டபிள்யூபிஎல் 2025: முதல் முறையாக எலிமினேட்டர் போட்டி.. 6 தொடர் தோல்வி! மும்பைக்கு பலத்த அடி தரும் முனைப்பில் குஜராத்
டபிள்யூபிஎல் 2025: கடந்த 4 நாள்களில் மூன்றாவது போட்டியில் களமிறங்குகிறது மும்பை இந்தியன்ஸ். முதல் முறையாக எலிமினேட்டரில் களமிறங்கும் குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை அணிக்கு எதிராக பெற்ற 6 தொடர் தோல்வி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கு வகையில் பலத்த அடியை திருப்பி கொடுக்கும் முனைப்பில் விளையாடலாம்.

டபிள்யூபிஎல் 2025 தொடரின் எலிமினேட்டர் போட்டி மும்பை இந்தியன்ஸ் மகளிர் - குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே மும்பை பார்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
லீக் சுற்று முடிவில் மும்பை இந்தியன்ஸ் மகளில் 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்ற இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் ஜெயண்ட்ஸ் 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளை பெற்று 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் தனது முந்தைய போட்டியில் ஆர்சிபி மகளிர் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. குஜராத் ஜெயண்ட்ஸ் தனது முந்தைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிராக தோல்வியடைந்தது. இதையடுத்து எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதும்.
2023இல் தொடங்கப்பட்ட டபிள்யூபிஎல் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. கடந்த சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்த நிலையில் எலிமினேட்டர் போட்டியில் வெளியேறியது.
குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை முதல் இரண்டு சீசன்களிலும் 5வது இடத்தை பிடித்த நிலையில், இந்த சீசனில் விஸ்வரூபம் எடுத்து முதல் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியதுடன் முதல் முறையாக எலிமினேட்டர் போட்டியில் களமிறங்க இருக்கிறது.
பீல்டிங்கில் முன்னேற்றம் தேவை
இந்த வாரம் திங்கள் கிழமை நடந்த போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ், பின்னர் செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக தோல்வியுற்றது. மும்பை தோல்விக்கு முக்கிய காரணமாக மோசமான பீல்டிங் அமைந்தது. நான்கு கேட்ச்களை மும்பை பீல்டர்கள் தவறவிட்டனர்.
எனவே பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் பீல்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளது. இந்த வாரத்தில் நான்கு நாள்களில் மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் இன்று களமிறங்க இருக்கிறது.
முதல் வெற்றிக்கு குறி
குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை முதல் 4 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டும் பெற்றது. அடுத்து திடீர் விஸ்வரூபம் எடுத்து குஜராத் ஹாட்ரிக் வெற்றியை பெற்று ஆர்சிபி, யுபி வாரியர்ஸ் அணியை ப்ளேஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றியதோடு, முதல் முறையாக எலிமினேட்டர் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு வரும் குஜராத் அணி அதை எலிமினேட்டர் போட்டியிலும் தொடரவே முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் டபிள்யூபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளுக்கு இடையிலான 6 மோதலில், குஜராத் அணி ஒரு முறை கூட மும்பை இந்தியன்ஸ் மகளிருக்கு எதிராக வெற்றி பெற்வில்லை. எனவே வெற்றிக்கான தாகம் அதிகமாக இருக்கும் குஜராத் முதல் வெற்றியை குறி வைத்து, அதன் மூலம் மும்பை அணிக்கு பலத்த அடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்கும்.
டாப் வீராங்கனைகளுக்கு இடையே போட்டி
இந்த சீசனில் 200 ரன்களும், 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த ஆல்ரவுண்டர்களுமான நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹேய்லே மேத்யூஸ் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியில் உள்ளார்கள். அதேபோல் இதை நிகழ்த்திய மாற்றொரு வீராங்கனையான ஆஷ்லே கார்டனர் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் விளையாடுகிறார்.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களாக அமெலியா கெர், ஹேய்லே மேத்யூஸ் உள்ளார்கள். இவர்கள் இருவரும் தலா 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக 10 விக்கெட்டுகள் எடுத்திருக்கும் கேசவி கெளதம் உள்ளார்.
அத்துடன் டபிள்யூபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் (559), அதிக விக்கெட்டுகள் (25) வீழ்த்தியவராக ஆஷ்லே காட்ர்டனர் குஜராத் அணியின் கேப்டனாக உள்ளார். எனவே டாப் வீராங்கனைகளுக்கு இடையிலான மோதலாக இந்த போட்டி அமைந்துள்ளது.

டாபிக்ஸ்