Saneeswara Bagavan: சனீஸ்வர பகவானால் கிடைக்கும் நற்பலன்கள்
சனீஸ்வர பகவானால் கிடைக்கும் நற்பலன்கள் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.
ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படும் சனி பகவான் ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், அரசியல்வாதி, தொழிலதிபர், பிச்சையெடுப்போர் என பாகுபாடு பார்ப்பதில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்
இவரைப் பொருத்தமட்டில் எல்லாரும் சமம். அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களை வழங்கி வருகிறார்.
வாரி வழங்குவதில் இவருக்கு இணை இவரே. அதேபோல் கஷ்ட நஷ்டங்களை கொடுப்பதிலும் தயவு தாட்சயண்யமின்றி செயல்படுகிறார். அதனால்தான் சனி போல கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை என்று மூத்தவர்கள் கூறுவர்.
சனி கிரகமும் யோகங்களும்
யோகம் என்பது கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் நற்பலன்களைக் குறிக்கின்றது. யோகம், அதிர்ஷ்டம், திரவிய லாபம், வெற்றி, நல்ல கல்வி, குடும்பத்தில் மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்கின்றது. சனி கிரகத்தினால் பல யோகங்கள் ஏற்படுகின்றன. சனி கெட்ட கிரகமே அல்ல. சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்பது ஐதீகம்.
சக யோகம்
சனி 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்கள் ஏதாவது ஒன்றில் அமர்ந்து அது சனியுடைய சொந்த ஆட்சியான மகரம், கும்பம் ராசியாகவும் அமைந்துவிட்டால் இந்த யோகம் ஏற்படும். சனி உச்ச நிலைமையடைந்தாலும் இந்த யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தை உடையவர் பல வேலையாட்களை அடக்கி ஆள்பவராகவும், ஒரு பெரிய ஸ்தாபனத்துக்குத் தலைவராகவும் இருப்பர்.
ரவி யோகம்
சூரியன் லக்னத்திலிருந்து பத்தாவது வீட்டிலும், பத்தாமிடத்துக்கு அதிபதி சனி கிரகத்துடன் இணைந்தும் மூன்றாவது வீட்டில் காணப்பட்டால் இந்த யோகம் உருவாகிறது. ரவி யோகத்தை உடையவர் அகன்ற தாமரை மலரைப் போன்று கண்கள் உடையவராக இருப்பர்.
தன யோகம்
சனி தனது சொந்த வீட்டில் அமர்ந்து அது லக்னத்துக்கு எட்டாவது வீடாக அமைய வேண்டும். செவ்வாயும் புதனும் இணைந்து லாப ஸ்தானமான பதினோராம் இடத்தில் இருக்க வேண்டும். இந்த அமைப்பை உடையவர்கள் மிகவும் யோகம் உடையவர்கள். அதிக அளவில் தங்கம் சம்பாத்தித்து தனவந்தராக ஆகும் யோகம் கொண்டவர்.
பஹிபுத்ர யோகம்
ராகு நவாம்சத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடத்தில் அமர்ந்து அந்த இடம் சனி கிரகத்துக்குச் சொந்தமான நவாம் வீடாக அமைந்தால் இந்த யோகம் ஏற்படுகின்றது. இந்த யோகத்தை உடையவருக்கு பல குழந்தைகள் உண்டாகும். ராகு எப்போதும் சனியுடைய பலத்தைத்தான் கொடுக்கும்.