எல்லை பதற்றத்திற்கு மத்தியில் ஐபிஎல் தொடரை முடிக்குமா பிசிசிஐ? சவுரவ் கங்குலி சொல்வது என்ன?
கொரோனா காலங்களில் பிசிசிஐ தலைவராக இருந்த தனது அனுபவங்களை சுட்டிக் காட்டி, தற்போது ஐபிஎல் 2025 தொடரை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது என்பது குறித்து சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025 தொடரின் எதிர்காலம் தற்போது தெளிவாக இல்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக எல்லை தாண்டிய மோதல்கள் ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக பிசிசிஐ ஒரு வாரத்திற்கு லீக் போட்டிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்தது. ஐபிஎல் 2025 எப்போது அல்லது எங்கு விளையாடப்படும் என்பது குறித்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
நிச்சயம் ஐபிஎல் தொடர் நடக்கும்
இருப்பினும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி மீண்டும் தொடங்கும் என்று உறுதியாக நம்பினார். விரைவில் போட்டிகள் நடைபெறுவதை தேசிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
2020-21 ஆம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தடைபட்ட ஐபிஎல் சீசன்களை தனது பதவிக்காலத்தில் நடத்தியதை கங்குலி சுட்டிக்காட்டினார். இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில், “2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனாவால் நிறைய பிரச்சினைகள் இருந்தபோதிலும், ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. பிசிசிஐ மிகவும் திறமையானது, அவர்கள் நிச்சயமாக ஐபிஎல் தொடரை முடிப்பார்கள்” என்று அவர் நம்பிக்கையாக கூறினார்.
போட்டி நீட்டிக்கப்படும்
ஐபில் தொடரை நடத்த ஒரு வாரம் தாமதம் ஏற்பட்டாலும், போட்டியை முடிக்க பிசிசிஐக்கு போதுமான அதிகாரம் உள்ளது என்றும் கங்குலி கூறினார். இடைநிறுத்தப்பட்ட பிபிகேஎஸ் vs டிசி அணிகளுக்கு இடையேயான போட்டி மற்றும் நான்கு பிளேஆஃப் ஆட்டங்கள் உட்பட 17 போட்டிகள் இன்னும் ஐபிஎல் தொடரில் விளையாடப்பட உள்ளன. “பிசிசிஐ நிச்சயமாக ஐபிஎல் தொடரை முடிக்கும். 7 நாட்கள் தாமதம் ஆனதால், தேவைப்பட்டால் போட்டி 7 நாட்கள் வரை நீட்டிக்கப்படும்” என்றார்.
கொரோனா போன்ற ஒரு நிலைமை
இந்தப் போட்டிகள் நிறுத்தப்பட்டது கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நிறுத்தங்களுக்கு இணையானதல்ல என்று கங்குலி வாதிட்டார். அந்த இரண்டு சீசன்களிலும் ஐபிஎல் செப்டம்பர்-அக்டோபரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
ஆனால், நெருக்கடி மற்றும் மோதல் சூழ்நிலைகளில் பிசிசிஐ அமைப்பு, அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி போட்டிகள் நடத்தப்பட்டன. கோவிட் போன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது” என்று கங்குலி கூறினார்.
நாடு திரும்பும் வீரர்கள்
போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதை உறுதி செய்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது. இதனால் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தற்காலிகமாக தங்கள் நாடுகளுக்குத் திரும்ப உள்ளனர். தெற்காசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த ஆசியக் கோப்பைக்கு பதிலாக மீதமுள்ள போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
