33 Years of Naan Pudicha Mappillai: சிரிக்கவும், அழவும் வைத்த ஜனகராஜ்! மாமனார் - மருமகன் உறவின் மகத்துவத்தை சொன்ன படம்
ரசிகர்களை தனது காமெடியால் சிரிக்க வைத்த ஜனகராஜ் இந்த படத்தில் சீரியஸான நடிப்பில் அழவும் வைத்திருப்பார்.
தமிழ் சினிமாவில் 1990களில் குடும்ப சித்திரங்கள் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் வி. சேகர். குடும்பங்களில் நிகழும் சிக்கல்கள், சண்டை சச்சரவுகளையும், குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் பாச போராட்டம், உணர்ச்சி போராட்டத்தை மையமாக வைத்து இவரது படங்கள் அமைந்திருக்கும்.
குறிப்பாக கூட்டு குடும்பத்தின் மகத்துவம், குடும்ப வாழ்க்கை நிகழும் சிரமங்களை எதார்த்தம் குறையாமல் தனது படங்களின் மூலம் எடுத்து காட்டியிருப்பார். பக்கத்து வீட்டு பெண், பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரம் என்ற சொல்லாடலை பயன்படுத்துவது போல் இவரது படங்கள் நம் வீடுகளிலும், பக்கத்து வீடுகளிலும், தெரிந்தவரின் வீடுகளிலும் நடக்கும் கதையாக இருக்கும்.
அந்த வகையில் ஜனகராஜ், நிழல்கள் ரவி, சரண்யா பொன்வண்ணன், ஐஸ்வர்யா, கவுண்டமணி பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக நான் பிடிச்ச மாப்பிள்ளை படத்தை உருவாக்கியிருப்பார் இயக்குநர் வி. சேகர். காமெடி கதாபாத்திரங்களில் சிரிக்க வைக்கும் நடிகராக இருந்த ஜனகராஜ் இந்த படத்தில் காமெடியுடன், குணச்சித்திர வேடம் ஏற்று சீரியஸான நடிப்பிலும் கலங்கடித்திருப்பார்.
கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராகவும், வசதி படைத்தவராகவும் இருக்கும் நிழல்கள் ரவி, சரண்யாவை விரும்பி திருமணம் செய்துகொள்வார். சரண்யாவின் தந்தையான ஜனகராஜ் தனது மாப்பிள்ளை நிழல்கள் ரவி மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்பார்கள்.
சொத்துக்காக ஆசைப்படும் நிழல்கள் ரவி உறவினராக வரும் கவுண்டமணி, ஜனகராஜ் மீது வீண் பழி சுமத்த அவர் இறந்துபோகிறார். இறுதியில் உண்மை தெரிந்து சொந்தங்களை நிழல்கள் ரவி தண்டிப்பது தான் படத்தின் கதை.
மாமானார் - மாப்பிள்ளை உறவுக்கு இடையிலான பாசத்தையும், உணர்வுகளை கூறும் விதமாக படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். வெகுளிதனமான கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடிப்பில் சிரிக்கவும், அழவும் வைத்திருப்பார். நிழல்கள் ரவியும் தனது பாத்திரம் அறிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
கவுண்டமணி வில்லத்தனம் மிக்க கதாபாத்திரத்தில் தனது ஸ்டைல் கவுண்டர் காமெடியுடன், வெறுப்பையும் சாம்பாதித்திருப்பார். படத்துக்கு சந்திரபோஸ் இசையமைத்திருப்பார். இதில் இடம்பிடித்திருக்கும் தீபாவளி தீபாவளி தான் என்ற பாடல் படம் வெளியான காலகட்டத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடலாக இருந்தது.
ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த இந்த படம் சராசரி ஹிட்டாகவும் அமைந்தது. தெலுங்கில் மாமகாரு, கன்னடத்தில் முத்தினா மாவா, இந்தியில் மெஹர்பான் ஆகிய பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சிறந்த பேமிலி டிராமாவாகவும் மாமன் - மாப்பிள்ளை உறவின் மகத்துவத்தை சொன்ன படமாக இருந்த நான் பிடிச்ச மாப்பிள்ளை வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்