Parasakthi: மறக்க முடியாத வசனங்கள் ..சிவாஜியின் அறிமுக படம் ‘பராசக்தி’ வெற்றி கதை!
71 years of Parasakthi: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 71 ஆண்டுகள் நிறைவடைகிறது. தமிழ் சினிமாவுக்கும் சிவாஜிக்கும் பேரும் புகழும் பெற்றுத் தந்த இந்த படம் குறித்த சுவராஸ்ய தகவல்களை இங்கு காண்போம்.

தமிழ் சினிமா இன்றைக்கு நவீன தொழில்நுட்பத்தால் பல்வேறு வளர்ச்சி அடைந்திருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். சில படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத படங்களாகவும் அமைந்துவிடுவது உண்டு.
மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.
அந்த வகையில், நடிப்பின் பல்கலைக்கழகம் என ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்படும் சிவாஜி கணேசனின் நடிப்பில் 1952 ஆம் ஆண்டு அக்டோபர் 17-ல் வெளியான திரைப்படம் 'பராசக்சி'.
கிருஷ்ணன் - பஞ்சு என இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்த படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிக் கொடுத்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் சிவாஜியை கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்த போது, வேண்டாம் எனப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், யாருடைய எதிர்ப்பையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் சிவாஜியை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். இது காலத்திற்கும் நிலைத்து நின்றது.
படப்பிடிப்பு தொடங்கிய போது சிவாஜி கணேசன் பேசிய முதல் வசனம் ‘சக்சஸ்’. படம் மட்டும் சக்சஸ் ஆகவில்லை, அவர் வாழ்க்கையே சக்சஸ் ஆனது. முதல் படத்திலேயே தனது நவரசங்களையும் கொட்டி திரை உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் சிவாஜி கணேசன். அந்தப் படத்தில் இவர் மூச்சு விடாமல் பேசும் வசனங்கள் இன்றளவும் உயிர்ப்புடன் தான் வலம் வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசிய வீறு கொண்ட வசனங்கள் இன்றளவும் மனதுக்குள் எதிரொலிக்கிறது. அந்தளவுக்கு அனைவரையும் உணர்ச்சிமேலிடச் செய்த வசனங்கள் அவை. பராசக்தி திரைப்படத்தில் இடம் பெற்ற இத்தகைய அனல் பறக்கும் வசனங்களை யாரால் மறக்க முடியும்..?
தமிழில் வெளியான பத்து சிறந்த படங்களை தேர்வு செய்தால் அதில் பராசக்திக்கும் நிச்சயம் ஒரு இடம் இருக்கும். 1952, ஆம் ஆண்டு இதே அக்டோபர் 17 ஆம் தேதி பராசக்தி வெளியானது. இப்படம் வெளியாகி இன்றோடு 71 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நேற்று ரிலீசானது போல் உள்ளது. ஆனால் 71 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் காலத்தை வென்ற காவியம் பராசக்தி. படம் வெளியாகி 70 ஆண்டுகளை கடந்தாலும் இன்று பார்த்தாலும் இளமை மாறாமல் காட்சியளிக்கும் படம் 'பராசக்தி'
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்