Vadivelu : ‘விஜய் அரசியல்.. அஜித் விபத்து..’ மதுரையில் வடிவேலு சொன்ன ஒரே பதில்..!
Vadivelu : ‘இப்போதெல்லாம் தேர்வுசெய்து படங்களை நடிக்கிறேன். மாமன்னன் ஒரு மாதிரியான கதாபாத்திரம் , கேங்கர்ஸ் முழு நீள நகைச்சுவை படம். ரொம்ப சிறப்பாக இருக்கும். கேங்கர்ஸ் குழந்தை குட்டிகளோடு சேர்ந்து எல்லாரும் ரசிக்கும் அளவிற்கு பிரமாதமாக வந்துள்ளது’
Vadivelu : ‘ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்க என்று சொன்னேன், அது ஒன்னும் ஜாலியான மேட்டர் தானே, வடிவேல் சொன்னதுனால எதுவும் தப்பில்லை , ஏழை பாழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கன்னு சொன்னேன்,’ என்று வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல்விழாவில் நடிகர் வடிவேலு பேட்டியளித்தார்.
மதுரை பி.பி.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘வருமானவரித்துறை சார்பில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. நான்கு நாளுக்கு முன்பு எனக்குப் பொங்கல் வந்தது போல உள்ளது. மக்களோடு மக்களாக சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற ஆசைப்பட்டேன் அது நடந்துவிட்டது. அதனை இங்கே சிறப்பாக கொண்டாடி விட்டேன்,’’ என்று கூறினார். அதன் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள்
கேள்வி: ஜல்லிக்கட்டு போட்டி பார்க்க செல்வீர்களா?
பதில்: மாடு பிடிக்கிற ஆள் நான் கிடையாது. மாடு பிடிப்பதை வேண்டுமென்றால் பார்க்கலாம். என்னைய அதுல தள்ளிவிட்டு போயிராதிங்க. ஜல்லிக்கட்டு போட்டியை முடிந்தால் பார்க்க போவேன். பொங்கலை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு போக வேண்டும் நிறைய வேலை இருக்கிறது மாட பார்த்து ஓடிருவேன் தவிர புடிச்சது கிடையாது. மாடு எங்க வருது என யாருக்குத் தெரியும்? இப்பெல்லாம் கண்ட்ரோல விடுகிறார்கள். அப்போது எல்லாம் மாடு விடும்போது பேசிக்கிட்டு இருப்போம், பின்னால குத்தி தூக்கிட்டு போட்ரும். கண்ட்ரோல் இல்லாம இருந்துச்சு, இப்ப கண்ட்ரோல்ல போய்கிட்டு இருக்கு. ஜல்லிக்கட்டு ரொம்ப சிறப்பாக பெரிய லெவல்ல போய்கிட்டு இருக்கு.
போட்டியை பார்க்க வேண்டிய சூழல் இருந்தால் போய் பார்ப்பேன். இல்லையென்றால் பொங்கலை சிறப்பாக முடித்துவிட்டு ஊரில் போய் மற்ற வேலை பார்க்க வேண்டும். அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன்.
கேள்வி: அடுத்து என்னென்ன படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
பதில்: கேங்கர்ஸ் சுந்தர் சி படத்திலும், பகத் பாசிலோடு சேர்ந்து மாரிசன் படம் ஒன்று என இரண்டு படங்களும் ரெடியாக இருக்கிறது. அடுத்த பிரபுதேவா நானும் சேர்ந்து ஒரு படம் பண்ணுகிறோம் என்றார்.
கேள்வி: மேடையில் பேசும்போது அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை வைத்தீர்களே? அது என்ன?
பதில்: ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என சொன்னேன். அது ஒன்னும் ஜாலியான மேட்டர் தானே? வடிவேல் சொன்னதுனால எதுவும் தப்பில்லை! ஏழை பாழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கன்னு சொன்னேன்.
கேள்வி: விஜய் சார் அரசியலுக்கு போய் விட்டார், அவர் இடத்தை நீங்கள் நிரப்பிவீர்களா?
பதில்: வேற ஏதாவது பேசுவோமா..
கேள்வி: அஜித் கார் விபத்தாயிருக்கிறதே?
பதில்: வேற ஏதாவது பேசுவோமா..
கேள்வி: 23ஆம் புலிகேசி மாதிரியான எப்போது படங்களை எதிர்பார்க்கலாம் ?
பதில்: இப்போதெல்லாம் தேர்வுசெய்து படங்களை நடிக்கிறேன். மாமன்னன் ஒரு மாதிரியான கதாபாத்திரம் , கேங்கர்ஸ் முழு நீள நகைச்சுவை படம். ரொம்ப சிறப்பாக இருக்கும். கேங்கர்ஸ் குழந்தை குட்டிகளோடு சேர்ந்து எல்லாரும் ரசிக்கும் அளவிற்கு பிரமாதமாக வந்துள்ளது
கேள்வி: தமிழ் சினிமாவில் முழு நீள காமெடி படங்கள் குறைந்துவிட்டதே?
பதில்: மூன்று பரிமாணங்களில் நடித்து வந்தேன். தனி காமெடி விட்டுவிட்டேன் , டிராக் காமெடி பண்ணேன், ஹீரோக்கள் காம்பினேஷன் பண்ணினேன், தனியாக ஹீரோ என மூன்று கைவசம் வைத்திருக்கிறேன். தற்போது டிராக் காமெடி இல்லை அதனால் பல கதையோடு காமெடி வருகிறது. ஹேங்கர்ஸ் படம் என்பது ஆதவன் படம் மாதிரி, முழுக்க முழுக்க இந்த மாதிரி கதைகளை செலக்ட் பண்ணிக்கிட்டு நடிச்சுகிட்டு இருக்கேன்.
என்று அந்த பேட்டியில் வடிவேலு கூறினார்.