Mookuthi Amman 2 Movie: இதெல்லாம் திருஷ்டி சுத்தி போட்ட மாதிரி.. மூக்குத்தி அம்மன் 2 பிரச்னை பற்றி பேசிய குஷ்பு
Mookuthi Amman 2 Movie: மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் நயன்தாரா பிரச்னை செய்ததாகவும், அவருக்கு பதில் இந்தப் படத்தில் தமன்னாவை நடிக்க வைக்கப் போவதாகவும் சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் அதுகுறித்து நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

Mookuthi Amman 2 Movie: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் பிரச்னை ஏற்பட்டதாக சமீபத்தில், செய்திகள் வெளியாகின. அதில், முன்னணி நடிகை நயன்தாரா சென்னையில் படப்பிடிப்பை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் இதனால் கோபமடைந்த இயக்குநக் சுந்தர் சி நயன்தாராவிற்கு பதில் நடிகை தமன்னா பாட்டியாவை நடிக்க வைக்கலாம் என்றும் தயாரிப்பாளக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாவும் கூறப்பட்டு வந்தது.
எந்த பிரச்சனையும் இல்லை
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகை குஷ்பு எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் எந்த பிரச்னையும் இல்லை என குஷ்பு தெளிவுபடுத்தினார். " மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு குறித்து பல தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், படப்பிடிப்பு திட்டமிட்டபடி சீராக நடைபெற்று வருவதாக குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
அமைதியாக இருங்கள்
இதுகுறித்து குஷ்பு வெளியிட்ட பதிவில்,“ இயக்குநர் சுந்தர்சி சாரின் சார்பில் அனைவருக்கும் எனது வணக்கங்கள். மூக்குத்திஅம்மன் 2 படம் பற்றி பல தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. தயவுசெய்து அமைதியாக இருங்கள். படப்பிடிப்பு சீராகவும், திட்டமிட்டபடியும் நடைபெற்று வருகிறது.”
சுந்தர் சி மற்றும் நயன்தாரா இருவரும் தொழில்முறை நபர்கள் என்றும், நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். “சுந்தர் ஒரு தீவிரமான நபர் என்பது அனைவருக்கும் தெரியும். நயன்தாரா மிகவும் தொழில்முறை நடிகை. அவர் முன்பு மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று குஷ்பு எழுதியுள்ளார்.
திருஷ்டி எடுத்த மாதிரி
அனைத்தும் நல்லதற்காகவே நடக்கும் என்றும், அதற்கான காரணத்தை விளக்காமலும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். “இந்த வதந்திகள் ‘திருஷ்டி எடுத்த மாதிரி’ உள்ளது. நடக்கும் அனைத்தும் நல்லதற்காகவே நடக்கும். உங்கள் நல்லெண்ணம், ஆசீர்வாதம் மற்றும் அன்புதான் எங்களுக்கு முக்கியம். எப்போதும் எங்களுடன் இருப்பதற்கு நன்றி. எனவே அமைதியாக இருங்கள், சினிமாவின் ராஜா சுந்தர் சியிடம் இருந்து மற்றொரு சூப்பர் ஹிட் படத்திற்காக காத்திருங்கள்.” என்றார்.
என்ன வதந்திகள் பரவின?
இந்த வார தொடக்கத்தில், நயன்தாரா ஒரு உதவி இயக்குனருடன் காஸ்ட்யூம் தொடர்பாக சண்டையிட்டதாகவும், அதனால் கோபமடைந்த சுந்தர் சி சென்னையில் படப்பிடிப்பை நிறுத்தியதாகவும் கூறப்பட்டது. இதனால் நயன்தாராவின் கதாப்பாத்திரத்தில் அவருக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க யோசித்து வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டது. அத்துடன் இந்த பிரச்சனையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலையிட்டு பிரச்னையை தீர்க்க நயன்தாராவுடன் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்த சூழ்நிலையை தெளிவுபடுத்தவே குஷ்பு இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
மூக்குத்தி அம்மன்
2020 ஆம் ஆண்டு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த இந்த படத்தின் தொடர்ச்சியாக மூக்குத்தி அம்மன் 2 படம் எடுக்கப்பட்டு வருகிறது. 2 ஆம் பாகத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குகிறார். இந்தப் படத்தில் ஊர்வசி, ரெஜினா காசண்ட்ரா, யோகி பாபு, அபிநயா மற்றும் மீனா ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அவ்னி சினிமாக்ஸ், ரௌடி பிக்சர்ஸ் உள்ளிடட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

டாபிக்ஸ்