டி20 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு.. பின்னணி என்ன?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  டி20 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு.. பின்னணி என்ன?

டி20 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு.. பின்னணி என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 06, 2025 01:14 PM IST

இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியிருக்கும் சச்சித்ர சேனநாயக்க மீது எல்பிஎல் என அழைக்கப்படும் லங்கா ப்ரீமியர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு
டி20 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு

முதல் சர்வதேச வீரர்

நாட்டில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ், ஒரு தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் மீது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதற்காக இது முதல் குற்றச்சாட்டு என்று சட்டத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அவர் 2023இல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

40 வயதான சேனநாயக்க, 2012 மற்றும் 2016க்கு இடையில் இலங்கைக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் டி20 உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தார். 2014ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்ற நிலையில், இந்த தொடரில் 6 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேட்ச் பிக்ஸிங்

உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு தேசிய வீரர் தரிந்து ரத்நாயக்கவிடம் அவர் ஊழல் அணுகுமுறையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

"2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில், எல்பிஎல்லில் பங்கேற்கும் இரண்டு கிரிக்கெட் வீரர்களை சேனநாயக்க துபாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட அவர்களை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது," என்று இலங்கை டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறை தண்டனை

சேனநாயக்கா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 100 மில்லியன் ரூபாய் ($333,000) வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

கடந்த பிப்ரவரியில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் ஷோஹெலி அக்தர் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விளையாடுவதற்கு ஐந்து ஆண்டுகள் தடை பெற்றார்.

ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தின் ஐந்து விதிகளை அவர் மீறி, ஊழல் குற்றத்துக்காக தடை செய்யப்பட்ட முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஆனார் ஷோஹெலி அக்டர். அவர் வங்கதேச அணிக்காக 13 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆஃப்-ஸ்பின்னர் ஷோஹெலி அக்தர் தன் மீதான அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.

பவுலிங் செய்ய தடை

இலங்கை அணியின் பவுலிங் ஆல்ரவுண்டரான சச்சித்ர சேனநாயக்க, பின்னணி பாடகராகவும் உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 2013 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுயுள்ளார்.

ஆஃப் ஸ்பின் பவுலரான இவரது பவுலிங் ஆக்சன் சட்ட விரோதமாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது. 2014 இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது இந்த சம்பவம் நடந்த நிலையில் சிறிது காலம் இவர் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2014ஆம் ஆண்டிலேயே அவர் மீதான தடை நீக்கப்பட்டது.

தடையில் இருந்த விடுபட தனது பவுலிங் ஆக்சனில் மாற்றம் கொண்டு வந்தார் சேனநாயக்க. அதன் பின்னர் அவரது ஆட்டத்திறனும் வெகுவாக பாதிக்கப்பட்டது.