Anandha Jodhi: எம்ஜிஆருடன் தேவிகா இணைந்த ஒரே படம்..கமல்ஹாசனும் இதில் உண்டு!
ஆனந்த ஜோதி திரைப்படம் முழுவதும் வெளியாகி 60 ஆண்டுகளாகின்றன
தமிழ் சினிமாவை எத்தனையோ நடிகர்கள் ஆட்சி செய்தனர். அப்படி தமிழ் சினிமாவையும், தமிழ்நாட்டையும் ஆட்சி செய்தவர்தான் எம்ஜிஆர். இவர் நடித்த 90% படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன.
எம்ஜிஆரின் தாரக மந்திரம் கதை தேர்வும், திரைப்படத்தின் பாடல்களும் தான். அவருடைய படத்தின் கதைகள் அனைத்தும் ஏழை மக்களை நோக்கியே இருக்கும். கடைக்கோடி மக்கள் வரை இவரது திரைப்படத்தின் கதைகள் அனைவருக்கும் புரியும்.
அந்த அளவிற்குத் திரைக் கதையைச் சரியான முறையில் கையாளத் தெரிந்தவர் எம்ஜிஆர். அப்படிப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் ஆனந்த ஜோதி.
கதை
ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் எம்ஜிஆர். அந்த ஊரில் முக்கிய புள்ளியாக இருப்பவரின் மகளான தேவிகாவை எம்ஜிஆர் காதலிக்கிறார். அந்த முக்கிய புள்ளியின் நண்பராக நடிகர் வீரப்பன் இருந்து வருகிறார். எம்ஜிஆர் சிறுவயதாக இருக்கும் பொழுது அந்த முக்கிய புள்ளி எம்ஜிஆரின் தந்தையை ஏமாற்றிவிட்டு மொத்த சொத்தையும் எடுத்துக் கொள்கிறார்.
இது எம்ஜிஆருக்குத் தெரியாது. வேலைக்கு வந்த பிறகு அந்த ஊரில் இருக்கும் தேவிகாவைக் காதலிக்கிறார் அவரும் எம்ஜிஆரைக் காதலிக்கிறார். இருவரும் ஒரு முக்கியமான தருணத்தில் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால் வேலையை விட்டு எம்ஜிஆர் அங்கிருந்து வெளியேறுகிறார்.
எம்ஜிஆர் தனது வீட்டில் இருக்கும் பொழுது ஒரு கொள்ளை கூட்டத்திலிருந்து தப்பித்த திருடர் ஒருவர் எம்ஜிஆர் வீட்டிற்கு வருகிறார். வீட்டுக்கு வந்தவர் மிகவும் அசதியாக இருந்ததால், இருங்கள் உங்களுக்குக் குடிக்க ஏதாவது எடுத்து வருகிறேன் என எம்.ஜி.ஆர் உள்ளே செல்கிறார். அப்போது அந்த கொள்ளை கூட்டம் எம்ஜிஆர் வீட்டிற்கு வந்து பதுங்கி இருந்த திருடனைக் கொலை செய்கின்றனர்.
உடனே அந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி விடுகின்றன. இதனால் இந்த கொலைப் பழி எம்ஜிஆர் மீது விழுகிறது. அதன் பின்னர் எம்ஜிஆர் அந்த கொள்ளை கும்பலைக் கண்டுபிடித்து தான் ஒரு நிரபராதி என நிரூபிப்பது தான் படத்தின் மீதிக் கதையாகும்.
திரைப்படத்தின் வெற்றி பற்றி எடுத்துக் கூற தேவையில்லை. திரையரங்குகளை விட்டு நகர மாட்டேன் என அடம்பிடித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தன.
படத்தின் சிறப்பு
வில்லன் நடிகரான பி.எஸ்.வீரப்பா இந்த திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். நடிகை தேவிகாவும், எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் இதுதான். நடிகர் கமல்ஹாசனும், எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் இதுதான். சிறுவனாக நடிகர் கமலஹாசன் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் 1964 ஆம் ஆண்டு தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு டொங்கா பங்கரம் என வெளியிடப்பட்டது.
இந்த திரைப்படம் 1963 ஆம் ஆண்டு ஜூலை 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இன்றுடன் இந்த திரைப்படம் வெளியாகி 60 ஆண்டுகளாகின்றன. கதாநாயகன் கதாநாயகி பெயரை வைத்து திரைப்படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா இருக்கும் வரை அணையா ஜோதியாக இந்த ஆனந்த ஜோதி இருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்