Ind vs Eng 4th T20: "எங்க ஏரியா உள்ள வராத" 17வது தொடர் வெற்றி.. துபேவுக்கு மாற்று வீரராக வந்து தாக்கம் தந்த ராணா
Ind vs Eng 4th T20: ஷிவம் துபேவுக்கு பதிலாக கன்கஷன் வீரராக களமிறங்கி தாக்கத்தை ஏற்படுத்திய ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். உள்ளூரில் நடைபெற்ற டி20 தொடரில் தொடர்ச்சியாக 17வது தொடரை வென்று இந்தியா சாதித்துள்ளது

இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் என முழுவதுமான வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து முதலில் டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்ற நிலையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
பின்னர் ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேவில் வைத்து இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்ததது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த இங்கிலாந்து 19.4 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல்அவுட்டான நிலையில், 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
கன்கஷன் சப்ஸ்டிடூயூட்டாக களமிறங்கிய ராணா
இந்த போட்டியில் ஷிவம் துபேவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா கன்கஷன் சப்ஸ்டிடூயூட்டாக களமிறக்கப்பட்டார். இதன் மூலம் இந்தியாவுக்காக டி20 போட்டியிலும் முதல் முறையாக விளையாடினார். முன்னதாக, இந்திய இன்னிங்ஸில் அதிரடியாக பேட் செய்த துபேவுக்கு ஆட்டத்தின் கடைசி ஓவரின் போது தலையில் காயமடைந்தது. இதனால் மூளையதிர்ச்சி ஏற்பட்டதாக கூறப்பட்டு, அவருக்கு பதில் மாற்று வீரராக ஹர்ஷித் ராணா விளையாடினார்.
பவுலிங்கில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்திய ராணா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். 182 ரன்களை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஓபனர்கள் சால்ட், பென் டக்கெட் நல்ல தொடக்கத்தை தந்தனர்.
5.6 ஓவரில் 62 ரன்களை சேர்த்த நிலையில் டக்கெட் 19 பந்துகளில் 39 ரன்கள் என அதிரடி காட்டிவிட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அடுத்த ஓவரில் சால்ட் 23 ரன்கள் அடித்துவிட்டு பெவிலியன் திரும்பினார்ய
நல்ல பார்மில் இருந்த பட்லர் 2 ரன்னில் நடையை கட்ட, அடுத்ததாக பேட் செய்ய வந்த ஹாரி ப்ரூக் பொறுப்புடன் பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அரைசதத்தை பூர்த்த செய்த ப்ரூக் 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதிரடி பேட்ஸ்மேனான லயாம் லிவிங்ஸ்டன் 9, ஜேக்கப் பீத்தெல் 6, பிரைடன் கார்ஸ் 0 என அடுத்தடுத்து அவுட்டானார்கள். கடைசி கட்டத்தில் ஜேமி ஓவர்கள் கொஞ்சம் அதிரடி காட்டி 19 ரன்கள் அடித்தபோதிலும் ஹர்ஷித் ராணா பந்தில் போல்டாகி வெளியேறினார். இவர் அவுட்டானபோது இந்தியாவின் வெற்றியும் உறுதியானது.
இந்திய பவுலர்களில் ராணா, பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்திப் சிங், அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
பாண்டியா - துபே மிரட்டல் அடி
முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய இன்னிங்ஸில் ஓபனர் சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இவரை போல் சூர்யகுமார் யாதவ் டக்அவுட்டாகி தனது மோசமான பார்மை தொடர்ந்தார். அத்துடன் நல்ல பார்மில் இருந்த திலக் வர்மா முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார்.
இதன் 12 ரன்களில் முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழ்நிலையில் மற்றொரு ஓபனராக களமிறங்கியிருந்த அபிஷேக் ஷர்மா தனது வழக்கமான பாணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய ரிங்கு சிங் பொறுப்புடன் பேட் செய்து 30 ரன்கள் அடித்தார். இவர் அவுட்டான பின்பு பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிவம் துபே - ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடி மோடில் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் மாறி மாறி சிக்ஸர், பவுண்டரி என வெளுத்து வாங்க அணியின் ஸ்கோரும் கணிசமாக உயர்ந்தது. இரண்டு பேரும் அரைசதமடித்த நிலையில் துபே 34 பந்துகளில் 53, பாண்டியா 30 பந்துகளஇல் 53 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து பவுலர்களில் சாகிப் முகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டுகளை எடுத்தார். 5 போட்டிகள் கொண்ட தொடரை வென்றிருக்கும் இந்தியா, உள்நாட்டு டி20 தொடரை தொடர்ச்சியாக 17வது முறை வென்று சாதனை புரிந்துள்ளது. 2019 முதல் தற்போது வரை உள்ளூரில் நடைபெற்ற அனைத்த டி20 தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்