ஐபிஎல் 2025: ஒன் மேன் ஆர்மியாக வந்த கே.எல்.ராகுல்.. டெல்லி தொடர்ச்சியாக 4வது வெற்றி
ஐபிஎல் 2025: ஐபிஎல் 2025 சீசனின் 24வது மேட்ச்சில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களில் சுருண்டது. டெல்லி அணி அபாரமாக பந்துவீசி அசத்தியது. சால்ட் 37 ரன்களும், கோலி 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரஜத் படிதார் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஐபிஎல் 2025 சீசன் 18இல் நடந்த 24வது மேட்ச்சில் ஆர்சிபி அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடர்ச்சியாக இந்த சீசனில் 4வது வெற்றியை ருசித்தது டெல்லி கேபிடல்ஸ். 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி ஜெயித்தது. ஆர்சிபிக்கு இது 2வது தோல்வி ஆகும். புள்ளிப் பட்டியலில் குஜராத் முதலிடத்திலும், டெல்லி 2வது இடத்திலும் ஆர்சிபி மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ஐபிஎல் 2025 சீசனின் 24வது மேட்ச்சில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களில் சுருண்டது. டெல்லி அணி அபாரமாக பந்துவீசி அசத்தியது. சால்ட் 37 ரன்களும், கோலி 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரஜத் படிதார் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். டெல்லி தரப்பில் விப்ராஜ், குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி சேஸிங் செய்தது.
டெல்லி சார்பில் களமிறங்கிய ஃபாஃப் டூ பிளெசிஸ், ஜேக், அபிஷேக் போரல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். மூவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, கேப்டன் அக்சர் படேலும் 15 ரன்களில் நடையைக் கட்டினார். கே.எல்.ராகுல் நிதானமாக செயல்பட்டு விளையாடினார். அவர் அரை சதம் பதிவு செய்து அந்த அணிக்கு நம்பிக்கை அளித்தார். அவருக்கு ஸ்டப்ஸ் தோள் கொடுத்தார்.
இந்தக் கூட்டணியை ஆர்சிபியால் பிரிக்க முடியவில்லை. இருவரும் சேர்த்து இலக்கை எட்டி அணியை ஜெயிக்க உதவினர். 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து ஜெயித்தது டெல்லி.
கே.எல்.ராகுல், 53 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். ஸ்டப்ஸ் 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி பவுலர் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும், யஷ் தயாள், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நாளை சிஎஸ்கேவும், கொல்கத்தாவும் சென்னையில் 25வது மேட்ச்சில் மோதவுள்ளன. இந்த மேட்ச் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
டெல்லி கேப்டன் அக்சர் பேட்டி
முன்னதாக, டாஸ் வென்ற பிறகு பேசிய அக்சர், "நாங்கள் முதலில் பந்து வீசுவோம். எனது விரல்கள் நன்றாக உள்ளன, ஆனால் தேவைப்பட்டால் நான்கு ஓவர்களையும் வீசுவேன். ஃபாஃப் டூ பிளெசிஸ் ஃபிட்டாக இருக்கிறார், அவர் உள்ளே இருக்கிறார், ரிஸ்ஸி [சமீர் ரிஸ்வி] வெளியே இருக்கிறார். நாங்கள் எங்கள் ஆர்டரை முடிவு செய்துள்ளோம், கே.எல். ராகுல், மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இதில் முக்கிய பங்கு உண்டு, எங்களிடம் இரண்டு நல்ல லெக் ஸ்பின்னர்கள் உள்ளனர், அவர்கள் எங்கள் தாக்குதல் விருப்பங்கள், எங்களிடம் தற்காப்பு விருப்பங்களும் உள்ளனர், எனவே போட்டி சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் விளையாட வேண்டும்" என்று டெல்லி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்ற பின்னர் கூறியிருந்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்):
பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயால்.
டெல்லி கேபிடல்ஸ் (பிளேயிங் லெவன்): ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேக் பிரேசர்-மெக்கர்க், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோஹித் சர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

டாபிக்ஸ்