Vethathiri Maharishi Memorial Day: பாமர மக்களின் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி!
Vethathiri Maharishi: தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும் இளம் வயது முதலே அறிந்து கொண்டார்
சென்னையை அடுத்து உள்ள கூடுவாஞ்சேரியில் 1911ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ம் தேதி பிறந்தார் வேதாத்திரி மகரிஷி.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆன்மீகத் தலைவர், உலக அமைதி ஆர்வலர், விஞ்ஞானி, தத்துவவாதி, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவரான இவரது நினைவு நாள் இன்று (மார்ச் 28).
திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், இராமலிங்கப் பெருமான் இவர்தம் மரபு நெறி நின்று ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயப் பணி ஆற்றி வந்தவர்.
நெசவுத் தொழில் செய்யும் வரதப்ப முதலியார், முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார் வேதாத்திரி மகரிஷி.
தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும் இளம் வயது முதலே அறிந்து கொண்டார்.
இவரது குடும்பச்சூழலில் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்பத் தொழிலான தறி நெய்தலைச் செய்யத் தொடங்கினார்.
18ஆவது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளைக் கற்றுத் தேர்ந்தார்.
தனது வாழ்க்கையின் குறிக்கோளாகிய முழுமையை உணரும் நோக்கத்தால் உந்தப்பட்டு; சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.
மேலும் இரண்டாவது உலகப் போரின் போது முதலுதவிப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார்.
பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்று, தனது சுய முயற்சியினால் பல்லாயிரம் நபர்களுக்கு வேலை அளிக்கக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய நெசவுத் தொழிற்சாலையை உருவாக்கினார்.
அந்தத் தொழில் தோல்வியில் முடியவே மனதைத் தளரவிடாது அரிசி வியாபாரம் போன்ற பல்வேறு தொழில்களை செய்தார்.
வறுமை என்றால் என்ன? கடவுள் என்பது எது? அதை ஏன் காண முடியவில்லை? மனித வாழ்க்கையிலேயே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன போன்ற கேள்விகள் அவ்வப்போது அவருக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன.
இதுதொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்.
தனது 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார்.
அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும்.
1957ல் மகரிஷி 'உலக சமாதானம்' என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார்.
இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் மனித வாழ்க்கையைப் பற்றியும் தவநிலையில் தான் பெற்ற கருத்துக்களைப் பல கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் புத்தக வடிவங்களில் இந்த உலகுக்கு மகரிஷி அவர்கள் அளித்துள்ளார்கள்.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த தமிழ்ப்பாடல்களை இயற்றியிருக்கிறார்.
பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் தனது தத்துவங்களை எடுத்துரைத்தார். எல்லா மதங்களின் சாரம் ஒன்றே என்பதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் வலியுறுத்துகிறார்.
பல்வேறு நாடுகளிலும் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.
இவர் 1958ம் ஆண்டு உலக சமுதாய சேவா சங்கம் இன்று பல நாடுகளில் இயங்கி வருகிறது.
வேதாத்திரி மகரிஷி தனது 95வது வயதில் 2006ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி கோயம்புத்தூரில் மறைந்தார்.
இந்திய அஞ்சல் துறையில் இவரது உருவம் பதித்த 5 ரூபாய் அஞ்சல் தலையை வெளியிட்டு கவுரவித்துள்ளது.
பாமர மக்களின் தத்துவ ஞானி (Common Man's Philosopher), அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி என இவர் அழைக்கப்படுகிறார்.
டாபிக்ஸ்