44 Years of Kanni Paruvathile: திடீர் சபலம்! எமோஷனல் பிளாக்மெயில் - பார்வையாலேயே பாக்யராஜ் வில்லத்தனத்தில் மிரட்டிய படம்
திடீர் சபலம் மனிதனின் வாழ்க்கையில் எப்படி குரூரத்தை வெளிப்படுத்தும் என்பதை கூறும் விதமாக இருந்த கன்னிப் பருவத்திலே தமிழ் சினிமாவுக்கு புதிய கதைகளத்தை உருவாக்கி தந்ததில் முக்கிய பங்கு வகித்தது.

பாக்யராஜ் திரைக்கதை, வசனம் எழுத உறவுச்சிக்கலை மையப்படுத்திய கதையம்சத்தில் வெளியாகி விமர்சக ரீதியாக பெரியதாக பேசப்படாவிட்டாலும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்த படம் கன்னிப்பருவத்திலே. தற்போகு குணச்சித்திர நடிகராக இருந்து வரும் ராஜேஷுக்கு அறிமுக படம். அதேபோல் சிவப்பு ரோஜாக்கள் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த வடிவுக்கரசி ஹீரோயினாக தோன்றிய முதல் படம்.
புதிய வார்ப்புகள் படத்தில் ஹீரோவாக அறிமுகமான பாக்யராஜ், இந்தப் படத்தில் வில்லத்தனம் கொண்ட நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் அவருக்கு வேறொருவர் டப்பிங் கொடுத்திருப்பார். மனித வாழ்க்கையில் திடீரென் சபலம் எட்டிப்பார்த்தால் அவன் மனம் எந்த அளவுக்கு குரூரமாக மாறும் என்பதை கூறும் விதமாக படத்தின் ஒன்லைன் அமைந்திருக்கும்.
ஜல்லிக்கட்டு வீரனாக வரும் ராஜேஷ் மீது வடிவுக்கரிசிக்கு காதல். முதலில் அவர் காதல் வெறுத்து ஒதுக்கி, பின்னர் வடிவுக்கரசி வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்கிறார் ராஜேஷ். பின்னர் அவரால் குழந்தை பெற்று தர இயலாது என்பதை அறிந்து மனமுடைந்து இருக்கும் சமயத்தில், ராஜேஷின் நண்பனாக வரும் பாக்யராஜ், அவரது மனைவியை ஆபத்தில் இருந்து காப்பாற்றும்போது ஏற்படும் நெருக்கம், ஸ்பரிசத்தில் இருவருக்கும் சபலம் ஏற்படுகிறது. இதை வைத்தே வடிவுக்கரசியை தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள மனரீதியாக டார்ச்சர் செய்யும் பாக்ராஜிடம் இருந்து தப்பிக்க வடிவுக்கரசி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
படம் முழுவதும் ராஜேஷ், வடிவுக்கரசி, பாக்யராஜ் ஆகிய மூன்று பேரை சுற்றியே நகரும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஊரே வீரனாக தன்னை புகழ்ந்தாலும், குழந்தை உருவாக்கும் பாக்கியம் தனக்கு இல்லாத இயலாமையை வெளிப்படுத்தும் விதமாகவும், மனைவியுடன் அன்பும், அக்கறையும் செலுத்தும் கணவனாகவும், நண்பனிடம் பாசத்தை கொட்டுபவனாகவும் நடிப்பில் கலக்கியிருப்பார் ராஜேஷ்.
அதேபோல் ஆரம்பத்தில் குறும்புத்தனமான கதாபாத்திரமாக தோன்றும் பாக்யராஜ், பின்னர் வடிவுக்கரசியை பிளாக்மெயில் செய்வது, அவரிடம் வில்லத்தனைத்து வெளிப்படுத்துவது என் பார்வையின் மூலமே நடிப்பில் மிரட்டியிருப்பார்.
ஒட்டு மொத்த படத்தையும் தாங்கி பிடிக்கும் கதாபாத்திரத்தில் வடிவுக்கரிச நடித்திருப்பார். ஆரம்பத்தில் ராஜேஷிடம் காதலில் விழுவது முதல், அவர் கணவன் ஆன பிறகு அன்பை பொலிவது, குழந்தை பாக்கியத்தை தர இயலாத போதிலும் அதை பெரிய விஷயமாக பார்க்காமல் கணவரிடம் பரிவு காட்டுவது, சபலத்தால் தப்ப செய்ய முயற்சித்து பின்னர் பாக்யராஜ் டார்ச்சரை நாள்தோறும் அனுபவித்து அதனை வலியை வெளிக்காட்டாமல், இறுதியில் வேறு பரிணாமம் எடுப்பது என தனது கதாபாத்திரத்துக்கான அத்துனை ரசங்களையும் கொட்டியிருப்பார்.
கன்னிப் பருவத்திலே என்ற டைட்டிலுக்கு ஏற்ப சபலம், அதனால் வெளிப்படும் துரோகம், தியாகம் என மனித உணர்வுகளில் இயல்பாக ஏற்படும் விஷயங்களை வைத்து சிறப்பான திரைக்கதை அமைத்திருப்பார் பாக்யராஜ். இந்த படத்தை இயக்குநர் பாரதிராஜாவிடம் தன்னை உதவி இயக்குநராக சேர்த்த பி.வி. பாலகுருவுக்காக திரைக்கதை அவர் அமைத்து கொடுத்தார்.
16 வயதினேலே, கிழக்கே போகும் ரயில் படங்களின் ஹிட்டை தொடர்ந்து ஸ்ரீஅம்மா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜாகண்ணு தயாரிக்கி, பி.வி. பாலகுரு இயக்கியிருப்பார். தயாரிப்பாளர் ராஜாகண்ணுவின் முந்தைய இரண்டு படங்கள் போல் இல்லாமல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டதுடன், படத்தின் உறவுச்சிக்கல் கதையமைப்பு, சில நெருக்கமான காட்சிகள் காரணமாக ஏ சர்டிபிக்கேட் பெற்றது.
சங்கர் கணேஷ் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக கன்னிப்பருவத்திலே என்ற சொன்னால் நினைவுக்கு வரும் விதமாக அமைந்த பாடலாக பட்டுவண்ண ரோசாவாம் என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. இன்றளவும் அதிகமாக ரசிக்கப்படும் கிளாசிக் பாடலாக இது இருந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் 1970 காலகட்டத்தில் வெளிவந்த வித்தியாச கதையம்சம் கொண்ட படமாக இருந்த கன்னிப்பருவத்திலே வெளியாகி இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகிறது.

டாபிக்ஸ்