HBD Sivakarthikeyan: வசூல் மன்னன்.. துப்பாக்கியை வாங்கி ஓடிக் கொண்டிருக்கும் வெற்றி நாயகன்.. HBD சிவகார்த்திகேயன்..
HBD Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரையும் கவர்ந்து குடும்பத்தில் ஒருவனாக மாறிவிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

HBD Sivakarthikeyan: கோலிவுட்டில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், தன்னை கொஞ்சம் கொஞ்சமாய் செதுக்கி, சின்னத்திரையில் அச்சாரமிட்டு, கடின உழைப்பை செலுத்தி, வாய்ப்புகளை பயன்படுத்தி புகழ் வெளிச்சம் பெற்றவர்கள் மிகச் சிலரே. அதில், நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் பொன் எழுத்துகளால் தற்போது பொறிக்கப்பட்டிருக்கும்.
கடுமையான பயணம்
பெயரைச் சொன்னாலே உற்சாகம் ததும்ப இன்று நம்ம வீட்டு குட்டீஸ்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போன பையனாக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன். டெலிவிஷன் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு கலகலன்னு சுற்றி வந்த பையன் இன்று தமிழ் சினிமாவில் கலெக்சன் கிங் முத்திரையை பதித்து வளர்ந்திருப்பதை விளக்குவது அவ்வளவு எளிதான பயணமாக அமையில்லை.
கலைப் பயணத்தின் தொடக்கம்
1985 பிப்ரவரி மாதம் 17 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் பிறந்தவர். இவர் தந்தை சிறைத்துறை அதிகாரி. விவரம் தெரிந்து திருச்சி பையனாகவே வளர்ந்தவர். ஆரம்ப கல்வி முதல் பொறியியல் கல்லூரி வரை திருச்சியில் படித்தவர். கல்லூரி காலம் முதல் மிமிக்ரியில் கலக்கி வந்தார். விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராகவும் தொகுப்பாளராகவும் தனது கலையுலகப் பயணத்தை ஆரம்பித்தார்.
பக்க பலமாக அமைந்த திறமைகள்
இவருடைய துறுதுறு செயல்பாடுகள், கலகல பேச்சு, யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவை, டைமிங் காமெடியும் கவுன்ட்டர் டயலாக்குகளும் இவரின் பக்க பலமாக மாறின. இவருடைய டிவி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது. கிடைக்கும் சின்னச்சின்ன வாய்ப்புகளில் எல்லாம் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கு அழைத்து சென்றதால் மக்கள் கொண்டாட தொடங்கினர்.
உழைப்பை கொட்டி முன்னேற்றம்
சின்னத்திரையில் மக்களின் மனதில் ஒரு இடத்தை உருவாக்கி விட்டு வெள்ளித்திரைக்கு பயணம் செய்தார். 2012 ல் 3 படத்தில் தனுஷின் நண்பர் வேடத்தில் வெள்ளித் திரைக்குள் நுழைந்த சிவகார்த்திகேயன், தொடர்ந்து பாண்டியராஜ் இயக்கிய மெரினா படத்தில் நாயகனாக நடித்தார். இதைத் தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா என கிடைத்த இடத்தில் எல்லாம் உழைப்பை கொட்டினார்.
கட்டிப் போட்ட மனைவியின் வார்த்தை
இதன் மூலம் குடும்ப ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, எதிர்நீச்சல், டான், டாக்டர் என பல வெற்றியை சுவைக்க பல போராட்டங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. திரைத்துறையில் அழுத்தம், மன உளைச்சல், நெருக்கடி, கிசுகிசுக்கள் என பலவற்றில் சிக்கி சினிமாவை விட்டே வெளியேற நினைத்தவரை கட்டிப்போட்டது மனைவியின் வார்த்தை.
துப்பாக்கியை பெற்று தொடங்கிய பயணம்
பின் சீறுகொண்டு எழுந்த மனிதன், தன் வெற்ரறிக்கு மட்டும் செவி கொடுக்க துடித்து பரபரப்பாக வேலையில் இறங்கினார். அதன் விளைவு தமிழ்நாட்டு மக்களின் செல்லப் பிள்ளையாக இருந்தவர், இந்திய அளவில் கொண்டாடும் முகுந்தனாக மாறினார். தியேட்டரில் தன்னை பார்க்க திரும்ப திரும்ப ரசிகர்களை வரவழைத்தார். சினிமாவில் நடிப்பதற்கு பதில் வாழ்ந்தார். அதே சமயம், மக்களின் தளபதியாக இருந்த விஜய், சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்ல இருக்கும் சமயத்தில், அவருடைய துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து வாழ்த்து சொல்லிவிட்டு போனார்.
கை கொடுத்த கதவுகள்
இப்படி சிவகார்த்திகேயன் தனக்கான மக்கள் படையை உருவாக்க வெறும் நடிப்பை மட்டும் ஆயுதமாக பயன்படுத்தவில்லை. அவர் தன்னை, நடிகராக, பாடகராக, பாடல் ஆசிரியராக, தயாரிப்பாளராக உச்சத்திற்கு கொண்டு செல்லும் அத்தனை கதவுகளையும் திறந்து முன்னுக்கு வந்தார்.
தற்போது, தனக்கு கிடைத்த வெற்றியை ருசி பார்த்த சிவகார்த்திகேயன், அதை தனக்குள் தக்க வைக்க விடாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார். அவரது ஓட்டம் அவருக்கு கை கொடுக்க வேண்டும் என இவரது 40வது பிறந்தநாளில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வாழ்த்துகிறது.
