MS Dhoni Retirement: “இப்போதைக்கு இல்லை.. ஆனா இன்னொரு சீசன்..” ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ms Dhoni Retirement: “இப்போதைக்கு இல்லை.. ஆனா இன்னொரு சீசன்..” ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி

MS Dhoni Retirement: “இப்போதைக்கு இல்லை.. ஆனா இன்னொரு சீசன்..” ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 06, 2025 06:46 PM IST

MS Dhoni Retirement: ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடு, தோனியின் ஓய்வு குறித்து நாளுக்கு நாள் புதிதாக தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே தனது ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார் தோனி.

“இப்போதைக்கு இல்லை.. ஆனா இன்னொரு சீசன்..” ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி
“இப்போதைக்கு இல்லை.. ஆனா இன்னொரு சீசன்..” ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி (PTI)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை கோப்பை வென்று கொடுத்தவரும், சிஎஸ்கே அணியின் அடையாளமாகவும் திகழ்ந்து வந்த எம்எஸ் தோனியின் ஆட்டத்திறன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தற்போது 43 வயதாகும் தோனி சர்வதேச கிரிக்கெட், உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இதற்கிடையே கடந்த சில ஐபிஎல் சீசன்களில் முடிவடையும் போதும், அல்லது தொடர் நடந்துகொண்டிருக்கும் போதும் அவரது ஓய்வு குறித்து பல்வேறு விதமான தகவல்கள் உலா வந்துள்ளன. இந்த சூழ்நிலையில் ஓய்வு குறித்து உலா வரும் வதந்திகளுக்கு தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இப்போதைக்கு இல்லை

ராஜ் ஷமானியுடனான முன் பதிவு செய்யப்பட்ட பாட்காஸ்டின் போது, ​​தோனி 2025 ஆம் ஆண்டு முழு சீசனையும் விளையாட திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்கான அறிவிப்பை வரும் மாதங்களில் எடுப்பதாகவும் கூறினார். ஓய்வு குறித்து தோனி கூறியதாவது, "இப்போதைக்கு ஓய்வு எடுக்கப்போவதில்லை. நான் இன்னும் ஐபிஎல் விளையாடி வருகிறேன். ஓய்வு பற்றிய விஷயத்தை மிகவும் எளிமையாக வைத்திருக்கிறேன். இந்த முடிவை எடுக்க ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறேன்.

எனக்கு 43 வயதாகிறது. இந்த ஜூலை மாசம் முடியும்போது எனக்கு 44 வயதாகும். இன்னும் ஒரு சீசன் விளையாடணுமா இல்லையான்னு முடிவு பண்ண எனக்கு 10 மாதம் இருக்கிறது. ஓய்வு முடிவெடுப்பது நான் இல்லை. உங்க உடல்தான், உங்களால முடியுமா இல்லையான்னு சொல்லும். இப்போ என்ன செய்யணும்னு முழு கவனமும் செலுத்துறேன். அதுக்குப் பிறகு, 8-10 மாசத்துக்குப் பிறகு பார்க்கலாம்" என்றார்.

சிஎஸ்கே மோசமான ஆட்டம்

ஐபிஎல் 2025 சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதில் மூன்று தோல்விகளும் சென்னை அணியின் கோட்டையான சேப்பாக்கத்தில் வைத்து இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிஎஸ்கே அணி குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் தோனியின் ஆட்டத்திறன் குறித்து பல்வேறு எதிர்மறை கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.

தோனியின் பேட்டிங் பார்ம்

இந்த சீசனில் சிஎஸ்கே அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பேட் செய்தார் எம்எஸ் தோனி. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ரன்கள் எடுக்காமல் நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார். இதைத்தொடர்ந்து ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 9வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார்.

இதன் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார். கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 26 பந்துகளில் 30 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஏப்ரல் 8ஆம் தேதி முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.