Actor Sri: ‘அவ்வளவு பிரச்சினைகள்.. அப்போதே சினிமாவை விட்டு போயிடலாம்னு நினைச்சேன்’ - நடிகர் ஸ்ரீ த்ரோபேக் பேட்டி
Actor Sri: மற்றவர்கள் போல நான் நடித்தே ஆக வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்ய வில்லை. தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, ரேடியோ உள்ளிட்டவற்றில் வேலை பார்த்தேன். இந்த நிலையில்தான் கனா காணும் காலங்கள் சீரியலுக்கான ஆடிஷன் செல்வதாக நண்பர் ஒருவர் சொன்னார். - - பேட்டி!

Actor Sri: இன்று கோலிவுட்டே நடிகர் ஸ்ரீயை பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறது. காரணம், கடந்த சில நாட்களாக அவர் பதிவிட்டு வரும் புகைப்படங்களும் வீடியோக்களும்தான். அரைகுறை ஆடையோடு அவர் பதிவிட்டு வரும் பதிவுகளை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு என்று ஷாக்காகி நிற்கின்றனர். இந்த நிலையில், தான் யார்? எப்படி சினிமாவிற்குள் நுழைந்தேன் உள்ளிட்ட விபரங்களை கடந்த 11 வருடங்களுக்கு முன்னர் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் நடிகர் ஸ்ரீ பகிர்ந்திருந்தார். அந்தப்பேட்டியை இங்கே பார்க்கலாம்.
அதில் அவர் பேசும் போது, ‘என்னுடைய வீட்டில் யாரும் சினிமா பின்னணி கொண்டவர்கள் கிடையாது. ஆனால் எனக்கு அடிப்படையிலேயே சினிமா மீது ஒரு வித ஈர்ப்பு இருந்தது. நான் விஸ் காம் படித்தேன். அங்கு முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த போது பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி படத்திற்கான ஆடிஷன் செல்வதாக சொன்னார்கள். அதில் சும்மா கலந்து கொண்டேன். ஆனால், அதன் பின்னர் எனக்கு அங்கிருந்து போன்கால் வரவே இல்லை.. நானும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை
காரணம், மற்றவர்கள் போல நான் நடித்தே ஆக வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்ய வில்லை. பின்னர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, ரேடியோ உள்ளிட்டவற்றில் வேலை பார்த்தேன். இந்த நிலையில்தான் கனா காணும் காலங்கள் சீரியலுக்கான ஆடிஷன் செல்வதாக நண்பர் ஒருவர் சொன்னார். இதனையடுத்து அங்கு சென்றேன்.
நல்வாய்ப்பாக, கனா காணும் காலங்கள் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்துதான் இயக்குநர் பாலாஜி சக்திவேல் எடுத்த வழக்கு எண் படத்திற்கான ஆடிஷனில் கலந்து கொண்டேன். அதன் பின்னர் அப்படியே அடுத்தடுத்தப்படங்களில் நடிக்க வாய்ப்புக்கிடைத்தது.
அடிப்படையில் கூச்ச சுபாவம் கொண்டவன்
நான் அடிப்படையிலேயே கூச்ச சுபாவம் கொண்டவன் ஒரு வேளை எனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை என்றால், என்ன செய்திருப்பேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்கும் அதிக இடைவேளை இருந்தது. அந்த இடைவேளையில் நான் நிறைய கதைகளைக் கேட்டேன். அதில், நான் தவறவிட்ட சில கதைகள் மிகப்பெரிய ஹிட்டாகின. அப்போது நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். தொடர்ந்து சினிமாவை விட்டுவிலகி விடலாம் என்று நினைத்தேன். வேறு வேலை பார்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தேன்.அப்போதுதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பட வாய்ப்புக் கிடைத்தது. சினிமா பயணம் தொடர்ந்தது’ என்று பேசினார்.
நடிகர் ஸ்ரீ ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வழக்கு எண் பதினெட்டின் கீழ் ஒன்பது, மாநகரம், வில் அம்பு மற்றும் இறுகப்பற்று என சில படங்களில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சில படங்களில் நடித்தாலும், அதில் அனைத்திலும் அவரது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
ஒவ்வொரு படங்களில் ஒவ்வொரு விதமான நடிப்பை காட்டியிருப்பார். வழக்கு எண் பதினெட்டின் கீழ் ஒன்பது படத்தில் அப்பாவி இளைஞனாக காதல் வயப்படும் போதும், தன் காதலிக்காக செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளும் போதும் என ஒவ்வொரு காட்சியிலும் தன்னை நிரூபித்து இருப்பார்.
மாநகரத்தில் கோவாக்கார இளைஞனாக, வில் அம்பு படத்தில் சுற்றித் திரிந்து கெத்து காட்டும் பையனாக என அசத்தியிருப்பார். இவர் இனி பல படங்களில் ஜொலிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இறுகப்பற்று படத்திற்கு பின் இவர் எந்த படத்திலும் நடிக்க வில்லை. மேலும் பிக்பாஸ் முதலாவது சீசனில் முதல் போட்டியாளராக உள்ளே சென்று என்னால் இங்கு இருக்க முடியவில்லை எனக் கூறி அவராகவே வெளியேறினார்.

டாபிக்ஸ்