ஐபிஎல் 2025: ஏலத்தின் போது நாங்கள் தவறு செய்துவிட்டோம் - ஒப்புக்கொண்ட பிளமிங்
மற்ற அணிகள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இங்குதான் ஏலத்தின் போது சரியாக செயல்பாடதது குறித்த பிரச்னை வருகிறது. எனவே நாங்கள் ஒரு விஷயத்தை சரியாகச் செய்ய முடியாதபோது, எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறினார்.

ஐபிஎல் 2025 தொடர் மிகவும் மோசமானதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு அமைந்துள்ளது. தொடர் தோல்விகள், கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறியது, முக்கிய வீரர்களின் மோசமான செயல்பாடு போன்றவை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் இந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் இருந்து வருவதுடன், ப்ளேஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட கை நழுவி போயுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸின் தொடர்ச்சியான தோல்வியால் வருத்தமடைந்து இருக்கு் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், சில மாதங்களுக்கு முன்பு நடந்த மெகா ஏலத்தில் சில தவறுகளைச் செய்திருக்கலாம் என்றும், இதன் காரணமாக சரியான அணியை தயார் செய்ய முடியவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ஐந்து முறை சாம்பியனான சென்னை அணிக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில், 7 தோல்வி, 2 வெற்றியை மட்டும் பெற்றுள்ளது. அதிலும் உள்ளூர் மைதானமாகவும், சிஎஸ்கே அணியின் கோட்டையாகவும் இருந்து வந்த சேப்பாக்கத்தில் நான்கு தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.
ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே தோல்வியை தழுவியது. ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய இந்த போட்டியில் தோல்விக்குப் பிறகு ஃப்ளெமிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தோல்வி பற்றி சொல்வது கடினமான விஷயம். நாங்கள் காட்டிய செயல்திறனில் இது முற்றிலும் சரியானது என்றாலும், எங்கள் விளையாட்டு பாணியைப் பற்றி விரிவாக யோசித்து வருகிறோம்.
மாற்றத்துக்கு ஏற்ப மாறுவது எளிதானது கிடையாது
கிரிக்கெட் போட்டி விளையாட்டு எவ்வாறு உருமாறி வருகிறது என்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்வது எளிதான விஷயமல்ல. எங்கள் செயல்திறனில் நீண்ட காலமாக நிலைத்தன்மையைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்ததால் தான் நாங்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். அத்துடன் எங்களது ஆட்டத்திறன் வேறு பாதையில் செல்லவும் அதிக நேரம் எடுக்காது
ஏலத்தின் போது தவறுகள் செய்துள்ளோம்
மற்ற அணிகள் எங்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இங்குதான் ஏலம் குறித்த பிரச்னை வருகிறது. அதை எங்களால் சரிசெய்ய முடியவில்லை. எனவே எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்க வேண்டும். ஏலம் என்பது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வை ஏற்படுத்தும். அது ஒரு எளிதான காரியம் அல்ல. ஆனால் நாங்கள் இன்னும் ஒரு நல்ல அணியைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்று நான் நம்புகிறேன்''
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இனி எஞ்சியிருக்கும் 5 போட்டிகளில் வெற்றியை பெற்றாலும், நல்ல நெட் ரன் ரேட் வைத்திருக்க வேண்டும். அத்துடன் மற்ற அணிகளின் முடிவை பொறுத்த ப்ளேஆஃப் வாய்ப்பை பெறலாம். இருப்பினும் இந்த சீசனில் ப்ளேஆஃப் ரேஸில் இருந்து வெளியேறப்போகும் முதல் அணியாக சிஎஸ்கே இருக்கும் என்றும் பரவலாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
சிஎஸ்கே தனது அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் வைத்து எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

டாபிக்ஸ்