Rajini About RMV: ‘அண்ணா வழியில் வாழ்ந்தவர் ஆர்.எம்.வீ!’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajini About Rmv: ‘அண்ணா வழியில் வாழ்ந்தவர் ஆர்.எம்.வீ!’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Rajini About RMV: ‘அண்ணா வழியில் வாழ்ந்தவர் ஆர்.எம்.வீ!’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Kathiravan V HT Tamil
Updated Apr 09, 2024 07:50 PM IST

”அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள், மத்திய, மாநில அமைச்சர்களாகி, கல்வி நிறுவன அதிபர்களாகி பேரும், புகழும், பணத்தோடு இப்போதும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்”

ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை தி.நகரில் உள்ள ஆர்.எம்.வீ இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மரியாதை செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஒரு முழு வாழ்கையை வாழ்ந்து நம்மை விட்டு ஆர்.எம்.வீ சார் பிரிந்து உள்ளார். அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தனிப்பட்ட வாழ்கை அரசியல், சினிமா வாழ்கைகளில் வலது கையாக ஆர்.எம்.வீ சார் இருந்தார். அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷ்யர்கள், மத்திய, மாநில அமைச்சர்களாகி, கல்வி நிறுவன அதிபர்களாகி பேரும், புகழும், பணத்தோடு இப்போதும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆர்.எம்.வீ அவர்கள் எப்போதும் பணத்தின் பின்னால் போனது இல்லை, அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து வாழ்ந்தவர் ஆர்.எம்.வீ அவர்கள், எனக்கும், ஆர்.எம்.வீ சார் உடனான நட்பு புனிதமானது, உணர்ச்சிகரமானது, ஆழமானது. என் வாழ்நாளில் நான் அவரை மறக்க முடியாது, அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் தொடர்புடையவர்களுக்கும் நன்றி ” என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளர். 

யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்?

ஆர்.எம்.வீ என அறியப்படும் ஆர்.எம்.வீரப்பன் புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையில் பிறந்தவர். இளம் வயது முதலே திராவிட இயக்கத்துடன் தொடர்பில் இருந்த வீரப்பன், காரைக்குடி ராமசுப்பையா மூலமாக பெரியாருக்கு அறிமுகம் ஆனார். பின்னர் பெரியார் உடன் ஈரோடு சென்று பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பனுக்கு திராவிட இயக்கத் தலைவர்கள் உடன் தொடர்பு ஏற்பட்டது.

கே.ஆர்.ராமசாமி நடத்தி வந்த கிருஷ்ணன் நாடக கம்பெனியில் மேற்பார்வையாளராக சேர்ந்த ஆர்.எம்.வீரப்பன், அறிஞர் அண்ணாவின் அபிமானியாக மாறினார்.

எம்ஜிஆரின் உதவியாளர் முதல் அமைச்சர் வரை!

1953ஆம் ஆண்டு எம்ஜிஆரின் உதவியாளராக சேர்ந்த ஆர்.எம்.வீரப்பன், விரைவில் அவரது நம்பிக்கைக்கு உரியவராக மாறி அவரது கணக்காளராக உயர்ந்தார்.

1956ஆம் ஆண்டு அவரது திருமணத்தை திருப்பரங்குன்றத்தில் பேரறிஞர் அண்ணா நடத்தி வைத்தார்.

எம்ஜிஆரின் திரைப்பட நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்த ஆர்.எம்.வீரப்பன், தீவிர எம்ஜிஆர் ஆதரவாளராக அறியப்பட்டார்.

1972ஆம் ஆண்டில் திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட பின்னர், அதிமுக என்ற தனிக்கட்சியை தொடங்கிய எம்ஜிஆருக்கு ஆர்.எம்.வீரப்பன் பக்கபலமாக இருந்தார்.

1977 முதல் 1996 வரையில் அமைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அரசுகளில், இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொடர்புத்துறை, உள்ளாட்சித் துறை, கல்வித்துறை உள்ளிட்ட இலாகாகளை ஆர்.எம்.வீரப்பன் கவனித்து வந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும் சட்ட மேலவை உறுப்பினராகவும் அவரது செயல்பாடுகள் இருந்தது.

ஜெயலலிதாவுடன் பிணக்கு!

1987ஆம் ஆண்டில் எம்ஜிஆர் மறைந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகி அம்மையாரை தீவிர அரசியலுக்கு அழைத்து வந்ததில் ஆர்.எம்.வீரப்பனின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இதனால் அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஜெ அணி என்றும், ஜானகி தலைமையில் ஜா அணி என்றும் இரண்டாக பிரிந்தது.

1989ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பிறகு ஒருங்கிணைந்த அதிமுக உருவானபோது ஜெயலலிதா தலைமையை ஏற்றார்.

1996ஆம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி எம்ஜிஆர் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி ஆர்.எம்.வீரப்பன் நடத்தி வருகிறார். 2004ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேர்தல்களில் எம்ஜிஆர் முன்னேற்றக் கழகம் திமுகவுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறது.