ஐபிஎல் 2025: ஆர்சிபி போல் வித்தையை இறக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே.. இனி ப்ளேஆஃப் தகுதி பெற வழி என்ன?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: ஆர்சிபி போல் வித்தையை இறக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே.. இனி ப்ளேஆஃப் தகுதி பெற வழி என்ன?

ஐபிஎல் 2025: ஆர்சிபி போல் வித்தையை இறக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே.. இனி ப்ளேஆஃப் தகுதி பெற வழி என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 22, 2025 11:35 AM IST

கடந்த 2024 சீசனில் 6 தொடர் வெற்றிகளை பெற்ற ஆர்சிபி ப்ளேஆஃப் சுற்றில் தகுதி பெற்றது. அந்த நிலை தற்போது சிஎஸ்கேவுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் ஆர்சிபி போல், இப்போது சிஎஸ்கே வித்தையை இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் 2025 ப்ளேஆஃப்பில் சிஎஸ்கே தகுதி பெற வழிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

Chennai Super Kings list by nine wickets against Mumbai Indians
Chennai Super Kings list by nine wickets against Mumbai Indians (AFP)

இனி 6 போட்டிகள் மட்டும் எஞ்சியிருக்கும் நிலையில், ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சிஎஸ்கேவுக்கு அமைந்துள்ளது. இந்த போட்டிகளில் வெற்றியை பெறுவதோடு மட்டுமல்லாமல் நல்ல ரன்ரேட்டையும் தக்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் இருந்தும் சிஎஸ்கே ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஐபிஎல் 2025 ப்ளேஆஃப்பில் சிஎஸ்கே தகுதி பெற வழி

இந்த சீசனில் 6 தோல்விகளை பெற்றிருந்தபோதிலும், சிஎஸ்கே அணிக்கான ப்ளேஆஃப் வாய்ப்பு இன்னும் ஓபனாகவே உள்ளது. கடந்த 2024 சீசனில் ஆர்சிபி அணி வெறும் 14 புள்ளிகளுடன் ப்ளேஆஃப்புக்கு நுழைந்ததை மறக்க முடியாது. ஐபிஎல் தொடரில் 10 அணிகள் அதிகரித்த பிறகு 14 புள்ளிகளுடன் முதல் முறையாக ப்ளேஆஃப் சென்ற அணியாக ஆர்சிபி உள்ளது.

எனவே சிஎஸ்கே அணி இனி எஞ்சியிருக்கும் போட்டிகளின் முக்கியத்துவம் கருதி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அனைத்திலும் வெற்றி பெற்றால் எளிதாக 16 புள்ளிகளை பெற்று ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம். தற்போது சிஎஸ்கே அணியின் நிகர ரன் ரேட் -1.392 ஆக உள்ளது. இந்த சீசனில் மிகவும் குறைவான ரன்ரேட் வைத்திருக்கும் நிலையில், சிஎஸ்கே அணி வெற்றியை மட்டும் குறிக்கோளாக வைக்காமல் மிக பெரிய வெற்றியை பெற்றாக வேண்டும்

ஆர்சிபி வித்தையை கையில் எடுக்க வேண்டிய நேரம்

கடந்த 2024 சீசனில் ஆர்சிபி அணி முதல் 8 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்தது. இதன் பின்னர் அந்த வீரர்கள் தங்களது வித்தையை முழுவதுமாக இறக்கிய நிலையில் 6 வெற்றியை தொடர்ச்சியாக பெற்று ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 6 தொடர் வெற்றிகளுடன் ப்ளேஆஃப் நுழைந்த அணி என்ற பெருமை பெற்றது ஆர்சிபி.

ஆர்சிபியுடன் ஒப்பிடுகையில் தற்போது சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று, கூடுதலாக ஒரு வெற்றியை கையில் வைத்துள்ளது. எனவே கடந்த சீசனில் ஆர்சிபி காட்டிய வித்தையை இந்த முறை சிஎஸ்கே காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணியாக இருந்து வரும் சிஎஸ்கே இதுவரை விளையாடியிருக்கும் 15 சீசன்களில் 3 மூன்று முறை மட்டுமே ப்ளேஆஃப்புக்கு தகுதி பெறாத அணியாக உள்ளது. எனவே கன்சிஸ்டன்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே அணி விஸ்வரூபம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த எதிரி அணியான மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இரண்டு சீசன்களாக மும்பைக்கு எதிராக நான்கு தொடர் தோல்விகளுக்கு பிறகு சிஎஸ்கேவை வீழ்த்தியுள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்த தோல்விக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி பேசும்போது, ப்ளேஆஃப்புக்கு தகுதி பெறுவது முக்கியம், இல்லாவிட்டால் அடுத்த சீசனில் வலுவான காம்பினேஷனுடன் கம்பேக் தர வேண்டும் என்று கூறினார்.

ப்ளேஆஃப்புக்கு தகுதி பெறுவது முக்கியம்

"நல்ல கிரிக்கெட்டை விளையாடியதால் தான் வெற்றி பெறுகிறோம் என்பதை நாம் உணர வேண்டும். அதே நேரத்தில், நல்ல கிரிக்கெட்டை விளையாடாதபோது, ​​அதைப் பற்றி அதிகமாக உணர்ச்சிவசப்படாமல் இருப்பது முக்கியம். நீங்கள் நடைமுறையை உணர்ந்து அதற்கு ஏற்றவராக இருக்க விரும்புகிறோம்.

அணியில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க முயற்சிக்கிறோம். அடுத்ததாக நாம் விளையாட இருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அடுத்த ஆண்டுக்கான சரியான காம்பினேஷனை பெறுவது எங்களுக்கு மிக அவசியம். ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற முயற்சிப்பதுதான் முக்கியம். அப்படி இல்லையென்றால் அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்பான லெவனை பெற்று வலுவாக மீண்டு வருவோம்" என்று கூறினார்.