் போகிறேன் சொல்லுங்கள். எல்லோரும் வேலை பார்ப்பது போல நான் நடிப்பில் என்னுடைய வேலையை பார்க்கிறேன். அதை நான் மிகவும் பெரிதாக பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது. அதனால் எனக்கு இரண்டு கொம்பு ஒன்றும் முளைக்கவில்லை. நான் என்னுடைய வேலையைபார்க்கிறேன் அவ்வளவுதான்" என்று பேசினார்.
முன்னதாக, கில்லித்திரைப்படம் உருவான விதம் குறித்து அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேசி இருந்தார். அந்த பேட்டி
ஏ எம் ரத்தினம்தான் சரியாக இருப்பார்
அவர் பேசும் போது, “கில்லி திரைப்படம் தெலுங்கில் வெளியான ஒக்கடு திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அந்தத் திரைப்படத்தை விஜயும், அவரது அப்பாவான எஸ்ஏசியும் பார்த்தார்கள். அப்போது அந்த படம் விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து விஜய் அவரது அப்பாவிடம், ஒக்கடு உரிமையை நாம் வாங்கிவிடலாம் என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில்தான் எஸ்.ஏ.சி இந்த படத்தில் விஜயை சரியாக பொருத்தி, பிரமாண்டமாக எடுப்பதற்கு ஏ எம் ரத்தினம்தான் சரியாக இருப்பார் என்று கருதி, என்னை அழைத்தார்.
படத்தை பார்த்த பொழுது, படம் மிகவும் அதிக பொருட்செலவுடன் எடுக்கப்பட வேண்டிய படம் என்பதை நான் கணித்து விட்டேன் இதையடுத்து நான் எஸ்.ஏ.சி சாரிடம், விஜய் இந்த படத்தில் நடிக்கும் பொழுது, படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஆனால், இந்த படத்தின் வெற்றி, அவரது அடுத்த படத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பது தெரியும். ஆகையால், நீங்கள் எனக்கு இந்த படம் செய்தால், இரண்டு படங்களுக்கான கால்சீட்டை தாருங்கள்.. என்று கூறி, முடிவை நாளை சொல்கிறேன் என்று சொல்லி வந்தேன்.
மிகப்பெரிய செட்
நான் ஏற்கனவே தரணியை வைத்து தூள் என்ற படத்தை அப்போது எடுத்திருந்தேன். ஆகையால், அடுத்த திரைப்படத்திலும் அவருடன் இணைய வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால்தான் தரணியை அழைத்து, அந்த படத்தை இயக்க வைத்தேன். கில்லி படத்தை பொருத்தவரை, தெலுங்கில் அந்த திரைப்படம் கிளாஸாக இருக்கும். தமிழில் மாஸாக இருக்கும்.கில்லி திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே மாஸாக இருக்கும். படத்தில் இடம்பெற்ற நடிகர் விஜயின் வீடும், அதை சுற்றி இருந்த இடங்களையும், நாங்கள் மிகப்பெரிய செட்டாக வடிவமைத்தோம். மொத்தம் 65,000 sqft -ல் மொட்டை மாடி போன்று அதனை நாங்கள் வடிவமைத்தோம்.
அது கடலோரம் இருக்க வேண்டும், பின்னால் லைட் ஹவுஸ் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டதால், நாங்கள் அதனை மகாபலிபுரத்தில் வைத்து எடுத்தோம். அப்போது அந்த செட்டும் ரெடியாகவில்லை. இந்த நிலையில்தான் வீட்டுக்குள் எடுக்க வேண்டிய காட்சிகளை நாங்கள் எடுத்தோம். அப்போதுதான் விஜயின் அம்மாவாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற கேள்வி எழுந்தது.
தெலுங்கில் மகேஷ்பாபுவின் அம்மாவாக நடித்த கீதா, அப்போது அமெரிக்காவில் இருந்தார். அதனால், அவரால் முடியாது என்று சொல்லிவிட்டார். அதனை தொடர்ந்து நடிகை சீதாவை நடிக்கை வைக்க முயற்சி செய்தோம். தேதி பிரச்சினையால் அவராலும் நடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் ஜானகி செபாஸ்டியனை நாங்கள் கமிட் செய்தோம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, அந்த படத்தில் இடம் பெற்ற அம்மா கதாபாத்திரம், ஒன்று ஸ்டார் நாயகியாக இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் இயல்பாகவே ஒரு தாய் போல இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகத்தான் அவரை கமிட் செய்தோம்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்