ஆசியக் கோப்பை 2023 போட்டி, 16-வது எடிஷன் ஆகும். இந்த முறை இலங்கையும் பாகிஸ்தானும் இணைந்து நடத்துகின்றன. இந்த முறை 50 ஓவர் வடிவில் நடத்தப்படும் இப்போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. அந்த அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. ஆட்டங்கள் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் நகரங்களில் நடைபெறவுள்ளன.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர்களான ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய ஐந்து நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. 2023 ஏ.சி.சி பிரீமியர் கோப்பையை வென்றதன் மூலம் தகுதி பெற்ற நேபாளமும் இந்த அணிகளுடன் கோதாவில் குதிக்கிறது. முதலில், இந்தப் போட்டி 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக, 2023 ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு டி20 வடிவில் நடத்தப்பட்டது. 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப பிசிசிஐ ஆரம்பம் முதலே மறுப்பு தெரிவித்துவந்தது. இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பதட்டமான அரசியல் உறவுகள் காரணமாக கிரிக்கெட் உறவில் விரிசல் விழுந்துள்ளது. எனினும், ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதி வருகின்றன. தொடக்கம் முதலே 2023 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் போட்டி எப்படி, எங்கே நடத்தப்படும் என்ற குழப்பம் தொடர்ச்சியாக நீடித்து வந்தது.
பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி வர மறுத்தால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாட இந்தியாவுக்கு நாங்கள் வர மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் முரண்டு பிடித்தது. இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் இந்தியா, ஐசிசி 50 ஓவர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தனது முடிவில் இருந்து மாறவில்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு, ஒரு வழியாக 'பொது இடத்தில் போட்டி நடத்த நாங்கள் ரெடி' என பாகிஸ்தான் பச்சை கொடி காட்டியது. முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தை பொதுவான இடமாக வைத்துக் கொள்ளலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) யோசனை கூறியது. ஆனால், செப்டம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சூரியன் சுட்டெரிக்கும் என வங்கதேச அணி தெரிவித்தது. இதன்பிறகு, எங்கே நடத்துவது என்பது தொடர்பாக தொடர்ந்து இழுபறி தொடர்ச்சியாக நீடித்து வந்தது. மறுபக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் மாறியபடி இருந்தனர்.
பின்னர், இலங்கை அணியுடன் இணைந்து பாகிஸ்தான் இப்போட்டியை நடத்த முன்வந்தது.
ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 19ம் தேதி வெளியானது. தொடக்க ஆட்டம் பாகிஸ்தானின் முல்தான் நகரிலும், இறுதி ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரிலும் நடைபெறவுள்ளது.
மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில், 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. குரூப் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எந்த இடத்தில் இருந்தாலும், பாகிஸ்தான் 'ஏ1', இந்தியா 'ஏ2' இடத்தையே சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஏதேனும் ஒரு அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறத் தவறும் பட்சத்தில் அந்த இடத்தை நேபாளம் பிடிக்கும். இதேபோல், குரூப் 2 பிரிவில் இலங்கை பி1, வங்கதேசம் பி2 இடங்களிலேயே இருக்கும். அவற்றில் ஏதேனும் ஒரு அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறாமல் போனால் ஆப்கானிஸ்தான் அந்த இடத்துக்கு வரும்.
ஆசியக் கோப்பையின் (Asia Cup) முதல் எடிஷன் 1984 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் ரவுண்ட் ராபின் போட்டியாக இந்தப் போட்டி நடைபெற்றது.முதல் போட்டி பாகிஸ்தானுக்கும் புதிய ஐசிசி உறுப்பினரான இலங்கைக்கும் இடையே நடந்தது. முதல் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனது. இலங்கை, பாகிஸ்தானை வீழ்த்தி ஒரு வெற்றியுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தான் தனது இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெறாமல் நாடு திரும்பியது. அதைத் தொடர்ந்து, 1986-இல் நடந்த ஆட்டத்தில் இலங்கை சாம்பியன் ஆனது. பின்னர், 1988, 1990, 1995 என தொடர்ச்சியாக இந்தியா வெற்றி பெற்றது. 1997-இல் இலங்கையும், 2000-இல் பாகிஸ்தானும் சாம்பியன் ஆனது. 2004, 2008 ஆகிய ஆண்டுகளில் இலங்கை தொடர்ச்சியாக சாம்பியன் ஆனது. பின்னர் 2010- இல் இந்தியாவும், 2012-இல் பாகிஸ்தான் 2-வது முறையாகவும் சாம்பியன் ஆனது. 2014-இல் இலங்கையும், 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவும் ஜெயித்தது. 2016-இல் டி-20 வடிவில் ஆசிய கோப்பை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. டி20 வடிவில் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை. அதில் இந்தியா தான் ஜெயித்தது. 2022-இல் டி-20 வடிவில் மீண்டும் நடத்தப்பட்ட போட்டியில் இலங்கை சாம்பியன் ஆனது. அந்த வகையில், நடப்பு சாம்பியனாக இலங்கை உள்ளது. அதிகபட்சமாக இதுவரை இந்தியா 7 தடவையும், இலங்கை 6 முறையும் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை கைகளில் ஏந்தியிருக்கிறது. இது டி20, ஒரு நாள் இரண்டு வடிவங்களையும் சேர்த்து என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மொத்தம் 2 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது. அந்த அணி கடைசியாக 2012இல் தான் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது. 1990-91 காலகட்டத்தில் நான்காவது எடிஷன் இந்தியாவில் நடைபெற்றது. இந்தியாவுடனான அரசியல் உறவில் விரிசல் ஏற்பட்டதால் பாகிஸ்தான் போட்டியிலிருந்து விலகியது. இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆசியக் கோப்பையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. 1993-ஆம் ஆண்டில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் உறவுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. ஐந்தாவது எடிஷன், 1995-ஆம் ஆண்டில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜாவில் நடந்தது. முதல் சுற்றுக்குப் பிறகு மூன்று அணிகளும் சம புள்ளிகளைப் பெற்றிருந்ததால், பாகிஸ்தானை விட சிறந்த ரன்-ரேட் காரணமாக இந்தியாவும் இலங்கையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆறாவது எடிஷன் 1997-இல் இலங்கையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை தனது இரண்டாவது ஆசியக் கோப்பையை வென்றது. ஐக்கிய அரபு அமீரகம் (1984, 1995, 2018, 2022) இலங்கை (1986, 1997, 2004, 2010, 2023), வங்கதேசம் (1988, 2000, 2012, 2014, 2016), இந்தியா (1990/91), பாகிஸ்தான் (2008, 2023).
பிரதான போட்டியில் எந்தெந்த அணிகள் எப்போது ஆசிய கோப்பையில் அறிமுகமானது என பார்ப்போம்.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை 1984-ஆம் ஆண்டும், வங்கதேசம் 1986-ஆம் ஆண்டும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங் காங் ஆகிய அணிகள் 2004-ஆம் ஆண்டிலும், ஆப்கானிஸ்தான் 2014-ஆம் ஆண்டிலும், நேபாளம் 2023-ஆம் ஆண்டிலும் அறிமுகமாகின. 1983-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி டெல்லியில் ஆசிய கிரிக்கெட் மாநாடாக (Asian Cricket Conference) ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கப்பட்டது. இதன் ஒரிஜினல் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்கள் என்னவென்றால், ஆசிய கண்டத்தில் கிரிக்கெட்டை ஒழுங்கமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவை ஆகும். வங்கதேசம், இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகியவை ஏசிசி-யின் நிறுவன உறுப்பினர்களாகும். பின்னர் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்தது. முதலில் ஹாங்காங், பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அதைத் தொடர்ந்து, 1990-ஆம் ஆண்டில் நேபாளம் உறுப்பினர்களாகின. 2004- ஆம் ஆண்டில் ஏ.சி.சி-யில் சீனா இணைந்தது. இந்த ஆண்டு (2023) நேபாளம் இணைந்துள்ளது. 1993-ஆம் ஆண்டில் ஆசிய கிரிக்கெட் மாநாடு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலாக (Asian Cricket Council) மாறியது. ஏ.சி.சி-யில் முழு மற்றும் அசோசியேட் என இரண்டு வகை உறுப்பினர்கள் உள்ளனர். ஐ.சி.சி அசோசியேட் நாடுகள் ஹாங்காங், குவைத், மலேசியா, நேபாளம், சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை ஆகும். டெஸ்ட் விளையாடும் நாடுகள், முழு நாடுகள் ஆகும்.
விளையாட்டை விரிவுபடுத்துவதும், அதை தைரியமாக புதிய பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்வதும், அதன் மூலம் விளையாட்டை உண்மையிலேயே உலகமயமாக்குவதும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அமைப்பின் உறுதியான கொள்கையாகும். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உண்மையான நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக வளர்ச்சி நடவடிக்கைகள் போட்டிகளுடன் கைகோர்த்து செல்கின்றன. ஃபிஜி, ஜப்பான், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினர்களாக இருந்து இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இருப்பினும், அந்தப் பிராந்தியத்தில் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கியதைத் தொடர்ந்து, இந்த நாடுகள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் மெம்பர்ஷிப்பை விட்டுக் கொடுத்தன.
1999-ஆம் ஆண்டு டிசம்பர் வரை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அனைத்து நிர்வாக பதவிகளும் கவுரவப் பதவிகளாக இருந்தன. கடந்த, 1999-ஆம் ஆண்டு முதல், செயலர், பொருளாளர் பதவி வகிப்பவர்கள் சம்பளம் பெற்று வருகின்றனர். 2003-ஆம் ஆண்டு வரை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமையகம் அதன் தலைவர் மற்றும் செயலாளரின் சொந்த நாடாக இருக்கும் என சுழற்சி முறையில் இருந்து வந்தது. 2003-ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் நிரந்தர தலைமையகமாக மலேசியாவின் கோலாலம்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போதைய ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா பதவி வகித்து வருகிறார். இவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கவுரவச் செயலாரகாவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2022-23 ஆசியக் கோப்பைக்கான ஒளிபரப்பு உரிமையை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், பாகிஸ்தானில் உள்ள பிடிவி மற்றும் டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களும் பெற்றுள்ளன.
2023 ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் எங்கு நடைபெறும்?
2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
2023 ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டை எந்த நாடு நடத்துகிறது?
2023-ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன.
2023 ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லுமா?
ஆசியக் கோப்பை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக இந்தியா திகழ்கிறது. ஏழு முறை (T20, ODI) சாம்பியன் ஆகியிருக்கிறது இந்தியா. எனவே மீண்டும் கோப்பையை வெல்ல வலுவான போட்டியாளராக களத்தில் உள்ளது நமது இந்திய கிரிக்கெட் அணி
ஆசிய கோப்பை இந்த முறை ஒருநாள் (50 ஓவர்) வடிவில் நடக்குமா?
ஆம், ஐசிசி உலகக் கோப்பை இந்த ஆண்டு நடைபெற உள்ளது. எனவே, அத்தகைய சூழ்நிலையில், ஆசியக் கோப்பை ஒருநாள் வடிவத்தில் மட்டுமே இருக்கும். ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் டி20 உலகக் கோப்பை ஆண்டுகளில் மட்டுமே நடத்தப்படுகிறது.