MS Dhoni: விசில் சத்தத்துடன் அதகளம் செய்யும் ரசிகர்கள்.. சேப்பாக்கம் எப்போது சிறப்பு வாய்ந்தது - தோனி பேச்சு
ஐபிஎல் போட்டிகள் விளையாடும் எனக்கு ரசிகர்கள் தரும் அன்பு வியக்கத்தக்கது. கெய்க்வாட் கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார். சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. விராட் கோலியுடனான உறவு மூத்த மற்றும் இளைய வீரருக்குள் இருக்கும் மரியாதையும் நட்பும் உள்ளது என எம்.எஸ். தோனி கூறியுள்ளார்

ஐபிஎல் 2025 தொடரின் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் எதிரி அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் எம்எஸ் தோனி, விசில் சத்தம் விண்ணை பிளக்கும் அளவில் பலத்த ஆராவரத்துடன் களமிறங்கினார். 2 பந்துகளை எதிர்கொண்ட அவர் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை. இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கின் போது, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சூர்யகுமார் யாதவை மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கி முத்திரை பதித்தார் தோனி.
இதையடுத்து ஜியோஹாட்ஸ்டாரில், "The MSD Experience" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டியளித்தார் எம்.எஸ். இதில், டாடா ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களிடம் தான் பெற்றிருக்கும் பேராதரவைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொண்டார். இதுகுறத்து தோனி போசியதாவது, "நான் எப்போதும் இதை கூறுவேன். எனக்கு கிடைத்திருக்கும் இந்த ஆதரவு ரசிகர்களிடமிருந்து நான் பெற்றிருக்கும் மிக பெரிய 'நன்றி'யாக பார்க்கிறேன்.
ரசிகர்களின் அன்பு வியக்கத்தக்கது
சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற பிறகும் கடந்த சில ஆண்டுகளாக நான் விளையாடி வருகிறேன். இன்னும் எவ்வளவு நாள்கள் விளையாடுவேனோ தெரியாது, ஆனால் அவர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் வியக்கத்தக்கது. ஒரு விளையாட்டு வீரராக, நீங்கள் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் ரசிகர்களின் பாராட்டுதான்.
கிரிக்கெட் விளையாட்டுக்கு இந்தியா என்பது மிகப்பெரிய மேடையாக இருக்கிறது. நான் தற்போது சர்வதேச கிரிக்கெட் விளையாடவில்லை. எனவே ஐபிஎல் எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. இங்கு என் பெயரை அழைக்கிறார்கள், உற்சாகமாக காத்திருக்கிறார்கள், சிறப்பாக ஆட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் விருப்பமான அணிக்கு எதிராக விளையாடினாலும் கூட இதை எதிர்பார்க்கும் இந்த அனுபவம் தான் மிகப்பெரிய மகிழ்ச்சி.
மேலும் படிக்க: மும்பை இந்தியன்ஸ் அணியை ஊதி தள்ளிய சென்னை சூப்பர் கிங்ஸ்
பிடித்தமான மைதானம்
சேப்பாக்கம் என்னை மிகவும் உற்சாகப்படுத்தும் மைதானம். ஏனெனில் ரசிகர்கள் விசிலுடன் மிகவும் அதகளம் செய்கிறார்கள். ஆனால் இதற்குப் பிறகு என்னை அதிகமாக பாதித்த மைதானங்களை தேர்வு செய்வது கடினம்.
மும்பைக்கு எனக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. 2007ஆல் நாம் T20 உலகக் கோப்பையை வென்றபோது, இங்கு வந்தோம், மிகுந்த வரவேற்பு கிடைத்தது. 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியும் மும்பையில்தான் நடந்தது. எனவே அது என் மனதில் ஒற்றுமை ஏற்படுத்தியது.
அதேசமயம், பெங்களூருவில் ரசிகர்கள் மிகப்பெரிய ஆரவாரத்தை உருவாக்குகிறார்கள், கொல்கத்தாவில் மிகப்பெரிய மைதானம் இருப்பதால் முழு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி இருக்கும். அதுவே ஒரு அலாதியான உணர்வை ஏற்படுத்தும். அகமதாபாத்தும் தற்போது மிகவும் பிரம்மாண்டமான மைதானமாக மாறியுள்ளது. ஒவ்வொரு நகரமும் தனித்துவமான விஷயங்களை கொண்டுள்ளது. எனவே நான் ஒரே ஒரு மைதானத்தை மட்டும் தேர்வு செய்வது கடினமான விஷயம்
பேட்டிங் அணுகுமுறை
நான் களமிறங்கும்போது, ஸ்கோர்போர்டை கவனிப்பேன். அணி என்னிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்துகொள்வேன். சில பந்துகளே மட்டும் மீதம் இருந்தால், பெரிய ஷாட்கள் விளையாடுவதை மட்டுமே குறிக்கோளாக இருக்கும்.
நான் அடிக்கவேண்டியது "சிக்ஸ்" தான். பவுண்டரி அடித்தால் போதும் என யோசிக்க மாட்டேன். முக்கிய போட்டிகளில் ஒரு பவுண்டரிக்குப் பதிலாக ஒரு சிக்ஸ் அடித்தால் அந்த இரண்டு ரன்கள் கூட பலமான மாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோல, பவுலர்களிடமும் நான் எப்போதும் கூறுவது, நீங்கள் 4 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தாலும், 6வது பந்து டாட் ஆக இருந்தால், அது நமக்கு வெற்றி தரும். அதே நேரத்தில் பேட்ஸ்மேன்கள் தங்களின் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது, அவர்கள் முடியும் என்று நம்ப வேண்டும்.
தாய்மொழியில் கமெண்ட்ரி கேட்பது நல்ல உணர்வு
நான் அதிகமாக பிராந்திய மொழிகளில் கமெண்டரி கேட்கவில்லை, ஏனெனில் மொத்தமாக நேரலைப் பார்த்தால், மிகக் குறைவான ரிப்ளேகளே கிடைக்கும். ஆனால், பிஹாரி (போஜ்புரி) கமெண்டரி பழைய காலத்து வானொலி கமெண்டரியை நினைவுபடுத்துகிறது, அதில் கமெண்டேட்டர்கள் மிகவும் ஈடுபாட்டுடன் விளையாட்டை விவரிப்பார்கள். அது எனக்கு மிகவும் நன்றாக தோன்றுகிறது. எவரும் தங்கள் தாய்மொழியில் விளையாட்டைப் பார்க்க விரும்புவார்கள், அதில் ஒரு தனி உணர்வு இருக்கும்."
ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்படுகிறார்
தீவிரமான திட்டமிடல் முக்கியம். பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் இருந்திருக்கிறார். அவருடைய மனநிலை அமைதியானது. அதை நாங்கள் கவனித்தோம். அவர் மற்றும் கோச்சிங் ஸ்டாஃப் நல்ல உடன்பாட்டில் இருந்தார்கள். ஐபிஎல் முடிந்தவுடன், '90% நீ அடுத்த ஆண்டு கேப்டன்' என்று கூறிவிட்டேன். பலர் என்னை 'பின்னணி கேப்டன்' என்று கூறினார்கள், ஆனால் உண்மையில் 99% முடிவுகளை அவரே எடுத்தார். நான் அவருக்கு வழிகாட்டினேன். ஆனால் ஒவ்வொரு முக்கியமான முடிவுகளும் அவருடையதுதான். அவர் மிக சிறப்பாக இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்
2008இல் எப்படி T20 ஆடினோம், 2024ல் எப்படி ஆடுகிறோம் என்பதில் பெரும் வேறுபாடு உள்ளது. மைதானங்கள் மாறிவிட்டன, பந்தின் தன்மையும் மாறிவிட்டது, தற்போது அதிகம் ரன்கள் வருகிறது. அதேசமயம், பேட்ஸ்மேன்கள் புதிதாக முயற்சிக்கிறார்கள், நவீன ஷாட்களை முயற்சிக்கிறார்கள். அதற்கு ஏற்ப அனைவரும் ஆட்டத்திறனை மாற்றி ஆட வேண்டும், இல்லையென்றால் விளையாட்டில் நிலைத்து நிற்க முடியாது.
விராட் கோலியுடனான உறவு
விராட் எப்போதும் சிறப்பாக ஆட விரும்புவார். வெறும் 40-60 ரன்கள் எடுத்தால் திருப்தியடைய மாட்டார். அவர் தனது விளையாட்டை தொடர்ந்து மேம்படுத்தினார். ஆரம்பத்தில் அவர் ஒரு இளம் வீரராக இருந்தபோதும், எங்களுக்குள் மிக நேர்மையான உரையாடல்கள் நடந்தன. தற்போது இருவரும் கேப்டன் இல்லை, எனவே போட்டிகளுக்கு முன் நீண்ட நேரம் பேச முடிகிறது. ஒரு மூத்த மற்றும் இளைய வீரருக்குள் இருக்கும் மரியாதையும் நட்பும் எங்களுக்குள் உள்ளது.
இவ்வாறு தோனி பேசியுள்ளார்.
