‘மறக்க வேண்டிய நாள்’-ஆசிய கோப்பை ஃபைனலில் இந்திய யு-19 அணி தோல்வி.. வங்கதேசம் சாம்பியன்!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ‘மறக்க வேண்டிய நாள்’-ஆசிய கோப்பை ஃபைனலில் இந்திய யு-19 அணி தோல்வி.. வங்கதேசம் சாம்பியன்!

‘மறக்க வேண்டிய நாள்’-ஆசிய கோப்பை ஃபைனலில் இந்திய யு-19 அணி தோல்வி.. வங்கதேசம் சாம்பியன்!

Manigandan K T HT Tamil
Dec 08, 2024 05:50 PM IST

பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வங்கதேசத்தின் ரன் வேகத்தை கட்டுப்படுத்திய போதிலும், பேட்டிங்கில் இந்திய யு19 அணி சொதப்பியது. இதனால், சாம்பியன் ஆகும் வாய்ப்பு பறிபோனது.

வெற்றி மகிழ்ச்சியில் வங்கதேச யு-19 அணியினர்
வெற்றி மகிழ்ச்சியில் வங்கதேச யு-19 அணியினர் (x)

இந்திய யு19 அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய வங்கதேசம் யு-19 அணி, 49.1 ஓவர்களில் 198 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் அருமையாக பந்துவீசினர்.

இருப்பினும், 199 ரன்கள் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் இந்தியா தோற்றது. இந்திய அணி 35.2 ஓவர்களில் 139 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து சுருண்டது.

வங்கதேச அணி 2வது முறையாக தொடர்ச்சியாக இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடந்த ஆண்டும் ஜெயித்து இருந்தது.

2024 ACC அண்டர்-19 ஆசியக் கோப்பை ACC அண்டர்-19 ஆசியக் கோப்பையின் பதினொன்றாவது எடிஷன் ஆகும், இது 19 வயதுக்குட்பட்ட எட்டு அணிகள் பங்கேற்கும் 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியாகும். இது 29 நவம்பர் முதல் 8 டிசம்பர் 2024 வரை நடந்தது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர்களான ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை மற்றும் தகுதிச் சுற்றில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அணிகளான ஜப்பான், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை இந்தப் போட்டியில் பங்கேற்றன. இந்தப் போட்டி துபாய், ஷார்ஜாவில் நடந்தது. ஃபைனல் போட்டி துபாயில் நடந்தது.

சீனியர் இந்திய அணியும் தோல்வி

முன்னதாக, பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பகலிரவு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

இரண்டாவது இன்னிங்சில் 175 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி, ஆஸி., வெற்றி பெற 19 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதையடுத்து, 2வது இன்னிங்ஸில் ஆடிய ஆஸி., 3.2 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. நாதன், கவாஜா இருவரும் இலக்கை எட்ட உதவினர். இதையடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தது ஆஸி.,

பார்டர்-கவாஸ்கர் 2வது டெஸ்ட்

பார்டர்-கவாஸ்கர் 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 175 ரன்களில் ஆல்-அவுட் ஆனது இந்தியா.

ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களை எடுத்தது. இந்தியா 18 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. 19 ரன்கள் எடுத்தால் ஆஸி., இரண்டாவது டெஸ்டில் ஜெயிக்கும் என இருந்தது. எளிய ஸ்கோர் என்பதால் எளிதில் இந்த இலக்கை ஆஸி., எட்டி விட்டது. பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் பகலிரவு டெஸ்ட் போட்டியாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் அசுர வேகத்தில் சரிந்தது. முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும், கே.எல். ராகுல் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில், விராட் கோலியும் சோபிக்கத் தவறினர். ரிஷப் பண்ட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் ரெட்டி 42 ரன்கள் விளாசினார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.