India Won The Match : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோஹித் சர்மா 76 ரன்கள் விளாசி அசத்தினார். ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இந்திய அணி 2002 இல் இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது. அதன் பிறகு, 2013 இல் சாம்பியன் ஆகியிருந்தது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஃபைனல் மேட்ச்சில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. 252 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி இலக்கை எட்டி வெற்றி கண்டது. 6 விக்கெட் இழப்புக்கு 49 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.
இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கேப்டன் ரோஹித் சர்மா இந்த மேட்ச்சில் பொறுப்புடன் விளையாடி அரை சதம் எடுத்தார். அவர் 3 சிக்ஸர்கள், 7 ஃபோர்ஸ் விளாசி அசத்தினார். 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தபோது ரவீந்திரா பந்துவீச்சில் ஸடம்பிங் ஆனார்.
கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி எதிர்பாராதவிதமாக 1 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடிக்க நெருங்கிய நிலையில், சான்ட்னர் வீசிய பந்தில் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார். அவர் 62 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் நிதானமாக செயல்பட்ட போதிலும் தூக்கி அடிக்க முயன்றபோது 29 ரன்களில் அவுட்டானார். கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடினர்.
ஹர்திக் கடைசி நேரத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 18 ரன்கள் எடுத்திருந்தார் ஹர்திக். பின்னர் ஜடேஜா வந்தார். வின்னிங் ஷாட் அடித்து அணியை ஜெயிக்க வைத்தார்.
நியூசிலாந்து பேட்டிங்கில்..
டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா பந்து வீசியது. தொடக்க வீரராக களம் புகுந்த வில் யங், 15 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து வீரர் பிரேஸ்வெல் அரை சதம் விளாசினார். 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கேன் வில்லியம்சன் 11 ரன்னில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த டாரில் மிட்செல் மட்டும் நிதானமாக விளையாடிய அரை சதம் பதிவு செய்தார். அவர் 63 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமி பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனார். விக்கெட் கீப்பர் டாம் லாதம் 14 ரன்னிலும், கிலென் பிலிப்ஸ் 34 ரன்னிலும் நடையைக் கட்டினர். 10 ஓவர்கள் வீசிய வருண் சக்கரவர்த்தி 45 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை அள்ளினார்.
ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். குல்தீப் 10 ஓவர்கள் வீசி 40 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை சுருட்டினார். வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்கள் வீசிவிட்டு காயம் காரணமாக ஓய்வெடுக்க சென்று விட்டார். அவருக்கு பதில், வாஷிங்டன் சுந்தர் ஃபீல்டிங் செய்தார்.
வில்லியம்சன் சொதப்பல் பேட்டிங்
மெல்போர்னில் நடந்த 2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 ரன்கள், லண்டனில் நடந்த 2019 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 30 ரன்கள், துபாயில் இந்தியாவுக்கு எதிராக வெறும் 11 ரன்கள் எடுத்தது என மூன்று ஐசிசி ஒருநாள் இறுதிப் போட்டிகளில், வில்லியம்சன் மிகவும் மோசமான பதிவைக் கொண்டுள்ளார்.
ஒருநாள் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான டாஸ்களை இழந்ததற்கான மோசமான சாதனையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். தொடர்ச்சியாக 12வது முறையாக டாஸில் ரோஹித்துக்கு லக் இல்லாமல் போனது.
"சேஸிங் செய்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, அது ஒரு நல்ல பிட்ச் - இதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை - நாம் முதலில் பந்து வீச வேண்டும் & அவர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்" என்று ரோஹித் சர்மா டாஸ் வென்ற பிறகு கூறியிருந்தார்.
பிளேயிங் லெவன்
நியூசிலாந்து: வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்க், நாதன் ஸ்மித்.
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

டாபிக்ஸ்