ஐபிஎல் 2025: 100வது அரைசதமடித்த கோலி.. ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய ஆர்சிபி! புள்ளிப்பட்டியலில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்
ஐபிஎல் 2025: டி20 போட்டிகளில் 100வது அரைசதமடித்துள்ளார் விராட் கோலி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நிதான ஆட்டத்தை கடைப்பிடித்த அவர் 62 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஆர்சிபி அணி இந்த சீசனில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 28வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு (ஆர்சிபி) அணிகளுக்கு இடையே ஜெயப்பூரில் நடைபெற்றது. இந்த சீசனில் முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்றொரு உள்ளூர் மைதானமான ஜெயப்பூரில் நடந்தது.
இந்த போட்டி தொடங்கும் முன் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திலும், ஆர்சிபி அணி 5 போட்டிகளில் 3 வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலும் இருந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. ஆர்சிபி அணி முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக உள்ளூர் மைதானமான பெங்களுருவில் வைத்து தோல்வியை தழுவியது. அந்த வகையில் இரு அணிகளும் தோல்வியிருந்து வெற்றிக்கு திரும்பும் விதமாக களமிறங்கின.
ஆர்சிபி அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் இந்த போட்டியில் விளையாடியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஃபரூக்கிக்கு பதிலாக ஹசரங்கா சேர்க்கப்பட்டிருந்தார்.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 175 ரன்கள் எடுத்த நிலையில், இதை சேஸ் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆர்சிபி சேஸிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோர் விரட்டிய ஆர்சிபி 17.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து, 15 பந்துகள் எஞ்சியிருக்க 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக சால்ட் 65, விராட் கோலி 62, தேவ்தத் படிக்கல் 40 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் பவுலர்களில் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட குமார் கார்த்திகேயா ஒரு விக்கெட் எடுத்தார்.
சால்ட் அதிரடி, கோலி நிதானம்
ஆர்சிபி ஓபனர்களான பில் சால்ட் - விராட் கோலி ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர். சால்ட் அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட, கோலி அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து நிதானத்தை கடைப்பிடித்தார். பவர்ப்ளே ஓவர்களில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து சிறப்பாக பேட் செய்த சால்ட் 28 பந்துகளில் அரைசதமடித்தார். தொடர்ந்து பவுண்டரிகளால் ரன்களை குவித்து வந்த சால்ட் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு சால்ட் - கோலி ஜோடி 8.4 ஓவரில் 92 ரன்கள் சேர்த்தனர்.
தேவ்தத் படிக்கல் கேமியோ
மூன்றாவது பேட்ஸ்மேனாக தேவ்தத் படிக்கல் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார். இதையடுத்து நல்ல தாக்கத்தை வெளிப்படுத்திய படிக்கல் 28 பந்துகளில் 40 ரன்கள் அடித்து சிறப்பான கேமியோ இன்னிங்ஸை விளையாடினார். அவர் தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.
இதற்கிடையே விராட் கோலி 38வது பந்தில் தனது அரைசத்ததை பூர்த்தி செய்தார். டி20 கிரிக்கெட்டில் இவர் அடித்த 100வது அரைசதமாக அமைந்துள்ளது. கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த கோலி 45 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார். தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி , 2 சிக்ஸர்களை அடித்தார்.
பேட்டிங்கில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஆர்சிபி முதல் 10 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 101 ரன்கள் எடுத்தது. அதன் பின்னரும் தேவைப்படும் ரன்ரேட்டை குறையவிடாமல் கட்டுக்குள் வைத்துக்கொண்டு வெற்றியை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7வது இடத்துக்கு கீழே இறங்கியது.
