ஐபிஎல் 2025: க்ருனால் அதிரடி.. டெல்லிக்கு பதிலடி.. புள்ளிப்பட்டியலில் டாப் இடத்துக்கு சென்ற ஆர்சிபி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: க்ருனால் அதிரடி.. டெல்லிக்கு பதிலடி.. புள்ளிப்பட்டியலில் டாப் இடத்துக்கு சென்ற ஆர்சிபி

ஐபிஎல் 2025: க்ருனால் அதிரடி.. டெல்லிக்கு பதிலடி.. புள்ளிப்பட்டியலில் டாப் இடத்துக்கு சென்ற ஆர்சிபி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 27, 2025 11:32 PM IST

ப்வர்ப்ளே முடிவதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தபோதிலும், அவுட்டாகமல் இருந்த கோலி ஒரு புறம் நிதானம் காட்ட, மறுபுறத்தில் க்ருனால் அதிரடியில் மிரட்டினார். கடைசியில் டிம் டேவிட் சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தி டெல்லிக்கு பதிலடி கொடுத்த ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் டாப் இடம் சென்றுள்ளது.

க்ருனால் அதிரடி.. டெல்லிக்கு பதிலடி.. புள்ளிப்பட்டியலில் டாப் இடத்துக்கு சென்ற ஆர்சிபி
க்ருனால் அதிரடி.. டெல்லிக்கு பதிலடி.. புள்ளிப்பட்டியலில் டாப் இடத்துக்கு சென்ற ஆர்சிபி (REUTERS)

இந்த இரு அணிகளுக்கு இடையிலான முந்தைய மோதலில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. எனவே டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பதிலடி தரும் போட்டியாக ஆர்சிபிக்கு இது அமைந்துள்ளது.

இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் டூ பிளெசிஸ் அணிக்கு மீண்டும் திரும்பினார். ஆர்சிபி அணியில் ஓபனர் சால்ட்க்கு பதிலாக ஜேக்கப் பீதல் சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 162 ரன்கள் எடுத்த நிலையில், இந்த ஸ்கோரை சேஸ் செய்த ஆர்சிபி 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஆர்சிபி சேஸிங்

முன்னதாக, டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ராஜத் பட்டிதால் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த ஆர்சிபி அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து, 9 பந்துகள் எஞ்சியிருக்க 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லிக்கு எதிரான முந்தைய மோதலில் பெற்ற தோல்விக்கு ஆர்சிபி பதிலடி கொடுத்ததுடன், இந்த வெற்றிக்கு பின்னர் புள்ளிப்பட்டியலிலும் டாப் இடத்துக்கு முன்னேறியது.

அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 73, விராட் கோலி 51 ரன்கள் அடித்தனர். டெல்லி பவுலர்களில் சிறப்பாக பந்து வீசிய கேப்டன் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

விராட் கோலி நிதானம்

ஆர்சிபி அணியில் சால்ட்க்கு பதிலாக சேர்க்கப்பட்ட ஜேக்கப் பீதல் 12 ரன்னில் அவுட்டாகி முதல் ஆளாக வெளியேறினார். இதன் பின்னர் இம்பேக்ட் வீரராக தேவ்தத் படிக்கல் களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் டக் அவுட்டான நிலையில், அடுத்து வந்த கேப்டன் பட்டிதார் 6 ரன்னில் நடையை கட்டினார்.

பவர்ப்ளே முடிவில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஓபனராக களமிறங்கிய கோலி விக்கெட் சரிவை தடுக்கும் விதமாக நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தார். அவ்வப்போது பவுண்டரிகளை அடித்த கோலி, ஐந்தாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். பொறுமையாக ரன்களை சேர்த்து வந்த கோலி 45 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அதன் பின்னர் 51 ரன்னில் முக்கியமான கட்டத்தில் அவுட்டானார்.

க்ருனால் அதிரடி

அணியின் ஸ்கோர் 4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் இருந்தபோது ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா களமிறக்கப்பட்டார். வழக்கமான பேட்டிங் ஆர்டரில் இருந்து புரொமோட் செய்யப்பட்ட க்ருனால் தொடக்கத்தில் நிதானத்தை வெளிப்படுத்த பின்னர் மெல்ல மெல்ல கியரை மாற்றி அதிரடியை வெளிப்படுத்த தொடங்கினார்.

இவருடன் பேட் செய்த கோலி ஸ்டிரைக் ரொட்டேட் செய்ய, க்ருனால் கிடைத்த வாய்ப்புக்களை பவுண்டரி, சிக்ஸர்களாக மாற்றினார். இவரது அதிரடியால் அணியின் ஸ்கோர் உயர்ந்த நிலையில் 38 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

அதன் பின்னர் அதிரடியை தொடர்ந்த க்ருனால் கடைசி வரை களத்தில் இருந்து ஆட்டத்தை பினிஷ் செய்தார். சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்திய டிம் டேவிட் 5 பந்துகளில் 19 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.

டெல்லி பவுலர்களில் முகேஷ் குமார் 3.1 ஓவரில் 51 ரன்களை வாரி வழங்கினார். நெருக்கடி தரும் விதமாக பவுலிங் செய்த அக்சர் படேல் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.