ஐபிஎல் 2025: விக்கெட்டுகள் அள்ளிய நூர் அகமது.. ரஹானே, ரசல் அதிரடியால் கொல்கத்தா ரன் குவிப்பு! சிஎஸ்கேவுக்கு கடின இலக்கு
சிஎஸ்கே ஸ்பின்னர் அபாரமாக பவுலிங் செய்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் தொடக்கத்தில் ரஹானே மற்றும் நரைன், கடைசி கட்டத்தில் ரசல் ஆகியோரின் அதிரடியால் கொல்கத்தா அணி 179 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கும் முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 11 போட்டிகளில் 2 வெற்றி, 9 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி முந்தையே போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக தோல்வியுற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சிஎஸ்கே இடையே சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்ற முந்தைய மோதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது. எனவே சிஎஸ்கே அதற்கு பதிலடி தர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க கட்டாய வெற்றியை பெற வேண்டிய போட்டியாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது.
கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக மனீஷ் பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் ஷேக் ரஷீத், சாம் கரன், தீபக் பாண்டே ஆகியோருக்கு பதிலாக உர்வில் படேல், டேவான் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் விக்கெட் இழப்புக்கு ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக ரஹானே 48, ஆண்ட்ரே ரசல் 38, மனீஷ் பாண்டே 36 ரன்கள் எடுத்துள்ளனர்.
சிஎஸ்கே பவுலர்களில் நூர் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா, அன்சுல் கம்போஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.
அதிரடி தொடக்கம்
கொல்கத்தா அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கேப்டன் ரஹானா, ஓபனர் நரைன் கொடுத்தனர். இவர்களுக்கு முன்னர் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை பறக்கவிட்ட குர்பாஸ் 11 ரன்னில் முதல் ஆளாக அவுட்டானார்.
இதன்பின்னர் சிஎஸ்கே பவுலர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் குவித்தது.
பவர்ப்ளேவுக்கு பின் நரைன், ரகுவன்ஷி ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி சிஎஸ்கே ஸ்பின்னர் நூர் அகமது திருப்புமுனை தந்தார். இதன் பின்னர் சிறப்பாக பேட் செய்து வந்த ரஹானே 33 பந்துகளில் 48 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார்.
ஆண்ட்ரே ரசல் சிக்ஸர் மழை
மிடில் ஓவர்களில் சிஎஸ்கே பவுலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில் களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் அதிரடியை வெளிப்படுத்தி ஆட்டத்தை கொல்கத்தா பக்கம் திருப்பினர்.
4 பவுண்டரி, 3 சிக்ஸர் என சிக்ஸர் மழை பொழிந்த ரசல் 21 பந்துகளில் 38 ரன்கள் அடித்த நிலையில் நூர் அகமது பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதற்கிடையே நிதானமாக விளையாடி வந்த மனீஷ் பாண்டே கடைசி வரை அவுட்டாகமல் இருந்ததுடன், 28 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.
நூர் அகமது அபாரம்
சிஎஸ்கே பவுலர்களில் ஸ்பின்னரான நூர் அகமது சிறப்பாக பவுலிங் செய்து, கொல்கத்தா பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக இருந்தார். 4 ஓவரில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல் அஸ்வின் 3 ஓவரில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் அதிகபட்சமாக 11 டாட் பந்துகளை வீசினார்.
2019க்கு பிறகு தற்போது வரை 180 ரன்களுக்கு மேலான இலக்கை சிஎஸ்கே அணி விரட்டவில்லை. அந்த வகையில் தற்போது சிஎஸ்கே அணி வெற்றி பெற 180 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதால் இது கடினமான இலக்காவே அமைந்துள்ளது.
