HappyBirthdayAK: பின்புலம் இல்லாமல் தடம் பதித்த அஜித்: அமராவதி முதல் குட் பேட் அக்லி வரையிலான திரைப்பயணம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Happybirthdayak: பின்புலம் இல்லாமல் தடம் பதித்த அஜித்: அமராவதி முதல் குட் பேட் அக்லி வரையிலான திரைப்பயணம்!

HappyBirthdayAK: பின்புலம் இல்லாமல் தடம் பதித்த அஜித்: அமராவதி முதல் குட் பேட் அக்லி வரையிலான திரைப்பயணம்!

Marimuthu M HT Tamil
May 01, 2024 07:46 AM IST

HappyBirthdayAK:நடிகர் அஜித் குமார் இன்று தனது 53ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அது தொடர்பான சிறப்புக்கட்டுரை

நடிகர் அஜித் குமார்
நடிகர் அஜித் குமார்

யார் இந்த அஜித் குமார்?: தஞ்சை மற்றும் பாலக்காடைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான சுப்ரமணியம் மற்றும் கொல்கத்தாவின் சிந்தியைச் சார்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக,மே1ஆம் தேதி 1971ஆம் ஆண்டு பிறந்தவர், அஜித் குமார். இவர் பிறக்கும்போது, ஹைதராபாத்தில் இவரது குடும்பத்தினர் இருந்தனர். இவரது அண்ணனின் பெயர் அனுப் குமார், இவர் ஒரு முதலீட்டாளராக இருக்கிறார். இவரது தம்பியின் பெயர் அனில் குமார், சென்னை ஐ.ஐ.டியில் படித்துவிட்டு தொழில் முனைவோராக உள்ளார்.

நடிகர் அஜித், 10ஆவது வரை ஏஸன் மெமரியல் சீனியர் செகண்டரி பள்ளி எனப்படும், சென்னையில் இருக்கும் பள்ளியில் படித்தார். அதன்பின் தொடர்ந்து படிக்கவில்லை. அஜித் என்ஃபீல்டு கம்பெனியில் மெக்கானிக் ஆவதற்காக ஆறு மாத காலப் பயிற்சி எடுத்தார்.

அதன்பின், தந்தையின் வற்புறுத்தலால் அப்பணியில் இருந்து விலகி, ஜவுளி எக்ஸ்போர்ட் செய்யும் கம்பெனியில் பணி செய்தார். அஜித்தின் அற்புதமான ஆங்கில அறிவால், அவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் நிறுவனத்தால் அனுப்பப்பட்டு, விற்பனையை விரிவாக்கம் செய்ய உதவினார். இந்த வேலையை விட்டபின், அஜித், தனது 3 பார்ட்னர்களுடன் சேர்ந்து, ஜவுளி விற்பனைப் பணியைத் துவக்கினார். அப்படியே மாடலிங்கிலும் வாய்ப்புகள் தேடி அலைந்தார். அப்போது ஒரு விளம்பரத்தில் அஜித்தை பார்த்த பி.சி.ஸ்ரீராம், அவரைப் பல்வேறு திரைப்படங்களுக்கு பரிந்துரை செய்தார்.

அஜித்தின் திரைப்பிரவேசம்: 

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி சரணும் அஜித்தும் கிளாஸ்மேட்ஸ். அந்த நட்பின் அடிப்படையில், பிரேம புஸ்தகம் என்னும் தெலுங்கு படத்தில் கமிட் ஆனார். ஆனால், அவர் தமிழில் அதற்கு முன்பே செல்வா இயக்கத்தில், ஹீரோவாக நடித்த ’அமராவதி’ திரைப்படம் 1993ஆம் ஆண்டு, ஜூன் 4ஆம் தேதி வெளியாகி நல்ல பெயரைப் பெற்றது. அதன்பின் அடுத்தடுத்த தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடித்து மெல்ல தமிழ்சினிமாவில் கால்பதிக்கத் தொடங்கினார், அஜித் குமார். 

பின் அரவிந்த் சாமி நடித்த பாசமலர்கள் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார், அஜித். அதன்பின் இவர் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம், பவித்ரா. இப்படத்தை சுபாஷ் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களான நாசரும் ராதிகாவும் நடித்திருந்தனர். அதன்பின் அமைந்த படம்தான், ’ராஜாவின் பார்வையிலே’. இப்படத்தில் விஜய்யின் நண்பராக, அஜித் குமார் நடித்திருப்பார். இருவரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் இதுவாகும். அதன்பின், அஜித் இயக்குநர் வஸந்தின் இயக்கத்தில் ’ஆசை’ படத்தில் நடித்து, 'ஆசை நாயகன்’என பெண்களால் ஈர்க்கப்பட்டார். இப்படத்தின்மூலம் அஜித்துக்கு ஏராளமான பெண் ரசிகைகள் கிடைத்தனர் எனலாம்.

அதன்பின் அஜித்துக்கு ஏறுமுகம் தான். அடுத்த ஆண்டான 1996ஆம் ஆண்டு மட்டும் வான்மதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, காதல் கோட்டை ஆகியப்படங்கள் ரிலீஸாகின. இதில், இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் வெளிவந்த ’காதல் கோட்டை’ திரைப்படம் 250 நாட்கள் ஓடி, மிகப்பெரிய ஹிட்டானது. அதுமட்டுமின்றி, இப்படம் சிறந்த படமாகவும், இயக்கத்துக்காகவும் தேசிய விருதை வென்றது. பாடல்களும் தேவாவின் இசையில் பட்டையைக் கிளப்பின.

1997ஆம் ஆண்டு அஜித் நடித்த 5 திரைப்படங்கள் வெளியாகின. இதில் முரளி அப்பாஸ் இயக்கத்தில் வெளியான ’ராசி’ படமும், அமிதாப் பச்சன் தயாரிப்பில் ஜே.டி. ஜெர்ரி இயக்கத்தில் உருவான ‘உல்லாசம்’ படமும் நல்ல பெயரைப் பெற்றது. ‘ ரெட்டை ஜடை வயசு’ திரைப்படம் அஜித்தின் கேரியரில் சிறந்த காமெடி படமாக மாறியது.

1998ஆம் ஆண்டு, சரண் எழுதி இயக்கி உருவாக்கிய ‘காதல் மன்னன்’, சிம்ரனுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்து அஜித் நடித்த ‘அவள் வருவாளா’ திரைப்படமும் ஆல்பமாகவும், படமாகவும் சக்ஸஸ் ஆகின. குறிப்பாக, மிகப்பெரிய ஆண் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கித்தந்தது.

அதன்பின், சரியான வெற்றிப்படம் இன்றி தவித்த அஜித்துக்கு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான், வாலி. இப்படம் திரையரங்குகளில் 270 நாட்கள் ஓடி மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் ஆனது. இப்படத்தில் நடித்ததற்காக முதல் ஃபிலிம்பேர் விருதினை வென்றார், அஜித் குமார். இப்படம் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.

அஜித் தனது 25ஆவது படமான '’அமர்க்களம்’’ படத்தில் நடித்தபோது தான், தன் மனைவி ஷாலினியிடம் காதலில் விழுந்தார். இந்த ஜோடிக்கு 1999ஆம் ஆண்டு திருமணமாகி, அனோஸ்கா மற்றும் ஆத்விக் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

அதன்பின், முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், அசோகா, ரெட், வில்லன், அட்டகாசம், பரமசிவன், திருப்பதி, வரலாறு, பில்லா, ஏகன், மங்கத்தா ஆகியப் படங்கள் அஜித்தின் கேரியரில் முக்கியப் படங்களாக அமைந்தன. 50ஆவது படமான மங்கத்தா, அஜித்தின் படங்களிலேயே அப்போது அதிக வசூல்பெற்ற படமாகத் திகழ்ந்தது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். அஜித்தை வெறுப்பவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்பின் ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகியப் படங்கள் அஜித்துக்கு மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் படங்களாக அமைந்தன. அஜித், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் 2025ஆம் ஆண்டு திரைக்கு வரும் எனத்தெரிகிறது.

திரைத்துறையில் நடிப்பது மட்டுமில்லாமல், ஒரு பெர்ஷனல் வாழ்க்கையினை எப்படி சக்சஸ்ஃபுல்லாக கொண்டு செல்வது, எப்படி பிறருக்கு எல்லாம் உதவுவது என்பது வரை வாழ்ந்துகாட்டும் உதாரணமாகத் திகழும் அஜித் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.