Ind vs Eng 3rd T20: தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. தலைதப்பிய இங்கிலாந்து.. ராஜ்கோட்டில் உப்புசப்பில்லாத ஆட்டம்
Ind vs Eng 3rd T20: இங்கிலாந்தின் 172 ரன்கள் சேஸை விரட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் இங்கிலாந்து பவுலர்கள் தங்களது துல்லிய பவுலிங்கால் இந்தியாவை வீழ்த்தியுள்ளனர்.

இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் என முழுவதுமான வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து முதலில் டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பின்னர் சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்ற நிலையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் இழப்பதை தவிர்த்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்த நிலையில், பின்னர் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா தடுமாற்றம்
இங்கிலாந்து பவுலர்களின் துல்லிய பந்து வீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் ரன் குவிப்பதில் தடுமாறினார். ஹர்திக் பாண்டியா மட்டும் தாக்குபடித்து 40 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக நல்ல தொடக்கத்தை தந்த அபிஷேக் ஷர்மா விரைவாக 24 ரன்கள் அடித்த பெவலியன் திரும்பினார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் 20 ரன்களை கூட கடக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஓபனர் சஞ்சு சாம்சன் 3 ரன் எடுத்து முதல் விக்கெட்டாக காலியானார். இஇந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 14 ரன்களில் வெளியேறி மற்றொரு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரை போல் துருவ் ஜூரலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் 2 ரன்னில் நடையை கட்டினார்.
கடந்த போட்டியில் ஒற்றை ஆளாக இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற திலக் வர்மா இந்த போட்டியில் அதிரடியாக ஆடினாலும் 18 ரன்களில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 15 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். அக்ஷர் படேல் சிறிது நேரம் தாக்குபிடித்து 15 ரன்கள் எடுத்தாலும் அவரால் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.
இங்கிலாந்து பவுலர்கள் கலக்கல்
இந்திய பேட்ஸ்மேன்களை ஆரம்பத்தில் இருந்தே கட்டுக்குள் வைத்திருந்தனர். குறிப்பாக பவர்ப்ளவுக்கு பிறகு எளிதில் ரன்கள் எடுக்க முடியாத அளவில் துல்லியமாக பந்து வீசினர். ஜேமி ஓவர்டன் 3, பிரைடன் கார்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மார்க் உட், அடில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
ஸ்பின்னரான அடில் ரஷித் கட்டுக்கோப்பாக பந்து வீசி 4 ஓவரில் 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். அவரது ஓவர்களில் இந்த பேட்ஸ்மேன்கள் பவுண்டரி, சிக்ஸர் என எதுவும் அடிக்கவில்லை. கடைசி நான்கு ஓவர்களில் 38 ரன்கள் மட்டுமே அடித்த இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்தது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை இழந்துவிடும் நெருக்கடியான நிலையில், கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அதை செய்து காட்டியுள்ளது. இந்த வெற்றியால் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது 2-1 என்ற கணக்கில் உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி ஜனவரி 31ஆம் தேதி புனேவில் வைத்து நடைபெற இருக்கிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்