ஐபிஎல் 2025: ஆர்யா அதிவேக சதம்.. 5க்கும் மேற்பட்ட கேட்ச்களை விட்ட சிஎஸ்கே பீல்டர்கள்.. பவுலர்களை முடிச்சுவிட்ட பஞ்சாப்
ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் ஓபனரான பிரியானஷ் ஆர்யா பாரபட்சமின்றி அனைத்து சிஎஸ்கே பவுலர்களின் ஓவர்களிலும் சிக்ஸர்கள் பறக்கவிட்டதோடு அதிரடியாக சதமடித்தார். படுமோசமாக பீல்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 5க்கும் மேற்பட்ட கேட்ச்களை விட்டனர்.

ஐபிஎல் 2025 தொடரின் 22வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே முல்லான்பூரில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கும் முன் பஞ்சாப் கிங்ஸ் 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் நான்காவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 9வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்த சீசனில் முதல் முறையாக உள்ளூர் மைதானமான முல்லான்பூரில் களமிறங்கிய பஞ்சாப், முதல் தோல்வியையும் சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் வைத்து தோல்வியுற்றது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி பெறும் ஹார்ரிக் தோல்வியாக அமைந்தது.
இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் தோல்வியை பெற்றிருப்பதால், வெற்றி பாதைக்கு திரும்புவதற்கான போட்டியாக அமைந்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் என இரு அணிகளும் முந்தைய போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் விளையாடுகின்றன.
பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக பிரியான்ஷு ஆர்யா 103, ஷஷாங்க் சிங் ரன்கள் எடுத்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்களில் கலீல் அகமது 2, அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நூர் அகமது, முகேஷ் செளத்ரி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பிரியான்ஷ் ஆர்யா அதிரடி சதம்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓபனராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா சிஎஸ்கே பவுலர்களுக்கு தலைவலியாக இருந்தார். ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே சிக்ஸர் பறக்க விட தொடங்கினார். பாரபட்சம் இல்லாமல் சிஎஸ்கே பவுலர்களின் அனைவரின் ஓவர்களிலு பவுண்டரி, சிக்ஸர் என அடித்த விளையாடிய ஆர்யா 19 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.
அதன் பின்னர் அதிரடியை தொடர்ந்த ஆர்யா, பதிரனா வீசிய ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள், பின் ஒரு பவுண்டரி அடித்து சத்ததை பூர்த்தி செய்தார். 39 பந்துகளில் சதமடித்த ஆர்யா, ஐபிஎல் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்திய பேட்ஸ்மேன்களில் இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். 42 பந்துகளில் 103 ரன்கள் அடித்த ஆர்யா, தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்களை அடித்தார். அணியின் ஸ்கோர் 13.4 ஓவரில் 154 ரன்கள் என இருந்தபோது ஆர்யா அவுட்டானார்.
ஷஷாங்க் சிங், ஜான்சன் பினிஷ்
பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரியான்ஷ் ஆர்யா தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக பங்களிப்பு அளிக்காத நிலையில் மிடில் ஆர்டரில் பேட் செய்த ஷஷாங்க் சிங் மட்டும் கடைசி வரை நிலைத்து நின்று பேட் செய்தார். இவருடன் இணைந்து மார்கோ ஜான்சனும் கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.
இருவரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்து நல்ல பினிஷிங் கொடுத்தனர். ஷஷாங்க் சிங் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். அதேபோல் மார்கோ ஜான்சன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.
படுமோசமான பீல்டிங்
சிஎஸ்கே பவுலர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கிய வள்ளல்களாக இருந்தனர். படுமோசமான பீல்டிங் செய்த சிஎஸ்கே வீரர்கள் 5க்கும் மேற்பட்ட கேட்ச்களை டிராப் செய்தனர். சிஎஸ்கே பவுலர்களில் ஜடேஜா மட்டும் 3 ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து கட்டுப்பாடுடன் பந்து வீசினர். சிஎஸ்கே ஸ்டிரைக் பவுலரான மதிஷா பதிரனா, 4 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
