Tamilisai Soundarajan: ’200 சவரன் தங்கம்! டெம்போ ட்ராவலர்!’ முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனின் சொத்து மதிப்பு இதோ!
”தனது கணவர் சௌந்தராஜன் பெயரில் 3 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் தனது வேட்புமனுவில் தமிழிசை சவுந்தராஜன் குறிப்பிட்டுள்ளார்”

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தராஜன் தன்னிடம் 200 சவரன் நகையும் டெம்போ ட்ராவலரும் உள்ளதாக தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
தென் சென்னை வேட்பாளர்கள்
தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனுத்தாக்கல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.