Paarvai Ondre Podhume : காதல் தெய்வீகமானது.. நட்பு தூய்மையானது.. பாடல்கள் செம ஹிட்..23 ஆம் ஆண்டில் பார்வை ஒன்றே போதுமே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Paarvai Ondre Podhume : காதல் தெய்வீகமானது.. நட்பு தூய்மையானது.. பாடல்கள் செம ஹிட்..23 ஆம் ஆண்டில் பார்வை ஒன்றே போதுமே!

Paarvai Ondre Podhume : காதல் தெய்வீகமானது.. நட்பு தூய்மையானது.. பாடல்கள் செம ஹிட்..23 ஆம் ஆண்டில் பார்வை ஒன்றே போதுமே!

Divya Sekar HT Tamil
Mar 16, 2024 05:40 AM IST

23 Years of Paarvai Ondre Podhume : இப்படத்திற்கு கதை ஒரு பலம் என்றால், படத்தின் பாடல்கள் மிகப்பெரிய பலமாக இருந்த்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பரணி இசையமைத்து மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

பார்வை ஒன்றே போதுமே
பார்வை ஒன்றே போதுமே

காதலர் தின குணாலை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. காதலர் தினம் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்து மிகப் பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் பார்வை ஒன்றே போதுமே. இப்படத்தின் மூலம் அவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது என்றே சொல்லலாம். இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நாயகிகளில் ஒருவரான சிம்ரனின் தங்கை மோனல் நாயகியாக நடித்திருப்பார்.

தமிழ் சினிமாவில் இவரும் சிறிது காலம் என்றாலும் ஒரு கலக்கு கலக்கினார் என்றே சொல்லலாம். சினிமாவில் கொடிக்கட்டி பறக்க வேண்டிய நடிகர் குணாலும், நடிகை மோனலும் தற்கொலை செய்து கொண்டு இறந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 90ஸ் இளைஞர்களால் இந்த படத்தை மறக்க முடியாது.

இரு நண்பர்கள் ஒரு பெண்ணை காதலிக்கிறார்கள். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. எப்படி நட்பையும் காதலையும் சரியான முறையில் கையாள்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை களம். இப்படத்தில் வினோத், மனோஜ் ஆகியோர் சிறந்த நண்பர்கள். மனோஜ் வினோத்துக்கு தனது மூன்று நட்சத்திர விடுதியில் மேலாளர் பணியை அளிக்கிறார். இவர்கள் இருவரும் நீதாவை காதலிக்கிறார்கள். ஆனால் நீதா வினோத்தை காதலிக்கிறாள். இது நண்பர்களின் நட்பில் விரிசலை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனை காரணமாக மனோஜ் வினோத்தை மேலாளர் பணியிலிருந்து நீக்குகிறார். இதன் இந்த பிரச்சனையை எப்படி சமாளித்து வெளிவருகிறார்கள் என்பது தான் படம்.

வினோத் என்ற கதாபாத்திரத்தில் குணாலும், நீதா என்ற கதாபாத்திரத்தில் மோனலும், மனோஜாக கரணும், விசாலட்சியாக பாத்திமா பாபு அதவாது வினோத்தின் தாய், குருவாக வையாபுரியும், முருகனாக பாலு ஆனந்தும் நடித்து இருப்பார்கள். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய வெற்றியைக் கண்டன. இப்படத்தில் இடம்பெற்ற ‘நீ பார்த்துட்டு போனாலும் பாக்காம போனாலும் நான் பாத்துகிட்டே தான் இருப்பேன்’ என்கின்ற பாடல் செம ஹிட். அனைவரையும் ஈர்க்கும் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

அதே போல இப்படத்தில் இடம்பெற்ற, ’துளித் துளியாய் கொட்டும் மழை துளியாய்’,’திருடிய இதயத்தைத் திருப்பி கொடுத்துவிடு காதலா’’திரும்ப திரும்ப பார்த்து பார்த்து’’என் அசைந்தாடும் காற்றுக்கு’ காதல் பாடல்கள் அனைத்தும் காதலர்களின் நீங்கா நினைவு பெற்ற பாடல் என்றே சொல்லலாம். இன்று வரை இந்த பாடல்களை கேட்டு மயங்காதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இப்பாடல் அனைவரையும் தன்வசப்படுத்தும்.

இப்படத்திற்கு கதை ஒரு பலம் என்றால், படத்தின் பாடல்கள் மிகப்பெரிய பலமாக இருந்த்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பரணி இசையமைத்து மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார். காதல், நட்பு இரண்டையும் விட்டுக் கொடுக்காமல் சரியான முறையில் இயக்குநர் முரளி கிருஷ்ணா இப்படத்தை கையாண்டு இருக்கும் விதம் அருமையாக இருக்கும். அதுவே இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.

இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகிறது. இப்படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் இன்று இந்த உலகத்தில் இல்லை என்றாலும் அவர்களின் படைப்புகள் என்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த பார்வை ஒன்றே போதுமே. காதல் தெய்வீகமானது ஆனால் நட்பு தூய்மையானது என்பதை உணர்த்தும் படம் தான் பார்வை ஒன்றே போதுமே.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.