Akash Murali: ‘ரொம்ப பயமா இருக்கு.. மக்களுக்கு கண்டிப்பா படம் பிடிக்கும்னு’ - முதல் படி எடுத்து வைக்கும் முரளி மகன்!
எனக்கு பயம் இருக்கவே செய்கிறது. படம் பார்த்துவிட்டு பார்வையாளர்களும் விமர்சகர்களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். - ஆகாஷ் முரளி

எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளியின் முதல் திரைப்படமான 'நேசிப்பாயா’ ஜனவரி 14, 2025 இன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைத் தெரிந்து கொள்ள நடிகர் ஆகாஷ் முரளி ஆர்வமாக இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.
பாசிட்டிவான விமர்சனம்
படம் வெளியாவது பற்றி தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார் ஆகாஷ் முரளி, “எனக்கு பயம் இருக்கவே செய்கிறது. படம் பார்த்துவிட்டு பார்வையாளர்களும் விமர்சகர்களும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இதுவரை வெளியான படத்தின் விஷூவல் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது. படத்திற்கும் அதே போன்ற பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.
என்னவாக இருக்கும்
மேலும் பேசிய அவர், ‘படத்தின் ட்ரெய்லரில் திறமையான நடிகர்கள் மற்றும் பிரமாண்ட தயாரிப்பு போன்றவை மூலம் இதன் கதை என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. "படத்தின் கதை எளிமையானது. ஆனால், அதன் உணர்வுகள் மிகவும் ஆழமானது. ஒருவன் தன் காதலுக்காக எதையும் செய்வதுதான் ‘நேசிப்பாயா’” என்கிறார் ஆகாஷ் முரளி.
தொடர்ந்து பேசிய அவர் , “பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்த இயக்குநர் விஷ்ணுவர்தன் சாருடன் பணிபுரிந்தது எனக்கு சிறந்த அனுபவமாக அமைந்தது. அதிதியும் எனக்கு பெஸ்ட் கோ-ஸ்டார். நடிப்பில் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். கல்கி கோச்லினும் சிறப்பாக நடித்துள்ளார். எனது முதல் படத்திலேயே நடிகர்கள் பிரபு சார், சரத்குமார் சார், குஷ்பு மேடம் என சிறுவயதில் யாருடைய படங்களை நான் பார்த்து வளர்ந்தேனோ அவர்களுடன் நடித்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
விஷ்ணு வர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது
படம் பற்றி நடிகை அதிதி ஷங்கர் கூறும்போது, “ஸ்டைலிஷான இயக்குநர் விஷ்ணு வர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது மற்ற நடிகர்களைப் போல எனக்கும் கனவாக இருந்தது. கதாநாயகிகளை தன்னுடைய படத்தில் எப்போதும் அவர் அழகாக காட்டுவதோடு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க வைப்பார்.
நேசிப்பாயா அனுபவமும் சிறப்பாக இருந்தது
முழு படப்பிடிப்பு அனுபவமும், சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஆகாஷ் முரளியுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் கேமரூனும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘நேசிப்பாயா’ திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக இருக்கும்” என்றார்.
இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்க சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்