ஐபிஎல் 2025: டெல்லி ஆமை வேக பேட்டிங்.. ஸ்டப்ஸ் கேமியோ ஆட்டம்! பவுலிங்கில் கலக்கிய புவனேஷ், ஹேசில்வுட்
அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கிய போதிலும் மிடில் ஓவரில் ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பில் ஈடுபட தடுமாறினர். கடைசி கட்டத்தில் ஸ்டப்ஸ் வெளிப்படுத்திய சிறிய கேமியோ ஆட்டத்தால் டெல்லி அணி 162 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 2025 தொடரில் 46வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கும் முன் டெல்லி கேபிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி என புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் விர்ரென இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. இதனால் டெல்லி, ஆர்சிபி அணிகள் அடுத்தடுத்த இடங்களுக்கு கீழே இறங்கின.
டெல்லி கேபிடல்ஸ் தனது முந்தைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. ஆர்சிபி அணி முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முந்தைய மோதலில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. எனவே டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பதிலடி தரும் போட்டியாக ஆர்சிபிக்கு இது அமைந்துள்ளது.
இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் டூ பிளெசிஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். ஆர்சிபி அணியில் ஓபனர் சால்ட்க்கு பதிலாக ஜேக்கப் பீதல் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆர்சிபி பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ராஜத் பட்டிதார் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 41, ட்ரஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல் 28 ரன்கள் எடுத்துள்ளனர்.
ஆர்சிபி பவுலர்களில் புவனேஷ்வர் குமார் 3, ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். யாஷ் தயாள், க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
டெல்லி நிதான பேட்டிங்
டெல்லி அணியின் ஓபனர்களில் அபிஷேல் போரல் வழக்கம்போல் அதிரடியுடன் இன்னிங்ஸை தொடங்கினார். மற்றொரு ஓபனரான டூ பிளெசிஸ் நிதானத்தை கடைப்பிடித்து விளையாடினார். பவர்ப்ளே முடிவில் டெல்லி கேபிடல்ஸ் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்தது.
ஓபனரான அபிஷேக் போரல் 11 பந்துகளில் விரைவாக அடித்துவிட்டு முதல் ஆளாக அவுட்டானார். இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த கருண் நாயர் 4 ரன்னில் வெளியேறினார்.
கேஎல் ராகுல் ஆமை வேக ஆட்டம்
மிடில் ஓவர்களில் ஆர்சிபி பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு எதிராக அதிரடியாக விளையாட தடுமாறினார். நிதானத்தை கடைப்பிடித்து வந்த டூ பிளெசிஸ் 26 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து நடையை கட்டினார்.
இவரை போல் ஆமை வேக இன்னிங்ஸை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் மெதுவாக ரன்களை சேர்த்து வந்தார். இவருடன் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்த அக்சர் படேல் 15 ரன்கள் அடித்த நிலையில் ஹசில்வுட் பந்தில் போல்டாகி வெளியேறினார்.
பொறுமையாக பேட் செய்து வந்த ராகுல் 39 பந்துகளில் 41 ரன்கள் என சராசரியான இன்னிங்ஸை வெளிப்படுத்தி அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 3 பவுண்டரி மட்டும் அடித்தார்.
ஸ்டப்ஸ் கேமியா
கடைசி கட்ட ஓவர்களில் அதிரடி பேட்ஸ்மேனான ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டப்ஸ் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசி ஓவரில் அவுட்டானார். இதற்கிடையே இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட அசுடோஷ் ஷர்மா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் 2 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார்.
ஆர்சிபி பவுலர்களில் யாஷ் தயாள் மட்டும் 4 ஓவர்களில் 42 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஸ்பின்னர் சுயாஷ் ஷர்மா விக்கெட் வீழ்த்தாத போதிலும், 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஹசில்வுட் ஆகியோர் தலா 10 டாட் பந்துகளை வீசினர்.
