உணர்வுபூர்வமான குடும்ப கதை.. சர்ப்ரைஸ் விஷயங்கள் - 96 இரண்டாம் பாகம் கதைக்களம் எப்படி இருக்கும்?
காதல் இல்லாமல் குடும்பம அமைப்பில் உணர்வுப்பூர்வமான கதையாக 96 இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. மேலும் படத்தில் சில சர்ப்ரைஸ் ஆன விஷயங்களும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2018இல் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த காதல் காவியாக 96 படம் உள்ளது. பலராலும் கொண்டாடி தீர்க்கப்பட்ட இந்த படம் தெலுங்கு, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது.இதன் கன்னட பதிப்பில் நடிகை பாவனாவும், தெலுங்கு பதிப்பில் சமந்தாவும் ஹீரோயின்களாக நடித்திருப்பார்கள்.
இந்த படம் இந்தியிலும் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆறு ஆண்டுகள் கழித்து 96 படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்போவதாக முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கான கதை பற்றி முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
96 இரண்டாம் பாகம் கதைக்களம்
96 படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இரண்டமாக பாகம் படத்தின் கதைக்களம் சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களில் நடக்கும். படத்தை ஐசரி கணேசின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளார் கூறப்படுகிறது. அத்துடன் முதல் பாகத்தில் கதையின் நாயகியான த்ரிஷா தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களை சந்திப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருவதாக கதை அமைந்திருக்கும். மேலும் படத்தில் கூடுதலாக சில சர்ப்ரைஸ் விஷயங்களும் இடம்பிடித்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது
ஆனால் இப்போது இரண்டாம் பாகம் வெளிநாட்டிலேயே நடக்கும் விதமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் சேதுபதி, த்ரிஷாவை தேடி வெளிநாட்டுக்கு செல்லும் விதமாகவும் அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் பழைய காதல் பூக்கும் விதமாகவும் கதை இருக்கலாம் என ரசிகர்கள் தங்களது சிந்தனையை கதையாக உருவாக்கி 96 இரண்டாம் பாகம் குறித்து பகிர்ந்து வருகிறார்கள்.
உணர்வுபூர்வமான கதை
மெய்யழகன் ரிலீஸ் சமயத்தில், 96 முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் காதலை மையப்படுத்தி இருக்குமா என இயக்குநர் பிரேம்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இல்லை. 96 படத்தின் 2ம் பாகம் காதலை மையப்படுத்தி இருக்காது. இரண்டாம் பாகத்துக்கான கதை குடும்ப அமைப்பை சுற்றி நடக்கும் வண்ணம் எழுதியுள்ளேன்.
மேலும், இந்தப் படம் குடும்ப பிரச்னைகளை பேசும் ஓர் உணர்வுப் பூர்வமான கதையாக இருக்கும் என்று கூறினார்.
காவியமான 96 திரைப்படம்
காதல், பிரிவு, வலி, ஏக்கம், ஆசை என அனைத்தையும் ஒருசேர அளித்து சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட திரைப்படமாக 96 அமைந்திருந்தது.
பள்ளி கால காதலை மையப்படுத்திய இந்தப் படத்தில் பள்ளியில் படிக்கும் விஜய் சேதுபதி, த்ரிஷா கேரக்டரில் ஆதித்யா - கௌரி கிஷன் ஆகியோர் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசையில் படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத கல்ட் கிளாசிக் காதல் படமாக மாறியிருக்கும் 96 இரண்டாம் பாகம் மீது நீண்ட காலமாகவே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
96 படத்துக்கு வெற்றிக்கு சிறிய இடைவெளி விட்டு கார்த்தி - அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் பிரேம் குமார். 96 போல் உணர்வுபூர்வமான கதையாகவும், உறவின் மகத்துவத்தை சொன்ன படமாகவும் மெய்யழகன் இருந்தது.
கார்த்தி - அரவிந்த் சாமி இடையிலான ப்ரோமேன்ஸ் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தமிழ் சினிமாவில் புதுமையாக இருந்தது. இந்த படத்துக்கு பிறகு தற்போது 96 இரண்டாம் பாகத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார் பிரேம்குமார்.
டாபிக்ஸ்