Loksabha Election 2024: ’நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேதி குறித்த தேர்தல் ஆணையம்’ என்ன தேதி தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Loksabha Election 2024: ’நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேதி குறித்த தேர்தல் ஆணையம்’ என்ன தேதி தெரியுமா?

Loksabha Election 2024: ’நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேதி குறித்த தேர்தல் ஆணையம்’ என்ன தேதி தெரியுமா?

Kathiravan V HT Tamil
Published Jan 23, 2024 02:03 PM IST

“Loksabha Election 2024: இந்தியாவை பொறுத்தவரை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கி மே மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் வழக்கமாக கொண்டுள்ளது”

தேர்தல் வாக்குப்பதிவுக்கு இயந்திரங்களை தயார் செய்யும் அதிகாரிகள் - கோப்புப்படம்
தேர்தல் வாக்குப்பதிவுக்கு இயந்திரங்களை தயார் செய்யும் அதிகாரிகள் - கோப்புப்படம் (PTI)

இந்தாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெறுவது வழக்கம். பாதுகாப்பு பிரச்னைகள் அதிகம் உள்ள ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களுக்கு தனி கவனம் செலுத்தும் வகையில் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்கிறது. 

இதன் அடிப்படையில் தேர்தலானது 5 முதல் 7 கட்டங்கள் வரை தேதிகள் முடிவு செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுவது வழக்கம். இந்தியாவை பொறுத்தவரை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கி மே மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் வழக்கமாக கொண்டுள்ளது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பை மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடுவது வழக்கம்.

மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள வரைவுத் திட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஏற்றவாறு முடிக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த பணிகளை கடந்த 2 மாதங்களாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாநிலத் தேர்தல் ஆணையர்களுடன் தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் அளித்து வருகிறது. 

தமிழ்நாட்டை பொறுத்தவரை இறுதி வாக்காளர் பட்டியலை நேற்றைய தினம் (22-01-2023) அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 கோடியே 03 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்களும், 8,294 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 612 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 140 பேர் ஆவர். தற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 624 பேர் உள்ளனர்.

2.01.2024 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 3,480 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 71 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் சிறப்பு சுருக்க முறைத்திருத்த காலத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.