Actor Kamal Haasan: சான்ஃப்ரான்சிஸ்கோவில் சாதனைத் தமிழர்கள்! உற்று நோக்கும் உலகம்..
Actor Kamal Haasan: பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனை நடிகர் கமல் ஹாசன் சந்தித்து பேசியது தற்போது உலக அரங்கில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Actor Kamal Haasan: செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்று சாட்ஜிபிடி பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதைப் போலவே, கூடுதல் திறன்களோடு பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனம் வந்திருக்கிறது. இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது.
அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, பேரளவில் வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார் நடிகர் கமல்ஹாசன்.
பாராட்டிய கமல் ஹாசன்
சினிமா தொடங்கி கணினித் துறை வரை உபகரணங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால், அடுத்து என்ன என்கிற நமது தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘ஒரு சமயத்தில் ஒரு கேள்வி’ என்ற முறையில் எதிர்காலத்தை நிர்ணயிக்கவிருக்கும் அரவிந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய இந்திய மேதைமையால் ஒளிரும் பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்தின் சான்ஃப்ரான்சிஸ்கோ தலைமையகத்துக்குச் சென்றதில் எனக்குள் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது.
க்யூரியாசிடி கில்ஸ் த கேட் என்று ஆங்கிலத்தில் ஒரு மரபுத் தொடர் உண்டு. ஆனால், இங்கே க்யூரியாசிடி பூனையைக் கொல்லவில்லை; அரவிந்த் ஸ்ரீநிவாஸை உருவாக்கியிருக்கிறது! என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
வாழ்த்திய அரவிந்த் ஶ்ரீநிவாஸ்
கமல்ஹாசனுடனான சந்திப்பைப் பற்றி, பெர்ப்லெக்ஸிடி தலைமைச் செயலதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிடும்போது, “பெர்ப்லெக்ஸிடி அலுவலகத்தில் உங்களைச் சந்தித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்னும் கற்பதிலும், அசுரத்தனமாக வளர்ந்துவரும் தொழில் நுட்பத்தை திரைப்பட உருவாக்கத்தில் இணைத்துக்கொள்வதிலும் நீங்கள் காட்டிவரும் ஆர்வம் பிறருக்கு முன்னுதாரணமானது.
நீங்கள் இப்போது பணியாற்றிவரும் ‘தக் லைஃப்’ திரைப்படமும், அடுத்தடுத்து வரவிருக்கும் திரைப்படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பெர்ப்லெக்ஸிடி ஏஐ
சாட்ஜிபிடி என்பது படைப்புத் துறையிலும் உரையாடலிலும் பொதுத் தேவைகளுக்காகவும் பணியாற்றுகிறது எனில், பெர்ப்லெக்ஸிடி ஏஐ என்பதுஆய்வு நோக்கங்களுக்காகவும், உண்மை சரிபார்ப்புக்கும் பொருத்தமானதாக உள்ளது. கூகிளுக்கு நிகராக சாத்தியங்களைக் கொண்ட நிறுவனமாக பெர்ப்லெக்ஸிட்டியை உலகத்தொழில்நுட்ப வல்லுனர்கள் கருதுகிறார்கள். சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்ற தொழில்நுட்ப ஆளுமையாகவும், செயற்கை நுண்ணறிவுத்துறையின் முகங்களுள் ஒருவராகவும் அரவிந்த் ஶ்ரீநிவாசன் மதிப்பிடப்படுகிறார்.
சென்னைத் தமிழன் அரவிந்த் ஶ்ரீநிவாஸ்
பெர்ப்லெக்ஸிடி ஏஐ, 2022ல், சான் ஃப்ரான்சிஸ்கோவில், செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் இயந்திரக் கற்றல் துறையிலும் விற்பன்னர்களான நான்கு பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தேடுபொறி நிறுவனம். இந்த நால்வரில் முதன்மையானவர், இதன் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ். சென்னையைச் சேர்ந்தவர். சென்னை ஐஐடியில் பயின்றவர்.
ஓப்பன் ஏஐ அமைப்பில் ஆராய்ச்சியாளராக இருந்தவர் அரவிந்த் ஶ்ரீநிவாஸ். இவர் ஆண்டி கோன்வின்ஸ்கி, டெனிஸ் யரட்ஸ், ஜானி ஹோ ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

டாபிக்ஸ்