தங்கம் கடத்த ஸ்பெஷல் ஜாக்கெட், பெல்ட்; ஒவ்வொரு பயணத்திலும் கிலோ கணக்கில் தங்கம்! - கன்னட நடிகை கைதில் அதிர்ச்சி தகவல்கள்
ரன்யா ராவ் கடந்த ஆண்டில் மட்டும் 30 முறை துபாய்க்கு சென்றதாகவும், ஒவ்வொரு முறை செல்லும்போதும் கிலோ கணக்கில் தங்கம் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாக கூறி, கன்னட நடிகை ரன்யா ராவை பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.

12.56 கோடி வரை இருக்கும்
தொடர்ந்து, அவரிடம் இருந்து 15 கிலோ மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு 12.56 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கர்நாடக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளனா ராவ், கடந்த ஆண்டில் 30 முறை துபாய் சென்றதாகவும், ஒவ்வொரு முறை செல்லும்போதும் கிலோ கணக்கில் தங்கம் கடத்தி வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
12-13 லட்சம் ரூபாய் வரை
இது தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில், ராவுக்கு ஒரு கிலோ தங்கத்தை கடத்த 1 லட்சம் வழங்கப்பட்டதாகவும், ஒவ்வொரு முறை அவர் துபாய் செல்லும் போதும் சுமார் 12-13 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறது.
அது மட்டுமல்ல கடத்தலுக்கு ஏதுவாக, ஜாக்கெட்டுகளையும், பெல்டையும் பிரத்யேகமாக உருவாக்கி இருக்கிறாராம். அதனையே ஒவ்வொருமுறையும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அண்மையில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அவரை கைது செய்த நேரத்திலும், அவர் தனது மாற்றியமைக்கப்பட்ட ஜாக்கெட்டில்தான் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
நடந்தது என்ன?
ரன்யா ராவ் துபாய்க்கு அடிக்கடி பயணம் செய்த நிலையில், அவரை கண்காணித்து வந்த அதிகாரிகள் கடந்த புதன்கிழமை கைது செய்து சோதனை செய்தனர். அப்போது அவர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
சோதனை செய்த போது தான் கர்நாடக டிஜிபியின் மகள் என்று ராவ் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அதிகாரிகள் தங்களது நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்திருக்கின்றனர். இந்த வழக்கில் ரூ.4.73 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உட்பட மொத்தம் ரூ.17.29 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
ராமச்சந்திர ராவ் தனது மகள் கைது குறித்து சொன்னவை இங்கே!
இது குறித்து ஏ.என்.ஐ நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "இதுபோன்ற ஒரு சம்பவம் ஊடகங்கள் மூலம் எனது கவனத்திற்கு வந்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். இந்த விஷயங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. மற்ற தந்தையைப் போலவே நானும் அதிர்ச்சியடைந்தேன்.
அவள் எங்களுடன் வசிக்கவில்லை, அவள் கணவருடன் பிரிந்து வாழ்கிறாள்; சில குடும்ப பிரச்சினைகள் காரணமாக, அவர்களுக்கு இடையே சில பிரச்சினைகள் இருந்தன. எப்படியிருந்தாலும், சட்டம் அதன் வேலையைச் செய்யும்; என் வாழ்க்கையில் எந்த கருப்பு அடையாளமும் இல்லை. இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்