ஐபிஎல் 2025: 18 ஆண்டு தவம்.. கிடைத்தது “ஈ சாலா கப்..” கண்ணீர் விட்ட கோலி! முதல் கோப்பையை தூக்கிய ஆர்சிபி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: 18 ஆண்டு தவம்.. கிடைத்தது “ஈ சாலா கப்..” கண்ணீர் விட்ட கோலி! முதல் கோப்பையை தூக்கிய ஆர்சிபி

ஐபிஎல் 2025: 18 ஆண்டு தவம்.. கிடைத்தது “ஈ சாலா கப்..” கண்ணீர் விட்ட கோலி! முதல் கோப்பையை தூக்கிய ஆர்சிபி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Jun 03, 2025 11:52 PM IST

மிக பெரியஎதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய ஆர்சிபி முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடங்கிய 18வது சீசனில் ஆர்சிபி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் விராட் கோலி கண்ணீர் விட்டார்.

ஐபிஎல் 2025: 18 ஆண்டு தவம்.. கிடைத்தது “ஈ சாலா கப்..” கண்ணீர் விட்ட கோலி! முதல் கோப்பையை தூக்கிய ஆர்சிபி
ஐபிஎல் 2025: 18 ஆண்டு தவம்.. கிடைத்தது “ஈ சாலா கப்..” கண்ணீர் விட்ட கோலி! முதல் கோப்பையை தூக்கிய ஆர்சிபி

ஆர்சிபி ரன் குவிப்பு

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 43, பட்டிதார் 26, லிவிஸ்டன் 25 ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் பவுலர்களில் அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் 87 ரன்கள் அடித்த ஆர்சிபி, கடைசி 10 ஓவரில் 103 ரன்கள் குவித்தது. குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தபோதிலும், 5 விக்கெட்டுகளை இழந்தது.

பஞ்சாப் கிங்ஸ்

சவாலான இந்த இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷஷாங்க் சிங் 61, இங்கிலீஸ் 39 ரன்கள் அடித்தனர். ஆர்சிபி பவுலிங்கை பொறுத்தவரை க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நல்ல தொடக்கம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஓபனர்கள் பிரியான்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் நல்ல தொடக்கத்தை தந்தனர். தனது வழக்கமான பாணியில் அதிரிடியை வெளிப்படுத்திய ஆர்யா 24 ரன்கள் அடித்துவிட்டு முதல் விக்கெட்டாக அவுட்டானார். பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது. மற்றொரு ஓபனரான பிரப்சிம்ரன் சிங் 26 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.

டாப் ஆர்டரில் பேட் செய்த ஜோஷ் இங்கிலீஸ் கொஞ்சம் அதிரடி காட்டிய நிலையில் 39 ரன்கள் அடித்தார். சிக்ஸர் முயற்சியில் பவுண்டரி அருகே பிடிபட்டார்.

போராடிய ஷஷாங்க்

பஞ்சாப் கிங்ஸ் அதிரடியாக பேட் செய்யக்கூடிய நேகல் வாதிரா பேட்டிங்கில் ரன் குவிக்க தடுமாறியதுடன் 18 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்கள் மட்டும் எடுத்தார்.

களத்தில் கடைசி வரை ஒற்றை ஆளாக போராட்டத்தை வெளிப்படுத்தினார் ஷஷாங்க் சிங். ஒரு புறம் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாக பெவிலியன் திரும்பியபோதிலும், ஷஷாங்க் சிங் ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 22 ரன்கள் மட்டும் குவிக்கப்பட்ட நிலையில், ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதலாவது ஐபிஎல் கோப்பையைும் வென்றது. ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பைக்கான 18 ஆண்டு தவம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆர்சிபி பவுலர்கள் அபாரம்

ஆரம்பத்தில் கொஞ்சம் ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும் மிடில் ஓவர்களில் அபாரமாக பந்து வீசிய ஆர்சிபி பவுலர்கள், பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பேட் செய்ய தடுமாறினர்.

சிறப்பாக பவுலிங் செய்த க்ருனால் பாண்டியா 4 ஓவரில் 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அதிகபட்சமாக 12 டாட் பந்துகளை வீசினார்.