ஐபிஎல் 2025: அதிரடியில் மிரட்டிய ஜெய்ஸ்வால்.. ஜூரல் கேமியோ! ராஜஸ்தான் அணியை நன்கு கட்டுப்படுத்திய ஆர்சிபி பவுலர்கள்
ஐபிஎல் 2025: ஒரு பக்கம் ஜெய்ஸ்வால் மட்டும் அதிரடியில் மிரட்ட, ராஜஸ்தான் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் குவிக்க தவறினர். ஆர்சிபி பவுலர்கள் சிறப்பாக பந்து ராஜஸ்தான் அணியினரை 200 ரன்களுக்கு மேல் அடிக்க விடாமல் நன்கு கட்டுப்படுத்தினர்.

ஐபிஎல் 2025 தொடரின் 28வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு (ஆர்சிபி) அணிகளுக்கு இடையே ஜெயப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்றொரு உள்ளூர் மைதானமான ஜெயப்பூரில் நடக்கிறது.
இந்த போட்டி தொடங்கும் முன் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி 5 போட்டிகளில் 3 வெற்றி 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. ஆர்சிபி அணி முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக உள்ளூர் மைதானமான பெங்களுருவில் வைத்து தோல்வியை தழுவியுள்ளது. தோல்வியிருந்து வெற்றிக்கு திரும்பும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் களமிறங்கியுள்ளன.
ஆர்சிபி அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஃபரூக்கிக்கு பதிலாக ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆர்சிபி பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ராஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 75, துருவ் ஜூரல் 35, ரியான் பராக் 30 ரன்கள் அடித்துள்ளனர்.
ஆர்சிபி பவுலர்களில் புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹசில்வுட். க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர். இம்பேக் வீரராக களமிறக்கப்பட்ட சுயாஷ் ஷர்மா விக்கெட்டுகள் எதுவும் வீழ்த்தவில்லை
ஜெயஸ்வால் அரைசதம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓபனர்கள் ஜெயஸ்வால் - சஞ்சு சாம்சன் நல்ல தொடக்கத்தை தந்தனர். பவர்ப்ளே ஓவர்களில் இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தனர்.
பொறுமையாக பேட் செய்து வந்த சஞ்சு சாம்சன் 15 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் பவுண்டரிகளாக அடித்து விரைவாக ரன்கள் எடுத்து வந்த ஜெயஸ்வால் 35 பந்துகளில் அரைசதமடித்தார்.
அதன்பிறகும் அதிரடியை தொடர்ந்த ஜெயஸ்வால் 47 பந்துகளில் 75 ரன்கள் அடித்து அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார்.
பராக், ஜூரல் அதிரடி
இதன் பிறகு மூன்றாவது பேட்ஸ்மேனான ரியான் பராக் வழக்கம்போல் அதிரடியை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 30 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார்.
முதல் போட்டிக்கு பிறகு பேட்டிங்கில் சொதப்பி வந்து துருவ் ஜூரல், இந்த போட்டியில் மீண்டும் பார்மை மீட்டெடுத்தார். கடைசி வரை களத்தில் இருந்த அவர் கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஜூரல் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார்.
முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், பின்னர் அடுத்த 10 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் அடித்துள்ளது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் 47 ரன்கள் குவித்துள்ளது.
