ஐபிஎல் 2025: தோனியின் சிக்ஸ்ர் பினிஷ்.. சிஎஸ்கேவுக்கு மூன்றாவது வெற்றி.. சிக்கலில் மாட்டிக்கொண்ட கொல்கத்தா
ஓபனில் அதிரடி காட்டிய உர்வில் படேல் நல்ல தொடக்கத்தை தர, மிடில் ஓவர்களில் டிவால்ட் பிரெவீஸ் ஒரே ஓவரில் 30 ரன்கள் அடித்து திருப்புமுனை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் தோனி பெரிய சிக்ஸர் பறக்கவிட்டு சிஎஸ்கேவுக்கு வெற்றியை தேடி தந்தார். இந்த தோல்வியால் கொல்கத்தாவின் ப்ளேஆஃப் வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 11 போட்டிகளில் 2 வெற்றி, 9 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலும் இருந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க கட்டாய வெற்றியை பெற வேண்டிய போட்டியாக இந்த ஆட்டம் அமைந்திருந்தது. இதையடுத்து கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக மனீஷ் பாண்டே சேர்க்கப்பட்டார். சிஎஸ்கே அணியில் ஷேக் ரஷீத், சாம் கரன், தீபக் பாண்டே ஆகியோருக்கு பதிலாக உர்வில் படேல், டேவான் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 179 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்த ஸ்கோரை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 183 ரன்கள் எடுத்து இந்த சீசனின் மூன்றாவது வெற்றியை பெற்றது.
சிஎஸ்கே சேஸிங்
முன்னதாக, டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்கியா ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த சிஎஸ்கே 19.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நான்கு தொடர் தோல்விக்கு பிறகு இந்த சீசனில் மூன்றாவது வெற்றியை பெற்றுள்ளது.
அதிகபட்சமாக டிவால்ட் பிரெவிஸ் 52, ஷிவம் துபே 45, உர்வில் படேல் 31 ரன்கள் எடுத்துள்ளனர். கொல்கத்தா பவுலர்களில் வைபவ் அரோரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். மொயின் அலி ஒரு விக்கெட் எடுத்தார்.
பவர்பளேயில் திருப்பம்
சிஎஸ்கே அணியின் ஓபனர் மாத்ரே, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கான்வே டக் அவுட்டாகி ஷாக் கொடுத்தனர்.ஆனால் மற்றொரு ஓபனராக களமிறங்கிய உர்வில் படேல் அதிரடியில் மிரட்டி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஹித்
ஈடன் கார்டனில் சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்க காட்டிய படேல் 11 பந்துகளில் 31 ரன்கள் அடித்த அவர், 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அவுட்டானார்.
பவர்ப்ளே ஓவர்களில் 62 ரன்கள் எடுத்தபோதிலும், சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 8, ஜடேஜா 19 ரன்கள் எடுத்து பவர்ப்ளே முடிவதற்குள் அவுட்டானார்கள்.
பிரவீஸ் அதிரடி
மிடில் ஓவர்களில் பிரவீஸ் - இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ஷிவம் துபே ஆகியோர் விக்கெட் சரிவை தடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர்.
ஆட்டத்தின் 11வது ஓவரை வைபவ் அரோரா பந்து வீச, ஸ்டிரைக்கில் இருந்த பிரெவீஸ் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 30 ரன்கள் அடித்தார். இந்த ஓவர் ஆட்டத்தில் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 22 பந்துகளில் அரைசதமடித்த பிரெவீஸ் 52 ரன்னில் அவுட்டானார். பிரவீஸ் அவுட்டாகும்போது அணியின் ஸ்கோர் 12.1 ஓவரில் 127 என இருந்தது.
தோனி பினிஷ்
இதற்கிடையே நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்ட வந்த துபே, தோனி இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். அவ்வப்போது சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியின் ரன்ரேட்டை கட்டுக்குள் வைக்க உதவினார் துபே.
ஆட்டத்தின் 19வது ஓவரில் சிறப்பாக பேட் செய்து வந்த துபே 40 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதையடுத்து கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரசல் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே இமாலய சிக்ஸர் பறக்கவிட்டு அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
அந்த ஓவரின் நான்காவது பந்தில் கம்போஜ் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
கொல்கத்தா பவுலர்களில் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பவுலிங் செய்த நிலையில் 4 ஓவரில் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் 12 டாட் பந்துகளை வீசினார்.
