Video: ‘யார் உங்களுக்குச் சொன்னது? பிசிசிஐ சொன்னதா?’ செய்தியாளரிடம் கடுப்பான ரோஹித் சர்மா!
2024/25 சீசனில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு பிசிசிஐ வெளியிட்ட 10 உத்தரவுகள் குறித்த கேள்விக்கு ரோகித் சர்மா பதிலளிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும் அகர்கரிடம் அது தொடர்பாக, தன்னுடைய அதிருப்தியை அவர் வெளியிட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.

சுற்றுப்பயணங்களின் போது வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான விதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செயல்படுத்துவது குறித்த செய்திகளைப் பற்றி பேச, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மறுத்துவிட்டார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டபடி, "சுற்றுப்பயணங்கள் மற்றும் தொடர்களின் போது ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் நேர்மறையான அணியின் சூழலை மேம்படுத்துவதோடு, தொழில்முறை தரநிலைகள் மற்றும் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வதற்காக" கிரிக்கெட் வாரியம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, சுற்றுப்பயணத்தின் போது குடும்பத்தினரை அழைத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
1997 க்குப் பிறகு முதல் முறையாக இலங்கைக்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற வகையில் வரலாறு காணாத ஒயிட்வாஷ் தோல்வியை பெற்றது. அதன் பின், முதல் முறையாக பார்டர்-கவாஸ்கர் டிராபியை இழந்தது ஆகியவற்றை உள்ளடக்கிய 2024/25 சீசனில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு இந்த உத்தரவு வந்தது.
கடுப்பான ரோஹித் சர்மா
இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ள ஒருநாள் தொடர் மற்றும் மிக முக்கியமாக, 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியை ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் அறிவித்தனர். அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த உத்தரவு குறித்து ஒரு நிருபர் ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பியபோது, “இந்த விதிகளைப் பற்றி உங்களுக்கு யார் சொன்னது? பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ தகவலாக இது வந்ததா? அது அதிகாரப்பூர்வமாக வரட்டும்,” என்று ரோகித் சர்மா பதில் கூறினார்.
‘இது பள்ளிக்கூடம் அல்ல.. இது தண்டனை அல்ல,’
செய்தியாளர் சந்திப்பில் முன்னதாக அகர்கரும் இந்த விவகாரம் குறித்துப் பேசினார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகர்கர் இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டார், இருப்பினும், பெரும்பாலான விதிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன என்றும் அவர் கூறினார். "ஒவ்வொரு அணியிலும் சில விதிகள் உள்ளன என்று நினைக்கிறேன். கடந்த சில மாதங்களில் நீங்கள் பார்த்த பல்வேறு விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசியுள்ளோம், அங்கு நீங்கள் ஒரு அணியாக மேம்படுத்தலாம், அங்கு நீங்கள் ஒரு அணியாக சற்று நெருக்கமாகலாம். இது பள்ளிக்கூடம் அல்ல. இது தண்டனையும் அல்ல," என்று அகர்கர் கூறினார்.
"சில விதிகள் நடைமுறையில் உள்ளன, நீங்கள் தேசிய அணிக்காக விளையாடும்போது அந்த விதிகளைப் பின்பற்றுகிறீர்கள், அவ்வளவுதான். மீண்டும், இவர்கள் முதிர்ச்சியடைந்த நபர்கள். சர்வதேச விளையாட்டில் அவர்கள் தங்கள் சொந்த உரிமைகளில் சூப்பர் ஸ்டார்கள்," என்றும் அப்போது அகர்கர் கூறினார்.

டாபிக்ஸ்